65 Premix : 65 பிரியரா நீங்கள்? இதோ இந்த பொடியை ரெடி பண்ணி வச்சுடுங்க! நினைத்தவுடனே செஞ்சிடலாம்!
65 Premix : 65 பிரியரா நீங்கள்? இதோ இந்த பொடியை மட்டும் ரெடி பண்ணி வெச்சுடுங்க போதும். நினைத்தவுடனே எந்த 65 வேண்டுமானாலும் செய்து சாப்பிட்டு மகிழலாம்.

இது விடுமுறை காலம் என்பதால், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் என அனைவரும் வீட்டுக்கு வருவார்கள். மேலும் குழந்தைகளும் இருப்பார்கள். அனைவருக்கும் பிடித்த உணவு 65, இதை பிடிக்காதவர்களே இல்லை என்று சொல்லலாம்.
தேவையான பொருட்கள்
மைதா – ஒரு கப்
கார்ன் ஃப்ளோர் – அரை கப்
அரிசி மாவு – அரை கப்
கஷ்மீரி ரெட் சில்லி பவுடர் – கால் கப்
கரம் மசாலா – ஒரு டேபிள் ஸ்பூன்
உப்பு – 3 டேபிள் ஸ்பூன்
பூண்டுப்பொடி – ஒரு ஸ்பூன்
இஞ்சிப்பொடி – ஒரு ஸ்பூன்
செய்முறை
இவையனைத்தையும் காய்ந்த மிக்ஸி ஜாரில் சேர்த்து ஒருமுறை அரைத்து வைத்துக்கொண்டால் போதும். இதை ஒரு காற்றுப்புகாத டப்பாவில் வைத்துக்கொண்டால் 6 மாதம் வரை அப்படியே இருக்கும். இதை செய்வதற்கு 5 நிமிடங்களே போதும்.
இதை வைத்து காளிஃபிளவர், மஸ்ரூம், சோயா, பன்னீர், எக், சிக்கன் என எதை செய்வதற்கும் பயன்டுத்திக்கொள்ளலாம்.
இதில் எதாவது ஒன்றில் இந்தப்பொடியை சேர்த்து கலந்துவிட்டு, அதனுடன் கறிவேப்பிலை மற்றும் இரண்டு ஸ்பூன் எண்ணெய் சேர்த்து கலந்து அரை மணி நேரம் ஊறவைக்கவேண்டும்.
பின்னர் பொரித்து எடுத்தால், நீண்ட நேரம் மொறுமொறுப்புடன் 65 இருக்கும்.
இதில் பயன்படுத்தப்படும் கரம் மசாலா செய்வது எப்படி?
பட்டை – 2
கிராம்பு – 8
ஸ்டார் சோம்பு – 2
பிரியாணி மசாலா – 1
ஏலக்காய் – 1
குங்குமப்பூ – ஒரு சிட்டிகை
கல்பாசி – கால் ஸ்பூன்
ஜாவித்திரி – அரை பூ
செய்முறை
இவையனைத்தையும் நன்றாக காய வைத்துக்கொள்ளவேண்டும். பின்னர் கடாயை சூடாக்கி அதில் சேர்த்து ஒரே ஒரு நிமிடம் மட்டும் வறுத்து எடுத்துக்கொள்ளவேண்டும்.
பின்னர் ஆறியவுடன் மிக்ஸி ஜாரில் சேர்த்து பொடித்து எடுத்துக்கொள்ளவேண்டும். மிக்ஸி ஜாரில் அரைபடாத பொருட்களை சிறிய உரலில் சேர்த்து தட்டிக்கொள்ள வேண்டும்.
பின்னர் காய்ந்த மிக்ஸிஜாரில் சேர்த்து அரைத்து எடுத்தால், மணமணக்கும் கரம் மசாலாப் பொடி தயார். இதை தனியாக ஒரு காற்றுப்புகாத டப்பாவில் அரைத்து வைத்துக்கொள்ளலாம்.
காளிஃபிளவர் 65 செய்வது எப்படி?
காளிஃபிளவர் – 1
(பூவை உதிர்த்து நன்றாக கழுவி சுத்தம் செய்து, ஒரு பாத்திரத்தில் தண்ணீர் கொதிக்கவைத்து அதில் மஞ்சள்தூள், உப்பு சேர்த்து கலந்துவிட்டு காளிஃபிளவரையும் சேர்த்துக்கொள்ள வேண்டும். இரண்டு நிமிடம் கழித்து அதைவெளியே எடுத்துவிட்வேண்டும்)
ஒரு பாத்திரத்தில் சுத்தம் செய்து, சுடுதண்ணீரில் கழுவி எடுத்த காளிஃபிளவர் மற்றும் ஃபிரஷ் கறிவேப்பிலையும் சேர்த்து நன்றாக பிரட்டிக்கொள்ள வேண்டும்.
அதனுடன் நீங்கள் தயாரித்து வைத்துள்ள 65 பொடியை சேர்த்து பிரட்டவேண்டும். உப்பு மட்டும் சரிபார்த்துக்கொள்ளவேண்டும்.
சிறிது தயிர் அதனுடன் தயிர் அல்லது எலுமிச்சை சாறு மற்றும் தண்ணீர் சேர்த்து நன்றாக பிரட்டிக்கொள்ளவேண்டும்.
கடாயில் எண்ணெயை சூடாக்கி, இந்த காளிஃபிளவரை பொரித்து எடுக்கவேண்டும். சூடான சுவையான காளிஃபிளவர் தயார். இதற்கு தொட்டுக்கொள்ள தக்காளி கெட்ச அப்புடன் தொட்டுக்கொண்டு சாப்பிட சுவை அள்ளும்.
இவையனைத்தையும் செய்வது மிகவும் எளிது என்பதால், செய்து சாப்பிடடு விடுமுறையை கொண்டாடி மகிழுங்கள்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9

டாபிக்ஸ்