சைனஸ் பிரச்னையால் தீராத அவதியா? நிரந்த தீர்வு பெற என்ன செய்யவேண்டும் – சித்த மருத்துவர் விளக்கம்!
சைனஸ்க்கு சித்த மருத்துவத்தில் உள்ள தீர்வுகள் என்ன? திருச்சியைச் சேர்ந்த சித்த மருத்துவர் காமராஜ் விளக்குகிறார்.
யாருக்கு வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் வரக்கூடிய சைனஸ் பிரச்னைகளும், அதற்கு உரிய சித்த மருத்துவர் குறித்து, திருச்சியைச் சேர்ந்த சித்த மருத்துவர் காமராஜ் இன்று நம்மிடம் விளக்கமாகக் கூறுகிறார். இதற்கு சரியான நேரத்தில் முறையாக சிகிச்சை எடுத்துக் கொள்ளாமல் எனக்கு சைனஸ் பிரச்சினை இருக்கிறது என்று சைனுசைட்டிஸ் கூறிக்கொண்டிருபவர்கள் தான் அதிகம் என்று மருத்துவர் கூறுகிறார். நோய் பாதிப்பு தெரிந்தவுடன் சிகிச்சை எடுத்துக் கொண்டால் எளிதாக குணப்படுத்தலாம் என்று அவர் எச்சரிக்கிறார்.
இனி இந்த சைனஸ் குறித்த முழு விளக்கம் இங்கே
சைனுசைட்டிஸ் என்றால் என்ன?
முகத்தில் சைனஸ் அறைகளில், சைனஸ் திசுக்களில் தொற்று கிருமிகளால் நீர் கோர்த்து வீங்கி வேதனையை உண்டாக்குவது சைனுசைட்டிஸ் என்று கூறுவர்.
சைனுசைட்டிஸ் எங்கு காணப்படும்?
முன் நெற்றி பகுதி, இரண்டு புருவங்களின் உட்புற மேல்பகுதி, இரண்டு கண்களின் கீழ், மூக்கின் பக்கவாட்டு மேல் பகுதியில் காணப்படும்.
சைனுசைட்டிஸில் எத்தனை வகைகள் உள்ளன?
இது அக்யூட் சைனுசைட்டிஸ், சப் அக்யூட் சைனுசைட்டிஸ், கிரானிக் சைனுசைட்டிஸ், ரெக்கரண்ட சைனுசைட்டிஸ் என நான்கு வகைப்படும்.
நோய் ஏற்பட காரணங்கள்
இது வைரஸ் கிருமி தொற்று, பாக்டீரியா வகை தொற்று கிருமிகளால் ஏற்படுகிறது அல்லது உடலில் எதிர்ப்பு சக்தி குறைவதால், தீராத நாள்பட்ட மலக்கட்டு பிரச்னை இருந்தால், தூக்கம் குறைவாக இருந்தால், தொடர்ந்தால், கலப்பட, நாள்பட்ட, பதப்படுத்தப்பட்ட, செயற்கை வண்ணங்கள் கலந்த உணவு திண்பண்டங்களை தொடர்ந்து அடிக்கடி பயன்படுத்தி வந்தால், பல்வேறு வகை தரமற்ற வாசனை திரவங்களை பயன்படுத்துவதால், நாள்பட்ட, தரமற்ற, செயற்கை மனமூட்டிகள் சேர்த்த தைலங்களை தொடர்ந்து பயன்படுத்துவதால், தரமற்ற கலப்பட சாம்பிராணி, பத்தி வகைகளால், கொசு விரட்டி சுருள்களால், கொசு விரட்டி பத்திகளால் , தரமற்ற பாடிலோஷன், ஸ்கின் கிரீம் வகைகளால், சுற்றுப்புற சுகாதாரம் இன்மையால் சைனுசைட்டிஸ் பிரச்னை ஏற்படலாம்.
இது குறிப்பாக இன்புளூயன்சா வைரஸ் கிருமி, ஸ்ட்ரெப்டோ காக்ஸ் நிமோனியா பாக்டீரியா, கீமோ பிளஸ் இன்புளூயன்சா பாக்டீரியா, மோராக்செல்லா கேட்டராலிஸ் பாக்டீரியா, ஃப்ளூ வைரஸ் தொற்று போன்றவைகளால் பாதிப்பு ஏற்படலாம்.
அக்யூட் சைனுசைட்டிஸ் அறிகுறிகள்
மூக்கடைப்பு, மூக்கிலிருந்து நீர் வடிதல், தும்மல், தொடர் தும்மல், தலைவலி, தலைபாரம், முகம் வீங்கி காணுதல், வாசனை அறிய இயலாமை, காய்ச்சல், அசதி, சோர்வு போன்றவை காணப்படும். சரியான மருத்துவம் சரியான நேரத்தில் செய்தால் நான்கு வாரங்களில் குணமாகிவிடும்.
சப் அக்யூட் சைனுசைட்டிஸ்:
மேற்கண்ட குறிகுணங்களே காணப்படும். இதை 4-8 வார தொடர் சிகிக்சை மூலம் குணப்படுத்த முடியும்.
கிரானிக் சைனுசைட்டிஸ்
இது 8 வாரத்திலிருந்து தொடர்ந்து பாதிப்பை ஏற்படுத்தும். தொடர் சிகிச்சை மூலம் விரைவாக குணப்படுத்தலாம்.
ரெக்கரண்ட சைனுசைட்டிஸ்
சரியான சிகிச்சை எடுக்காவிட்டால் வருடம் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தும்.
கண்டுகொள்ளாமல் விட்டால் என்னவாகும்?
சுவாச தொற்று, ஆஸ்துமா, மூக்கில் சதை வளர்ச்சி, மூக்கின் குருத்தெலும்பு வளைந்து போதல், நோய் எதிர்ப்புச் சக்தி குறைவு ஏற்படலாம்.
இது தொற்று நோயல்ல, சரியாக குணப்படுத்த தவறினால் பாக்டீரியா, வைரஸ் மற்றும் பூஞ்ஜை நோய் கிருமிகள் மூளை மற்றும் கண்கள் பாதிப்பை ஏற்படுத்தும்.
நோயை உறுதி செய்வது எப்படி?
நோயின் கால அளவு, வரலாறு, காது மூக்கு தொண்டை நேரடி பரிசோதனை, எக்ஸ்ரே, நாசல் என்டாஸ்கோப்பி, ஒவ்வாமை பரிசோதனை, திசு பரிசோதனை, ரத்த பரிசோதனைகள் செய்து நோயை உறுதிப்படுத்தலாம்.
சித்த மருத்துவத்தில் தீர்வு
வயிறு மற்றும் குடலை, ரத்தத்தை சுத்தப்படுத்த முதலில் வயிறு பேதிக்கு கொடுக்க வேண்டும்.
மலக்கட்டு பிரச்னை இருக்கக்கூடாது
தவிர்க்க வேண்டியவை
பதப்படுத்தப்பட்ட உணவு திண்பண்டங்களை வாங்கி சாப்பிடுவதை, நீண்ட காலம் வைத்திருந்து சாப்பிடுவதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். குளிர்ந்த நீரை கண்டிப்பாக குடிக்கக்கூடாது, காய்ச்சி வடிகட்டி இளஞ்சூடாக குடிக்க வேண்டும், குளிர் பானங்கள், ஐஸ்கிரீம், கேக், சாக்லேட், கிரீம் பிஸ்கட் வகைகள், ஐஸ் வாட்டர் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். கீரை வகைகளை மருத்துவம் செய்யும் நாட்களில் சாப்பிடக்கூடாது. குளிர்ந்த நீரில் குளிக்கக்கூடாது, பனியில் வெளியே செல்லக்கூடாது. வாசனை திரவியங்கள், பாடலோஷன், ஹேர் லோஷன், ஃபேஸ் லோஷன் பயன்படுத்தக்கூடாது. இரவு நீண்ட நேரம் விழித்திருக்கக்கூடாது. தூக்கம் 6-8 நேரம் இருக்க வேண்டும், இயற்கை உந்தல்களான மலம், சிறுநீர், பசி, வாயு, தும்மல், இருமல், கொட்டாவி, வாந்தி, மூச்சு, விந்து, தாகம், தூக்கம், விக்கல், உறக்கம் இவைகளை தொடர்ந்து அடக்கினாலும் கண்டிப்பாக நோய் வரும்.
சித்த மருந்துகள்
தாளி சாதி சூரணம்
கற்பூராதி சூரணம்
நீர்க்கோவை மாத்திரை
சிவனார் அமிர்தம்
கெளரி சிந்தாமணி
பவளம்
முத்து சிப்பி
கபசுர குடிநீர்
நிலவேம்பு குடிநீர்
கற்பூர தைலம்
சுக்கு தைலம்
போன்ற மருந்துகள் பெருமளவு பயன்படுத்தப்படுகிறது. சுய மருத்துவம் யாரும் செய்து கொள்ளக்கூடாது. சித்த மருத்துவர் ஆலோசனை பெற்றுத்தான் எந்த மருந்தையும் பயன்படுத்தவேண்டும்.
கிராம்பு, ஓமம், பச்சைக் கற்பூரம் ஒரே அளவு எடுத்து துளசிச் சாறு, வெற்றிலைச் சாறு, ஓமவள்ளி இலைச் சாறு விட்டு நன்றாக அரைத்து நிழலில் உலர்த்தி பொடித்து வைத்துக்கொண்டு தேவையான அளவு எடுத்து தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து ஆவி பிடித்து வரலாம்.
கற்பூர தைலம் சொட்டு மருந்து வாங்கி மருத்துவர் ஆலோசனை பெற்று மூக்கில் நுகரலாம்.
நீர்க்கோவை மாத்திரையை வெந்நீர் விட்டு குழைத்து சைனஸ் உள்ள இடத்தில் பற்று போடலாம்.
இவ்வாறாக சைனஸ் பிரச்னை இருப்பவர்கள் உடனடியாக சிகிச்சை எடுத்துக்கொள்ள பிற பாதிப்பு வராமல் தடுக்க உதவும். நோயும் விரைந்து தீரும். இவ்வாறு திருச்சியைச் சேர்ந்த டாக்டர் காமராஜ் தெரிவித்துள்ளார்.
தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்