செட்டிநாடு தக்காளி குருமா : தக்காளி குருமா; இது செட்டிநாடு ஸ்பெஷல் ரெசிபி! வாயில் எச்சில் ஊறவைக்கும் சுவை கொண்டது!
செட்டிநாடு தக்காளி குருமா : செட்டிநாடு ஸ்பெஷல் தக்காளி குருமா ரெசிபியை செய்வது எப்படி என்று பாருங்கள். டிஃபனுக்கு ஏற்ற சைட் டிஷ் இது. செய்வது எளிது.

தக்காளியில் எதைச் செய்தாலும் அது சுவையாக இருக்கும். அதிலும் குறிப்பாக இந்த செட்டிநாடு தக்காளி குருமா அதிக சுவையானது மட்டுமின்றி செய்வதும் எளிது. உங்கள் வீட்டில் உள்ள அனைவருக்கும் பிடிக்கும். இந்த செட்டிநாடு ஸ்பெஷல் தக்காளி குருமா டிஃபனுக்கு ஏற்றது. சாதத்துடனும் சேர்த்து சாப்பிடலாம், என்றாலும் இட்லி, தோசை, ஆப்பம், உப்புமா, பொங்கல் என டிஃபனுடன் சேர்த்து சாப்பிடும்போது சுவை அள்ளும்.
தேவையான பொருள்கள்
• தக்காளி – 10 (பொடியாக நறுக்கவேண்டும்)
• பச்சை மிளகாய் – 2
• வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)
• முந்திரி – 8
• பூண்டு – 8 பல்
• சோம்பு – அரை ஸ்பூன்
• தேங்காய்த் துருவல் – ஒரு கப்
• கசகசா – ஒரு ஸ்பூன்
• பட்டை – 2 இன்ச்
• கடுகு – ஒரு ஸ்பூன்
• எண்ணெய் – ஒரு ஸ்பூன்
• உப்பு – தேவையான அளவு
• கறிவேப்பிலை – ஒரு கொத்து
• மல்லித்தழை – சிறிதளவு
செய்முறை
1. ஒரு மிக்ஸி ஜாரில் துருவிய தேங்காய், கசகசா, முந்திரி, பட்டை, சோம்பு, பச்சை மிளகாய், பூண்டு, நறுக்கிய வெங்காயத்தில் ஒரு ஸ்பூன் மட்டும் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மிருதுவாக அரைத்துக்கொள்ளவேண்டும்.
2. கடாயில் எண்ணெய்விட்டு, சூடானவுடன், கடுகு சேர்த்து தாளிக்கவேண்டும். அடுத்து கறிவேப்பிலை மற்றும் எஞ்சிய வெங்காயத்தை சேர்த்து நல்ல பொன்னிறமாகும் வரை வதக்கவேண்டும்.
3. அது நன்றாக வதங்கியவுடன், நறுக்கிய தக்காளியைச் சேர்த்து நன்றாக வதக்கவேண்டும்.
4. வெங்காயம், தக்காளி நன்றாக வதங்கியதும் அரைத்து வைத்துள்ள விழுதை சேர்த்து மேலும் சிறிது தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவேண்டும்.
5. கலவை நன்றாக கொதித்ததவுடன், உப்பு சேர்த்து கிளறிவிட்டு, மல்லித்தழை தூவி இறக்கவேண்டும். சுவையான செட்டிநாடு தக்காளி குருமா தயார்.
இதை இட்லி தோசையுடன் தொட்டுக்கொண்டு சாப்பிட சுவை அள்ளும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். அனைவருக்கும் பிடித்தமான இந்த செட்டிநாடு தக்காளி குருமாவை ஒருமுறை ருசித்தால் நீங்கள் மீண்டும் வேண்டும் என்று நினைப்பீர்கள். இந்த தக்காளி குருமா அத்தனை சுவையானது.
