தமிழ் செய்திகள்  /  Lifestyle  /  Benefits Of Sleeping With A Knee Pillow

முழங்கால்களுக்கு இடையே தலையணை வைத்து படுத்தால் இவ்வளவு நன்மைகளா!

I Jayachandran HT Tamil
Mar 21, 2023 02:01 PM IST

Health Tip: முழங்கால்களுக்கு இடையே தலையணை வைத்து படுத்தால் ஏற்படும் நன்மைகள் குறித்து இங்கு அறிந்து கொள்வோம்.

முழங்கால்களுக்கு இடையே தலையணை வைத்து தூங்குவதால் ஏற்படும் நன்மைகள்
முழங்கால்களுக்கு இடையே தலையணை வைத்து தூங்குவதால் ஏற்படும் நன்மைகள்

ட்ரெண்டிங் செய்திகள்

முழங்கால்களுக்கு இடையே வைத்துத் தூங்குவதற்கென்றே சிறப்பு வடிவத்திலான தலையணைகள் விற்கப்படுகின்றன. ஆனால் அதற்காக வீண் செலவு செய்து அந்தத் தலையணைகளை வாங்கத் தேவையில்லை, சாதாரணமாகப் பயன்படுத்தும் சிறியதொரு தலையணையை முழங்கால்களுக்கு நடுவே வைத்துப் படுத்தாலே போதும். அதுவே சிறந்த நிவாரணங்களைத் தரும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

முழங்கால்களுக்கு இடையே தலையணை வைத்துப் படுப்பதன் மூலம்

முழங்கால் மூட்டு, இடுப்பு, முதுகு தண்டுவடத்தில் வலி போன்ற பிரச்னைகளுக்கு சிறந்த தீர்வை வழங்குகிறது.

சிலருக்கு ஸ்லீப் ஆப்னியா எனப்படும் தூக்கத்தில் மூச்சுத்திணறல் ஏற்படும் பிரச்னை இருக்கலாம். அசந்தால் மரணத்தை ஏற்படுத்திவிடக் கூடிய இந்த பிரச்னையை அவர்கள் தூங்கும்போது சிறிய வழிமுறைகளைக் கையாண்டால் எளிதாக சமாளித்துவிடலாம்.

தூக்கத்தில் மூச்சுப்பிரச்னை உள்ளவர்கள் மல்லாக்கப் படுத்து தூங்கவே கூடாது. மல்லாக்க என்றால் நேரே மேலே பார்த்தபடி என்று அர்த்தம். அவர்கள் ஒருசாய்ந்து படுக்க வேண்டும். இடது புறம் அல்லது வலதுபுறம் என சாய்ந்து படுக்கலாம். அப்படிப் படுக்கும்போது மூச்சுத்திணறல் ஏற்படுவது அரிதாகும்.

இடதுபுறத்தில் ஒருசாய்த்துப் படுத்தால் நெஞ்செரிச்சல் பிரச்னை ஏற்படாது. அது மனித உடலின் வாகு.

ஒருசாய்த்துப் படுத்துப் பழகியவர்களுக்கு ஒரு பிரச்னை உள்ளது. முக்கியமாக வயதானவர்களுக்கும் மூட்டு வலி நோய் பிரச்னை உள்ளவர்களுக்கும் ஒருசாய்த்துப் படுக்கும்போது இரு முழங்கால்களும் ஒன்றின் மேல் ஒன்று அழுத்துவது இயல்பு. இதனால் கீழே உள்ள காலின் முழங்கால் மூட்டுக்கு அழுத்தம் அதிகரித்து மூட்டு வலி ஏற்படலாம் அல்லது ஏற்கெனவே மூட்டுவலி இருப்பவர்களுக்கு வலி, வீக்கம் கடுமையாக மாறலாம்.

இப்படிப்பட்ட பிரச்னை உள்ளவர்களுக்கு முழங்கால்களுக்கு இடையே மெல்லிய தலையணையை வைத்துக் கொண்டுப் படுத்தால் இந்த பிரச்னை ஏற்படாது.

அதேபோல் முதுகு தண்டுவடப் பிரச்னையால் அவதிப்படுபவர்கள், முதுகு வலி உள்ளவர்கள், இதேபோல் தலையணையைப் பயன்படுத்தினால் வலியைத் தவிர்க்கலாம். முதுகு தண்டுவடத்தில் அழுத்தங்கள் ஏற்படுவதை முற்றிலும் தவிர்க்கலாம்.

கர்ப்பிணிகள் நாட்கள் செல்லச் செல்ல வயிறு பெரிதாகும் என்பதால் படுக்கையில் பலவிதமான அசௌகரியங்களுக்கு ஆளாக நேரிடும். அப்படிப்பட்ட நிலையில் அவர்கள் ஒருசாய்த்துப் படுத்தோ அல்லது லேசாக ஒரு தலையணையை அரவணைப்பாகக் கொடுத்து சாய்ந்து தூங்கலாம்.

இருப்பினும் அப்படிப்படுக்கும்போது கர்ப்பிணிகள் தங்கள் முழங்கால்களுக்கு இடையே ஒரு மெல்லிய தலையணையை வைத்துப் படுத்தால் எந்தவித அசௌகரியங்களும் இருக்காது. நிம்மதியாகத் தூங்கி எழலாம்.

சிலருக்கு இடுப்புக்குக் கீழ் கால்களில் தொடர்ச்சியாக வலி இருக்கும். இது முதுகுத் தண்டுவட எலும்புகளில் தேய்மானம் ஏற்பட்டவர்களுக்குத்தான் பெரும்பாலும் இருக்கும். இந்த வலியை இரு வகைகளாக பிரிக்கலாம். ஒன்று இடுப்புக்குக் கீழ் கால்களின் முன்பகுதி, இரண்டாவது இடுப்புக்குக்கீழ் கால்களின் பின்பகுதி. இதில் இரண்டாவது வகையான வலியை சியாட்டிகா வலி என்று மருத்துவர்கள் அழைக்கின்றனர். இது நாள்பட்ட வலியாகும். தண்டுவடத் தேய்மானத்தினால் இந்த சியாட்டிகா வலி ஏற்படுவதால் இதை சரிசெய்வது நீண்டநாள்களாகும் அல்லது மூட்டுஜவ்வு மாற்று சிகிச்சையால் முழு நிவாரணம் பெறலாம்.

இந்த சியாட்டிகா வலி உள்ளவர்கள் ஒருசாய்த்து படுக்க வேண்டும். அப்படிப் படுக்கும்போது முழங்கால்களுக்கு இடையே சிறிய தலையணையை வைத்துக் கொண்டால் வலி அதிகரிக்காது. மெல்ல மெல்ல குறையத் தொடங்கும்.

இடுப்பு வலி, ஹெர்னியேட்டட் டிஸ்க் வலி உள்ளவர்களுக்கும் இப்படிப் படுப்பதால் நல்ல நிவாரணம் கிடைக்கும். நிம்மதியான தூக்கமும் கிடைக்கும்.

கால்களுக்கு இடையே தலையணையை வைத்துப் படுப்பது தொடக்கத்தில் சற்று சிரமமாக இருக்கும். அசந்து தூங்கும்போது தலையணை நழுவி விடலாம். தன்னையறியாமல் சிலர் திரும்பிப் படுப்பார்கள் அப்போது தலையணை விலகி விடலாம். இதனால் முழங்கால்கள் உரசி மூட்டு வலி ஏற்படலாம்.

தொடக்கத்தில் சில நாட்களுக்கு இதை சிந்தனையில் வைத்து தூங்கிப் பழகினால் அதுவே வழக்கமாகிவிடும். நிம்மதியாகத் தூங்கலாம்.

மெலிதான தலையணை என்றால் எந்தளவுக்கு என்ற குழப்பம் ஏற்படலாம். உங்கள் இருகைகளையும் கூப்பி கும்பிடுவதுபோல போஸ் கொடுங்கள். உங்கள் கரங்கள் குவிந்திருக்கும் அகலத்தில் இருந்தால் போதும்.

ஆனால் இப்போதெல்லாம் ரெடிமேடாக எர்கோனாமிக் எனப்படும் சிறப்புத் தலையணைகள் விற்கப்படுகின்றன. அவை சமமான பக்கங்களைக் கொண்டிருக்கும் தலையணையாக இருக்காது. ஒட்டகத்தின் முதுகைப் போல இரு கூம்புகளாக இருக்கும் நடுவில் உள்ள இடைவெளியில் முழங்கால்களை வைத்துக் கொண்டால் தூக்கத்தில் விலகாது.

உங்கள் முழங்கால்கள் மூட்டுகள் உரசாமலும், அழுத்தத்தை ஏற்படுத்தாமலும் முதுகெலும்பு நேராக இருப்பதையும் இந்த வகை தலையணைகள் உறுதி செய்கின்றன.

மூட்டுவலிகளைக் குறைக்க வேண்டும் என்பதற்காகவே அறிவியல்பூர்வமான ஆராய்ச்சிகளுக்குப் பின்னர் வடிவமைக்கப்பட்ட இந்த சிறப்புத் தலையணைகள் இப்போது எல்லா பர்னிச்சர் கடைகளிலும், ஆன்லைனிலும் குறைந்த விலையில் கிடைக்கின்றன. விதவிதமான சிறப்புத் தலையணைகளும் வந்து விட்டன.

முதுகுத்தண்டு சீரான நிலையில் இருக்கும்போதும், வலிகள் இன்றி படுத்திருக்கும்போதும் நம் உடலில் ரத்த ஓட்டம் சீராக இருக்கும்.

நீங்கள் மணிக்கணக்கில் படுத்திருப்பதால் இதுபோன்ற சிறப்புத் தலையணைகள் மிகவும் வசதியாக இருக்கும்.

நிம்மதியான தூக்கம் என்பது மூட்டுவலிகள் ஏற்படாமல் இருப்பது மட்டுமல்ல. மனிதர்களுக்கு தூக்கமின்மையால் ஏற்படக்கூடிய மன உளைச்சலையும் போக்கும். மன அழுத்தங்களைக் குறைத்து ஆழ்ந்த உறக்கத்தையும் பெறலாம்.

எனவே இனி மறக்காமல் முழங்கால்களுக்கு இடையே மெல்லிய தலையணையை வைத்துப் படுத்து உறங்குங்கள்.

WhatsApp channel

டாபிக்ஸ்