புற்றுநோய் : தாமிரபரணியைத் தொடர்ந்து நொய்யல் நீரிலும் அதிகம் உள்ள புற்றுநோய் காரணிகள் – அதிர்ச்சி ஆய்வு!
புற்றுநோய் : மேற்கு தொடர்ச்சி மலையின் வெள்ளியங்கிரி மலையில் தோன்றி கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களை வளப்படுத்தி காவிரியுடன் கலக்கும் இந்த ஆற்றங்கரையோரங்களில் உள்ள நிலத்தடி நீர் மற்றும் ஆற்று நீர் இரண்டிலுமே எண்ணற்ற ஹெவி மெட்டல்கள் உள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

தாமிரபரணி ஆற்றங்கரையோரங்களில் உள்ள குடிநீர் ஆதாரங்களில் உள்ளதைப்போலவே நொய்யல் ஆற்றங்கரையோரங்களில் உள்ள குடிநீர் ஆதாரங்களிலும் ஹெவி மெட்டல்கள் அதிகம் உள்ளது ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்களுக்கு புற்று நோய்கள் ஏற்படும் ஆபத்துக்கள் அதிகரிக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். அப்பாவி மக்களைக் காக்க அரசு நடவடிக்கை எடுக்குமா என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இதுகுறித்து சுற்றுச்சூழல் ஆர்வலர் மருத்துவர் புகழேந்தி கூறியதாவது
புற்றுநோய் காரணிகள்
கடந்த சில நாட்களுக்கு முன்னர் சுஜிதா, பிரபு மற்றும் சிந்து ஆகிய மூவரும் தாமிர பரணி ஆற்றங்கரையோரங்களில் வசிக்கும் மக்களுக்கு புற்றுநோய் பாதிப்பு அதிகம் உள்ளது என்ற அதிர்ச்சி தகவலை தங்கள் ஆய்வில் வெளியிட்டிருந்தனர். இதே மூவர் குழு தமிழகத்தின் நொய்யல் ஆற்றங்கரையில் நடத்திய ஆய்வில் சில அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. மேற்கு தொடர்ச்சி மலையின் வெள்ளியங்கிரி மலையில் தோன்றி கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களை வளப்படுத்தி காவிரியுடன் கலக்கும் இந்த ஆற்றங்கரையோரங்களில் உள்ள நிலத்தடி நீர் மற்றும் ஆற்று நீர் இரண்டிலுமே காட்மியம், குரோமியம், லெட், நிக்கல், ஆர்சனிக் போன்ற எண்ணற்ற ஹெவி மெட்டல்களும், நைட்ரைட்ஸ், நைட்ரேஸ், பாஸ்பேட் போன்ற புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய வேதிப்பொருட்களும் உள்ளதாக ஆய்வில் தெரிகிறது. இதனால் இங்கும் புற்றுநோய் பாதிப்புகள் அதிகம் உள்ளது. இதனால் இரண்டுக்கும் தொடர்பு இருக்க வாய்ப்புள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். இதற்கு காரணங்களாக ஆற்றில் சாக்கடை கழிவு நீர் கலப்பது, உரம் மற்றும் பூச்சிக்கொல்லிகள் கலப்பது மற்றும் தொழிற்சாலை கழிவுகள் கலப்பது காரணமாக உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிலும் தொழிற்சாலைகள் அதிகம் உள்ள இடங்களில் இந்த பாதிப்பு அதிகம் உள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.