ஆந்திரா பெசரட்டு : ஆந்திரா ஸ்டைல் பெசரட்டு தோசை; ஒருமுறை ருசித்தால் அடிக்கடி செய்து சாப்பிடுவீர்கள்!
ஆந்திரா பெசரட்டு : ஆந்திராவில் இந்த தோசை மிகவும் ஸ்பெஷலானது. சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்றது. இதற்கு இஞ்சி சட்னி மிகவும் நல்லது.

புரதச்சத்துக்கள் நிறைந்தது இந்த பாசிப்பயறு தோசையை நீங்கள் காலை உணவாகவோ அல்லது இரவு உணவாகவோ செய்யலாம். இது உங்களுக்கு வயிறு நிறைந்த உணர்வைத் தரும். ஆந்திராவில் இந்த தோசை மிகவும் ஸ்பெஷலானது. சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்றது. இதற்கு இஞ்சி சட்னி மிகவும் நல்லது.
தேவையான பொருட்கள்
• பாசிப்பயறு – 2 கப் (முளை கட்டிக்கொள்ளவேண்டும்)
• பச்சரிசி – கால் கப்
• பச்சை மிளகாய் – 2
• இஞ்சி – கால் இன்ச்
• சீரகம் – கால் ஸ்பூன்
• கறிவேப்பிலை – ஒரு கொத்து
• பெருங்காயத் தூள் – கால் ஸ்பூன்
• உப்பு – தேவையான அளவு
டாப்பிங்குக்கு தேவையான பொருட்கள்
• நெய் அல்லது எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
• சீரகம் – கால் ஸ்பூன்
• பெரிய வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)
• பச்சை மிளகாய் – 1 (பொடியாக நறுக்கியது)
செய்முறை
1. பாசிப்பயறு மற்றும் அரிசியை நன்றாக அலசிவிட்டு, ஒரு பெரிய பாத்திரத்தில் ஊறவைக்கவேண்டும். 4 முதல் 6 மணி நேரம் ஊறியவுடன், வடித்து, பச்சை மிளகாய், இஞ்சி, சீரகம், உப்பு சேர்த்து மிக்ஸி அல்லது கிரைண்டரில் அரைத்துக்கொள்ளவேண்டும். தோசை மாவு பதத்துக்கு அரைத்துக்கொள்ளவேண்டும்.
2. இதை ரவை பதத்துக்கும் அரைத்துக்கொள்ளலாம் அல்லது நல்ல மிருதுவான பேஸ்டாக அரைத்துக்கொள்ளலாம். அடைமாவு பதத்திலும் இருக்கலாம். ஆனால் அதிகம் தண்ணீர் ஊற்றி விடக்கூடாது. சரியான பதத்தில் மாவை அரைத்துக்கொள்ளவேண்டும்.
3. ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து அது சூடானவுடன் அதில் சீரகம் சேர்த்து தாளித்து பொடியாக நறுக்கிய வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி எடுத்து தனியாக வைத்துக்கொள்ளவேண்டும். இதை நீங்கள் தோசைக்குமேல் ஸ்பிரட் செய்யவேண்டும்.
4. கடாயை சூடாக்கி அதில் மாவை ஒரு கரண்டு எடுத்து பரப்பி விடவேண்டும். அடுப்பை குறைவான தீயில் வைத்துக்கொள்ளவேண்டும். சுற்றிலும் எண்ணெய் அல்லது நெய் சேர்த்துக்கொள்ளவேண்டும்.
5. ஒருபுறத்தில் பொன்னிறமாக ஆனவுடன், திருப்பிவிட்டு அடுத்த புறத்திலும் நன்றாக வேகவிடவேண்டும். பச்சை நிறம் மறைந்து பொன்னிறமாகத் துவங்கும்போது, மீண்டும் திருப்பிவிட்டு வதக்கி வைத்துள்ள வெங்காயத்தை மேலே தூவவேண்டும். தோசையை மூடி எடுத்தால் சூப்பர் சுவையான பெசரட்டு தோசை தயார்.
இதற்கு தொட்டுக்கொள்ள இஞ்சி சட்னி சூப்பரானது என்றாலும், தேங்காய், தக்காளி, புதினா, கறிவேப்பிலை, மல்லி சட்னிகளும் சாம்பாரும் ஏற்றதுதான். இதை நீங்கள் காலை உணவு அல்லது இரவு உணவுக்கு செய்துகொள்ளலாம். இது சூப்பர் சுவையானது.
தோசை கல்லை தயார் செய்வது எப்படி?
பொதுவாக தோசைக்கல்லை நன்றாக அலசிவிட்டு அடுப்பில் வைத்து சூடானவுடன், அதில் எண்ணெய் ஊற்றி, அதை ஸ்பிரட் செய்துவிடவேண்டும். அடுத்து ஒரு பெரிய வெங்காயத்தை இரண்டாக வெட்டி உள்புறத்தை தோசைக்கல்லில தேய்த்துவிடவேண்டும். அப்போது தண்ணீர் தெளித்து பார்க்கவேண்டும். தண்ணீர் விரைவாக பொரிந்து மறைந்துவிட்டால் கல் தயாராக உள்ளது என்று பொருள். இதை எப்போது தோசை வார்க்கும்போதும் செய்துகொண்டால், கிரிஸ்பியான சூப்பர் சுவையான தோசைகள் வார்த்து எடுக்கலாம்.

டாபிக்ஸ்