மதுரை விமான நிலையத்தில் விஜய் வருகை.. அத்துமீறிய பவுன்சர்கள்.. செய்தி ஒளிப்பதிவாளர் தாக்கப்பட்டதால் பரபரப்பு!
மதுரை விமானநிலையத்தில் விஐபி கேட் முன்பு, விஜயைப் பார்க்கமுடியாதவாறும், செய்தி சேகரிக்க விடாமலும் தடுத்திருக்கின்றனர், பவுன்சர்கள்.

மதுரை விமானநிலையத்திற்கு வருகை தந்த விஜய்: திண்டுக்கல் மாவட்டம், தாண்டிக்குடியில் ஜனநாயகன் படப்பிடிப்பினை முடித்து விட்டு, நடிகர் விஜய் மதுரை விமான நிலையத்தில் இருந்து சென்னை சென்றார். அப்போது மதுரை விமானநிலையத்தில் டிவி சேனலின் ஒளிப்பதிவாளர் தாக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம், தாண்டிக்குடி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் நடிகர் விஜய் நடிக்கும் ஜனநாயகன் படத்தின் படப்பிடிப்பு நடந்து வந்தது. நடிகர் விஜய்யின் 69ஆவது படமான இப்படத்துடன், நடிகர் விஜய் அரசியலில் முழுமூச்சாக கால் பதிக்கப்போகிறார். அதனால், ஜனநாயகன் படம் தான் நடிகர் விஜய்யின் இறுதிப்படமாக இருக்கும் என விஜய் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் இப்படத்துக்கு ரசிகர்கள் மத்தியிலும் பொதுமக்கள் மத்தியிலும் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டு இருக்கிறது. முன்னதாக, இப்படத்தின் படப்பிடிப்புக்காக சென்னையில் இருந்து மதுரை விமான நிலையம் வந்த நடிகர் விஜய்க்கு, அவரது ரசிகர்களும் தமிழக வெற்றிக் கழகத்தின் தொண்டர்களும் தடபுடலான வரவேற்பினைக் கொடுத்தனர். சிலர் அவரது வாகனங்களை ஃபாலோவ் செய்யவும் செய்தனர்.
வண்டியில் செல்லும்போதே எச்சரித்த விஜய்:
அதனால், நடிகர் விஜய் செய்தியாளர்கள் சந்திப்பில் கூட, தனது ரசிகர்களும் தொண்டர்களும் தனது வாகனத்தைப் பின் தொடரவேண்டாம் என்று கேட்டுக்கொண்டார். இருந்தாலும், நடிகர் விஜய்யின் ரசிகர்கள் கேட்டபாடில்லை. விஜயின் வாகனத்தை கொடைக்கானல் செல்லும் வரை, ரசிகர்கள் பின் தொடர்ந்தனர். அவர்களை வண்டியில் செல்லும்போதே, நடிகர் விஜய் எச்சரித்து, படப்பிடிப்புக்காக கொடைக்கானல் சென்று சேர்ந்தார்.
விஜயைப் பார்க்க கொடைக்கானலிலும் அலைமோதிய கூட்டம்:
இந்நிலையில் நடிகர் விஜயைக் காண, கொடைக்கானலைச் சுற்றிய கிராமங்களிலும் கூட்டம் சேர்ந்துகொண்டே இருந்தது. இதனால், ஜனநாயகன் படத்தின் படக்குழுவினர் சில சிரமங்களைச் சந்தித்ததாகவும் தெரிகிறது. அதேபோல், ஜனநாயகன் படப்பிடிப்பில், கொடைக்கானல் - தாண்டிக்குடி அருகே நடந்த படப்பிடிப்பில், லைட்மேன் ஒருவருக்கு உபகரணங்கள் தலையில் பட்டு, விபத்து ஏற்பட்டது. இதனாலும் ஜனநாயகன் படத்தயாரிப்புக் குழுவினர் பதற்றமாகினர். பத்தாதற்கு, விஜயைப் பார்க்க கொடைக்கானலுக்குப் பலரும் வந்த வண்ணம் இருந்தனர்.
இந்நிலையில் நேற்று மாலை மே 4ஆம் தேதியுடன், ஜனநாயகன் படத்தின் கொடைக்கானல் - தாண்டிக்குடி செட்யூல் முடிந்துள்ளது. அதனைத்தொடர்ந்து, நடிகர் விஜய் மதுரை விமான நிலையம் வந்து, சென்னை விமான நிலையம் செல்ல புறப்பட்டார்.
வாக்குவாதம்:
அப்போது விஜய்யிடம் பேசி செய்தி சேகரிக்க, மதுரை விமான நிலையத்தில் பத்திரிகையாளர்கள் மற்றும் செய்தி ஒளிப்பதிவாளர்களும் நின்றுகொண்டிருந்தனர்.
அப்போது மதுரை விமானநிலையத்தில் விஐபி கேட் முன்பு, விஜயைப் பார்க்கமுடியாதவாறும், செய்தி சேகரிக்க விடாமலும் தடுத்திருக்கின்றனர், பவுன்சர்கள். அப்போது செய்தி ஒளிப்பதிவாளர்களுக்கும், விஜய்யின் பவுன்சர்களுக்கும் வாக்கு வாதம் ஏற்பட்டிருக்கிறது.
அப்போது விஜய்யின் பவுன்சர்கள், செய்தி ஒளிப்பதிவாளர்களைக் கீழே தள்ளிவிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
