மார்பக புற்றுநோய் : மார்பக புற்றுநோய் தலைநகராகும் சென்னை! கேள்விக்குறியாகும் பெண்கள் ஆரோக்கியம் – மருத்துவர் பேட்டி!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  மார்பக புற்றுநோய் : மார்பக புற்றுநோய் தலைநகராகும் சென்னை! கேள்விக்குறியாகும் பெண்கள் ஆரோக்கியம் – மருத்துவர் பேட்டி!

மார்பக புற்றுநோய் : மார்பக புற்றுநோய் தலைநகராகும் சென்னை! கேள்விக்குறியாகும் பெண்கள் ஆரோக்கியம் – மருத்துவர் பேட்டி!

Priyadarshini R HT Tamil
Updated Mar 09, 2025 09:51 AM IST

மார்பக புற்றுநோய் : சுற்றுச்சூழல் பாதிப்பு அதிகம் உள்ள இடங்களில் மார்பக புற்றுநோய் அதிகம் உள்ளது என்பது ஆய்வுகளில் நிரூபணமாகியுள்ளது. எனவே மாற்றத்தகுந்த காரணிகளான சூழல் காரணிகள் குறித்து நாம் அதிகம் பேச வேண்டிய நிலை உள்ளது.

மார்பக புற்றுநோய் : மார்பக புற்றுநோய் தலைநகராகும் சென்னை! கேள்விக்குறியாகும் பெண் ஆரோக்கியம் – மருத்துவர் பேட்டி!
மார்பக புற்றுநோய் : மார்பக புற்றுநோய் தலைநகராகும் சென்னை! கேள்விக்குறியாகும் பெண் ஆரோக்கியம் – மருத்துவர் பேட்டி!

இதனை நம்மிடம் விரிவாக விளக்குகிறார் கல்பாக்கம் மருத்துவர் புகழேந்தி. அவர் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழுக்கு அளித்த பிரத்யேக பேட்டியின் விவரம் இதோ 

மார்பக புற்றுநோய்க்கான காரணங்கள்

மார்பக புற்றுநோய் 45ஐ கடந்துதான் ஏற்படும். ஆனால் 2023ம் ஆண்டு புள்ளிவிவரப்படி, அது 25 முதல் 40 வயதுக்கு உட்பட்ட பெண்கள் மத்தியில் அது 7 சதவீதம் (கடந்த 15 ஆண்டுகளில்)  அதிகரித்துள்ளது அதிர்ச்சியளிக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் அது 1.5 சதவீதம் அதிகரித்துக்கொண்டே வருகிறது.

• மரபியல் ரீதியாக

• மரபணுக்களில் ஏற்படும் மாற்றங்கள்

• இளம் வயதில் பூப்பெய்துதல்

• தாமதமான மெனோபாஸ்

• உடல் பருமன்

• மது, புகை

• அமர்ந்தே இருக்கக்கூடிய வாழ்க்கை முறை

• தாமதமாக குழந்தை பெறுவது

• தாய்ப்பால் கொடுக்காமல் இருப்பது

என காரணங்கள் இருந்தாலும், இதில் மாற்ற முடியாத காரணங்கள் மற்றும் மாற்ற முடிந்த காரணங்கள் என இரண்டு வகைப்படும். ஜீன்களில் ஏற்படும் மாற்றங்கள், வயது போன்றவை மாற்ற முடியாத காரணங்களாக உள்ளது. ஆனால் மாற்ற தகுந்த காரணிகளாக சூழல் காரணிகள் உள்ளது.

அண்மையில் சூழல் காரணிகள் காரணமாக ஏற்படும் மார்பக புற்றுநோய்கள் அதிகரித்துள்ளது என்று ஆய்வுகள் எச்சரிக்கின்றன. இதற்கான விரிவான ஆய்வு அமெரிக்காவின் நார்த் கரோலினா ஸ்டேட்டில் நடைபெற்று, உறுதிசெய்யப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல் பாதிப்பு அதிகம் உள்ள இடங்களில் மார்பக புற்றுநோய் அதிகம் உள்ளது என்பது ஆய்வுகளில் நிரூபணமாகியுள்ளது. எனவே மாற்றத்தகுந்த காரணிகளான சூழல் காரணிகள் குறித்து நாம் அதிகம் பேச வேண்டிய நிலை உள்ளது.

ஆராய்ச்சி

ஆனால் எம்ஜிஆர் பல்கலைக்கழக அண்மை ஆய்வு, பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் ஏற்படும் காரணமாக மூன்றை மட்டும் குறிப்பிடுகிறது. அது வயது, வறுமை மற்றும் சுகாதார முக்கியத்துவம் இன்மை குறித்து மட்டும் பேசியுள்ளது. ஆனால் இது வருந்தத்தக்கது. ஏனெனில் இதில் மாற்றத்தகுந்த காரணிகள் குறித்து அந்த ஆய்வு பேசவில்லை. ஏனெனில் மாற்றத் தகுந்த காரணிகள் முக்கியமான ஒன்றாக உள்ள நிலையில் அதுகுறித்து பேசாமல் இருப்பது நல்லதல்ல. சூழல் காரணிகளான பிஎம் 2.5 மைக்ரான் நுண்துகள்கள் மார்பக புற்றுநோய் வாய்ப்பை அதிகரிக்கிறது என்பது சமீபத்திய ஆய்வுகளில் உறுதிபடுத்தப்பட்டுள்ளது. அதுதவிர பிளாஸ்டிக் பயன்பாடு, கதிர்வீச்சு, எக்ஸ்ரே, ஸ்கேன் போன்றவை மார்பக புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பை அதிகரிக்கும். ஹார்மோன் சிகிச்சைகளும், காற்றில் மெர்குரி, கேட்மியம், லெட் அதிகம் உள்ள இடங்களிலும் மார்பக புற்று நோய் அதிகம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. டயாக்ஸின் அதிகம் உள்ள இடங்கள், பூச்சிக்கொல்லிகள், உரங்கள் பயன்பாடு அதிகம் உள்ள இடங்களிலும் பாதிப்பு அதிகம் உள்ளது. மேலும் பெண்களுக்கு இரவுப்பணியும் (Night shifts) செயற்கை வெளிச்சம் காரணமாக 5 முதல் 10 ஆண்டுகளில் மார்பக புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பை அதிகப்படுத்துகிறது என்ற அறிவியல் உண்மை நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்?

சென்னையைப் பொருத்தவரை பசுமைக்குடி வாயுக்களின் வெளியீடு என்பது அதிகம் உள்ளது. ஆற்றல் துறையில் இருந்து 75 சதவீதம் இந்த வாயுக்கள் வெளிப்படுகின்றன. இதில் 66 சதவீதம் அனல் மின் நிலையங்களில் இருந்து வெளிவருகிறது. இங்குள்ள அரசு அனல் மின் நிலையங்களில் சல்ஃபர் டயாக்ஸைடை நீக்கக்கூடிய வசதிகளே கிடையாது. குறிப்பாக நைட்ரஜன் ஆக்ஸைடு அதிகம் உள்ள இடங்களில் மார்பக புற்றுநோய் அதிகம் உள்ளது என்பதும் உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

எனவே சுகாதாரமான வாழ்வியல் சூழலை வழங்கவேண்டியது மக்களின் உரிமையாகும். எனவே மாற்ற முடிந்த சூழல் காரணிகளில் நாம் கவனம் செலுத்தவேண்டியது அவசியம். எனவே மகளிர் தின கொண்டாடட்டங்களின் அங்கமாக நாம் அவர்களின் உயிரைக்காக்க நாம் நடவடிக்கை எடுக்கவேண்டும். எனவே அரசு சூழல் காரணிகளைத் தடுக்க அரசு போதிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும். இவ்வாறு மருத்துவர் புகழேந்தி கூறினார்.