Blood Cancer : சி.டி. ஸ்கேன் எடுப்பதால் ரத்தப்புற்றுறோய் ஏற்படும் அபாயம் – ஆய்வில் அதிர்ச்சி தகவல்!
Blood Cancer : சி.டி.ஸ்கேன் எடுப்பதால் (குறைந்தபட்ச கதிர்வீச்சும் 10 – 15 மைக்ரோ கிரே) ரத்தப் புற்றுநோய் ஏற்படும் அபாயம், ஆய்வுகள் முலம் உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

சமீபத்திய ஆய்வில் Nature Medicine, 2023ம் ஆண்டு நவம்பர் 9ம் தேதி (சாரா மெக்டொனால்ட் - இதன் முக்கிய ஆய்வாளர்) சி.டி.ஸ்கேன் எடுப்பதால் மனிதர்கள் உட்பெறும் குறைந்தபட்ச கதிர்வீச்சும் (10-15 மைக்ரோ கிரே அல்லது மில்லி சீவர்ட்ஸ்) ரத்த புற்றுநோய் ஏற்படும் அபாயத்தை உறுதிபடுத்தியுள்ளது.
குறிப்பாக, குழந்தைகள், இளம் பருவத்தினர் (Adolescents), இளம் பெரியவர்கள் (Young adults), கர்ப்பிணிகள், வளரும் குழந்தைகள் குறைந்தபட்ச கதிர்வீச்சின் காரணமாக எழும் ரத்தப் புற்றுநோய் பாதிப்பிற்கு கூடுதலாக ஆளாவார்கள். எனவே, மிகவும் தேவையற்ற சூழல் தவிர சி.டி.ஸ்கேனை தவிர்ப்பது நல்லது.
ஒரு சி.டி.ஸ்கேன் எடுப்பதால் மனிதர்கள் பெறும் கதிர்வீச்சின் அளவு 10 – 20 மில்லி சீவர்ட்ஸ் ஆகும்.
முன்னாள் எய்ம்ஸ் இயக்குநர் ரந்தீப் குலேரியா ஒரு சி.டி.ஸ்கேன் எடுக்கும் போது நாம் 33 எக்ஸ்ரே எடுப்பதால் கிடைக்கும் கதிர்வீச்சின் அளவைப் பெறுகிறோம் என பதிவிட்டுள்ளார். மருத்துவத்துறையில் சி.டி.ஸ்கேன் மூலமே மனிதர்கள் அதிகபட்ச கதிர்வீச்சிற்கு ஆளாகின்றனர்.
ஏற்கனவே International Agency for Research on Cancer-IARC-9 ஐரோப்பிய நாடுகளில் உள்ள 276 மருத்துவமனைகளில் இருந்து 22 வயதிற்கு முன்னர் சி.டி.ஸ்கேன் எடுத்த 9,48,174 பேரை ஆராய்ந்துள்ளனர்.
இறுதி ஆய்வு 9,00,000 நோயாளிகளில் 1.3 மில்லியன் சி.டி.ஸ்கேனை ஆராய்ந்து முடிவுகள் எட்டப்பட்டுள்ளன. இவர்களில் 51 சதவீதம் பேர் 20 வயதிற்கு குறைவானவர்கள். 88.5 சதவீதம் பேர் 30 வயதிற்கு குறைவானவர்கள். முதல் சி.டி.ஸ்கேன் எடுத்து அடுத்த 2 ஆண்டுகள் வரை தொடர் ஆய்வு (Follow-up) செய்யப்பட்டுள்ளது.
அவர்களில் 790 பேருக்கு ரத்தப் புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது. 578 பேருக்கு நிணநீர் புற்றுநோயும் (காட்ஜ்கின்ஸ் மற்றும் நான்காட்ஜ்கின்ஸ் லிம்போ) 203, பேருக்கு மையலாட் லுக்கீமியா (Myeloid leukemia), ஆக்யூட் லுக்கீமியா (Acute leukemia) ஏற்பட்டது கண்டறியப்பட்டுள்ளது. சராசரி தொடர் ஆய்வு 7.8 ஆண்டுகள் வரை மேற்கொள்ளப்பட்டது.
ஆய்வின் முடிவில் சி.டி.ஸ்கேனால் உள்வாங்கப்படும் குறைந்தபட்ச கதிர்வீச்சிலும் ரத்தப் புற்றுநோய் பாதிப்பு (மல்டிபிள் மயலோமா உட்பட) நிச்சயம் இருப்பது உறுதியாகியுள்ளது. (Excess relative risk of 1.96 per 100 microgray).
(எலும்பு மஜ்ஜை உள்வாங்கிய கதிர்வீச்சின் அளவு-Active Bone marrow-ABM-இந்த ஆய்வில் கணக்கில் கொள்ளப்பட்டது)
10,000 குழந்தைகளுக்கு சி.டி.ஸ்கேன் எடுத்தால் (சராசரி கதிர்வீச்சின் அளவு – 8 மைக்ரோ கிரே) 1-2 குழந்தைகள் ரத்தப் புற்றுநோய் பாதிப்பிற்கு ஆளாகின்றனர்.
சில ஆய்வுகளில் 2,000 குழந்தைகள் சி.டி.ஸ்கேன் எடுத்தால் ஒரு குழந்தை புற்றுநோய் பாதிப்பிற்கு ஆளாவதாக செய்தி வெளியாகியுள்ளது.
ஒரு சி.டி.ஸ்கேன் எடுப்பதன் மூலம் புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பு 16 சதவீதம் அதிகமாக இருப்பதும் சில ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.
2013ம் ஆண்டு British Medical Journalலில் John D Mathew குழுவினர் செய்த ஆய்வில் 4.5 மில்லி சீவர்ட்ஸ் சராசரி கதிர்வீச்சு அளவில், 7.5 ஆண்டு தொடர் ஆய்விற்குப்பின், புற்றுநோய் பாதிப்புபு 24 சதவீதம் அதிகமாகியுள்ளது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. தற்போதைய ஆய்வில் Active Bone Marrow dose-10-15 மைக்ரோ கிரேயாக உள்ளது.
இந்த ஆய்வு ஏறக்குறைய ஒரு மில்லியன் பேரிடம் மேற்கொள்ளப்பட்டதால், ஆய்வு முடிவுகளை கணக்கில்கொண்டு இனியாவது சி.டி.ஸ்கேன் எடுக்கும் முன்னர் மக்கள் ரத்தப் புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பு குறித்து விழிப்புடன் இருக்க வேண்டும்.
2003ம் ஆண்டு நான் கல்பாக்கத்தில் மேற்கொண்ட ஆய்வில் மல்டிபிள் மயலோமா எனும் ரத்தப் புற்றுநோய் இறப்பு விகிதம் அணுசக்தி ஊழியர்கள் மற்றும் குடும்பத்தினர் மத்தியில் அதிகம் இருப்பதை (4 மடங்கு) எனது சிறு ஆய்வில் உறுதிபடுத்தி, அமெரிக்கா, ஜப்பான் போன்ற மேலைநாடுகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு கொடுக்க தனிச் சட்டங்கள் இருக்கையில், இந்தியாவில் அத்தகைய சட்டங்கள் இல்லாமல் இருக்கின்றன என எடுத்துரைத்தபோது, அணுசக்தி நிர்வாகம் மற்றும் அடையாறு புற்றுநோய்துறை முன்னாள் தலைவர் சாந்தா, ஊழியர்கள் வாங்கிய கதிர்வீச்சின் அளவு மிகக் குறைந்தது என்றும், அதனால் அந்நோய் வர காரணம் இல்லை என வாதிட்டது அறிவியல் ரீதியாகத் தவறு என தற்போது சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபணம் ஆகியுள்ளது.
தற்போது, இந்த ஆய்வுக் கட்டுரை வெளிவந்த பின்னாவது அணுசக்தி ஊழியர்கள் மற்றும் சுற்றுப்புற மக்கள் நலன் காக்க அரசு மல்டிபிள் மயலோமா நோய் ஏற்பட குறைந்தபட்ச கதிர்வீச்சும் காரணம் என ஏற்றுக்கொண்டு, கதிர்வீச்சால் ஏற்படும் புற்றுநோய் பாதிப்புகளுக்கு இழப்பீடுத் தொகை கொடுக்க தனிச் சட்டங்களை இந்தியாவில் கொண்டு வரவேண்டும்.
மக்களும், மருத்துவர்களும் ஒரு சி.டி.ஸ்கேன் எடுத்தாலும் புற்றுநோய் ஏற்படும் வாய்ப்புள்ளதால் முடிந்தவரை அதை தவிர்த்து கதிர்வீச்சில்லாத எம்ஆர்ஐ போன்ற பரிசோதனைகளை மேற்கொள்ளவேண்டும்.
நன்றி – மருத்துவர் புகழேந்தி.

டாபிக்ஸ்