முள்ளங்கியே பிடிக்காதா? இதோ அதை வைத்து ருசியான சட்னி செய்ங்க! இனி வேண்டாம்னே சொல்ல மாட்டீங்க!
முள்ளங்கியை வைத்து சட்னி செய்வது எப்படி என்று பாருங்கள்.
முள்ளங்கி என்றாலே சிலருக்குப் பிடிக்காது. சிலர் முள்ளங்கி பிரியர்களாக இருப்பார்கள். முள்ளங்கியில் பெரும்பாலும் சாம்பார்தான் வைப்பார்கள். ஆனால் அதில் சிலர் பொடிமாஸ் செய்வார்கள். தண்ணீர் சத்துக்கள் அதிகம் நிறைந்த காய்கறி முள்ளங்கி. இது உங்கள் உடலில் உள்ள கழிவுகளை நீக்குகிறது. எனவே வாரத்தில் இரண்டு முறையாவது சேர்த்துக்கொள்ள வேண்டிய உணவுகளின் பட்டியலில் முள்ளங்கி உள்ளது. ஆனால் உங்கள் வீட்டில் குழந்தைகள் உள்ளிட்ட சிலர் முள்ளங்கியை வேண்டாம் என்று வெறுப்பவர்களாக இருப்பார்கள். ஆனால் அவர்களையும் முள்ளங்கியை விரும்பி சாப்பிட வைக்கும் வழி தெரியுமா? அதுதான் முள்ளங்கி துவையல் முள்ளங்கியே பிடிக்காது என்பவர்கள் கூட இப்படி ஒரு சட்னி அரைத்துக் கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள்.
தேவையான பொருட்கள்
எண்ணெய் – 2 ஸ்பூன்
கடலை பருப்பு – ஒரு ஸ்பூன்
உளுந்து – ஒரு ஸ்பூன்
சீரகம் – ஒரு ஸ்பூன்
வர மல்லி – அரை ஸ்பூன்
வர மிளகாய் – 4 (உங்கள் கார அளவுக்கு ஏற்ப அதிகம் அல்லது குறைவாக எடுத்துக்கொள்ளலாம்)
பூண்டு – 5 பல்
சின்ன வெங்காயம் – 10
முள்ளங்கி – கால் கிலோ
கறிவேப்பிலை – ஒரு கொத்து
மல்லித்தழை – சிறிதளவு
உப்பு – தேவையான அளவு
தாளிக்க தேவையான பொருட்கள்
எண்ணெய் – ஒரு ஸ்பூன்
கடுகு – கால் ஸ்பூன்
உளுந்து – கால் ஸ்பூன்
கறிவேப்பிலை – ஒரு கொத்து
வரமிளகாய் – 1 (உடைத்தது)
செய்முறை
கடாயில் எண்ணெய் சேர்த்து கடலை பருப்பு, உளுந்து, சீரகம், வர மல்லி, வர மிளகாய் என அனைத்தையும் சேர்த்து நன்றாக பொன்னிறமாகும் வரை வறுத்துக்கொள்ளவேண்டும்.
இதை ஆறியவுடன் ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து பொடித்துக்கொள்ளவேண்டும். அதை அப்படியே ஜாரில் வைத்துவிடவேண்டும்.
ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து அதில் பூண்டு பற்கள், சின்ன வெங்காயம், முள்ளங்கி, கறிவேப்பிலை, மல்லித்தழை சேர்த்து நன்றாக வதக்கவேண்டும். இதையும் மிக்ஸியில் பொடித்து வைத்துள்ள வற்றுடன் ஆறவைத்து சேர்த்து அரைத்து எடுத்துக்கொள்ளவேண்டும். தேவையான அளவு உப்பு சேர்த்து அரைத்து எடுத்துக்கொள்ளவேண்டும்.
ஒரு தாளிப்பு கரண்டியில் எண்ணெய் சேர்த்து, அதில் கடுகு, உளுந்து, கறிவேப்பிலை, வர மிளகாய் உரைத்து சேர்த்து தாளித்து இந்த துவையலில் சேர்த்தால், சூப்பர் சுவையான முள்ளங்கி துவையல் தயார்.
இதை சூடான சாதத்தில் நெய்யுடன் சேர்த்து பிசைத்து சாப்பிட சுவை அள்ளும். இதற்கு தொட்டுக்கொள்ள அப்பளம் மட்டுமே கூட போதுமானது. இதை நீங்கள் இட்லி, தோசை, பூரி, சப்பாத்திக்கும் தொட்டுக்கொண்டு சாப்பிடலாம். பொங்கல், இட்லி, உப்புமா, ஆப்பத்துக்கும் நன்றாக இருக்கும். இதை முள்ளங்கியே பிடிக்காது என்பவர்கள் கூட விரும்பி சாப்பிடுவார்கள்.
இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பும் சுவையில் இருக்கும். ஒருமுறை ருசித்தால் மீண்டும், மீண்டும் சாப்பிடவேண்டும் என்று எண்ணுவீர்கள். எனவே இதை கட்டாயம் ஒருமுறை முயற்சித்துப் பாருங்கள். இதில் ஒரே ஒரு சிறிய துண்டு புளியும் சேர்த்துக்கொள்ளலாம். அது வித்யாசமான சுவையைத்தரும். புளி சேர்க்காமலும் நன்றாக இருக்கும்.
இதுபோன்ற எண்ணற்ற தகவல்கள், ஜோக்குள், வித்யாசமான ரெசிபிக்கள், குழந்தைகளின் பெயர்கள், தோட்டக்கலை பராமரிப்பு குறிப்புகள், பண்டிகைக் கால சிறப்பு உணவுகள், பழக்கங்கள், மரபுகள், குழந்தைகளுக்கு அர்த்தமுள்ள பெயர்கள், அழகு குறிப்புகள் மற்றும் ஆரோக்கிய குறிப்புக்கள் தேர்ந்தெடுத்து வழங்கப்பட்டு வருகிறது. எனவே தகவல்களை தொடர்ந்து பெற்று ஆரோக்கியமான வாழ்வு வாழ வாழ்த்துக்கள்.
தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்