Chennai Heat : சென்னையின் வெப்பம் அதிகரிக்க இதுதான் காரணமா? – ஆய்வில் அதிர்ச்சி தகவல்!
Chennai Heat : சென்னையில் எங்கெல்லாம் ஆறுகள், ஏரிகள், காடுகள், சதுப்பு நிலங்கள் இருந்ததோ, அங்கெல்லாம் வெப்பம் குறைந்தே காணப்பட்டது.

சென்னை வெப்பம் அதிகரிக்க, அதன் பசுமைப்பரப்பு (மரங்கள் மற்றும் தாவரங்கள்) குறைந்ததே காரணம் என ஆய்வில் தகவல் வெளியாகியுள்ளது.
2013-22 இடைப்பட்ட காலத்தில் சென்னை பெருநகரப் பரப்பில் (Chennai Metropolitan Area-CMA) பசுமைப்பரப்பு (மரங்கள் மற்றும் தாவரங்கள்) 13.33 சதவீதம் குறைந்துள்ளது.
அதாவது, மொத்தமுள்ள 1,189 சதுர கி.மீ. பரப்பில், 158.54 சதுர கி.மீ. பசுமைப்பரப்பு குறைந்துள்ளது.
School of Planning and Architecture, Vijayawada, ஜனவரி 2024ல், "Impact of Urban Vegetation Loss on Urban Heat Islands: A case study of Chennai Metropolitan Area" என்ற தலைப்பில், "Indian Journal of Science and Technology" என்ற பத்திரிக்கையில் வெளியிட்ட கட்டுரையில், 2013-22 இடைப்பட்ட காலத்தில், சென்னை நில மேற்பரப்பு வெப்பம் (Land Surface Temperature-LST), 6.53°C உயர்ந்துள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
சென்னையில் நகர்புறமாதல் (Urbanisation) அதிகமானதால், அதன் வடக்கு, தெற்கு, மத்திய பகுதிகளில் பசுமைப்பரப்பு வெகுவாக குறைந்துள்ளது. மேற்குப்பகுதியில் பசுமைப்பரப்பின் குறைவு, பிற பகுதிகளைக் காட்டிலும் சற்று பரவாயில்லை.
2013ல் சென்னை மேற்பரப்பின் அதிகபட்ச வெப்பம், 37°C எனவும், குறைந்தபட்ச வெப்பம் 23.63°C எனவும் இருந்தது. 2022ல் அதிகபட்ச மேற்பரப்பு வெப்பம் 43.53°C எனவும், குறைந்தபட்ச வெப்பம் 31.66°C எனவும் பதிவாகியுள்ளது. எங்ககெல்லாம் பசுமைப்பரப்பு அதிகம் இருந்ததோ, அங்கெல்லாம் மேற்பரப்பு வெப்பம் குறைந்து காணப்பட்டது.
சென்னையில் எங்கெல்லாம் ஆறுகள், ஏரிகள், காடுகள், சதுப்பு நிலங்கள் இருந்ததோ, அங்கெல்லாம் வெப்பம் குறைந்தே காணப்பட்டது.
2013ல் சென்னையில் குறைந்தபட்ச வெப்பம், 23.63°C முதல் 26°C இடைப்பட்ட நிலையில் இருந்தது.
ஆனால், 2022ல், சென்னை மேற்பரப்பு குறைந்தபட்ச வெப்பம் 31.66°C முதல் 33°C என அதிகரித்து காணப்பட்டது. எனவே, சென்னையில் வெப்பம் தணிந்த பகுதிகளும் குறைந்து வருவது வேதனையே.
Green Tamilnadu Mission இயக்குநர் தீபக் ஸ்ரீவஸ்தவா "சென்னையில் முறையான நிலங்கள், சாலையோரங்கள் கண்டறியப்பட்டு, ஓராண்டுக்குள் ஒரு லட்சம் மரங்களை சென்னை பெருநகரப் பகுதிகளில் நட்டு, பசுமைப்பரப்பை அதிகரித்து, வெப்பத்தை தணிக்கும் நடவடிக்கைகளில் இறங்குவோம்" எனக் கூறினாலும், பொதுவாக நடப்படும் மரங்களில் 10 சதவீதம் மட்டுமே வளர்ந்து பெரிய மரங்களாவதைக் கணக்கில்கொண்டால், சென்னையின் வெப்பம் விரைவில் தணியுமா? என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.
சென்னையின் ஆய்வு, Normalised Difference Vegetation Index (NDVI) - (a remote sensing method that uses light) மூலம் மேற்கொள்ளப்பட்டது.
சென்னையின் வனப்பரப்பு 2011ல் 4 சதவீதம் என இருந்தது, 2021 வன அறிக்கையின் படி 5 சதவீதமாக உயர்ந்துள்ளது என்றாலும், விதிகளின்படி வனப்பரப்பு 33 சதவீதமாக இருக்க வேண்டும் என்பதிலிருந்து, நாம் இலக்கை தமிழகத்தில் அடைய நெடுதூரம் பயணிக்க வேண்டியுள்ளது.
சென்னை, பழவேற்காடு பகுதியில், நீர்நிலை என இருக்கும் பகுதி, வருவாய் துறையினரால் சட்டவிரோதமாக பட்டா நிலமாக மாற்றப்பட்டுள்ளது (புல எண்-55) பத்திரிக்கை வாயிலாக வெளிச்சத்திற்கு வந்த பின் வனத்துறை அதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப் போவதாக செய்திகள் வெளிவந்தாலும், நீர் நிலைகளையே பட்டா போட்டு விற்கும் அவலம் தமிழகத்தில் தொடரத்தான் செய்கிறது என்பதே உண்மை.
தேர்தல் சூடு ஒருபுறம் இருக்க, சென்னையின் வெப்பத்தைத் தணிக்க தமிழக அரசு, பசுமைப்பரப்பை அதிகரிக்க உரிய நடவடிக்கைகளை விரைந்து எடுக்க முன்வருமா?
தேர்தலின்போது சென்னையில் பசுமைப்பரப்பு அதிகமிருந்தால், வெப்பம் தணிந்து, வாக்களாக பெருமக்களுக்கு அது பயனுள்ளதாக அமையும்.
நன்றி – மருத்துவர். புகழேந்தி.
