Vishnu Vishal: ஒரு வழியாக ஓய்ந்த சர்ச்சை.. புன்சிரிப்பில் பொட்டு வைத்த விஷ்ணுவிஷால்.. சந்திப்பின் பின்னணி என்ன தெரியுமா?
லால் சலாம் பட புரமோஷன் தொடர்பான நேர்காணல்களில் பேசிய விஷ்ணு, சூரியுடனான பிரச்சினை முடிந்து விட்டதாகவும், மீண்டும் தாங்கள் இணைந்து விட்டதாகவும் பேசி இருந்தார்.
இயக்குநர் சுசீந்திரன் இயக்கிய வெண்ணிலா கபடி குழு திரைப்படத்தில் நடிகர் சூரியும், விஷ்ணு விஷாலும் இணைந்து நடித்திருந்தனர். இந்தப்படம் இருவருக்கும் அவர்களது கேரியரில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. குறிப்பாக சூரியின் பரோட்டா காமெடி பட்டித்தொட்டியெங்கும் பிரபலம் அடைந்தது.
இந்தப்படத்தை தொடர்ந்து குள்ளநரி கூட்டம், ஜீவா, வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன் உள்ளிட்ட படங்களில் இவர்கள் ஒன்றாக நடித்தனர். அந்த படங்களும் நல்ல வரவேற்பை பெற்றன. இதனையடுத்து இந்த கூட்டணி வீரதீர சூரன் படத்தில் இணைவதாக இருந்தது.
இதற்கு சூரிக்கு 40 லட்சம் சம்பளமாக பேசப்பட்ட நிலையில், அதற்கு பதிலாக சென்னை சிறுசேரி பகுதியில் நிலம் வாங்கி தருவதாக விஷ்ணுவின் தந்தை ரமேஷ் குடவாலாவும், தயாரிப்பாளர் அன்புவேல்ராஜனும் உறுதியளித்து இருந்ததாக சொல்லப்படுகிறது.
இதனையடுத்து அந்த நிலத்திற்கு கூடுதலாக தன்னிடம் இருந்து 2.70 கோடி ரூபாய் வாங்கி இருவரும் மோசடி செய்து விட்டதாக நடிகர் சூரி பரபரப்பான குற்றசாட்டை முன்வைத்தார். இதனால் சூரிக்கும் விஷ்ணுவுக்கும் இடையேயான நட்பில் விரிசல் ஏற்பட்டது.
அதன் காரணமாக சில ஆண்டுகளாக இருவரும் பேசாமல் இருந்தனர். இதற்கிடையே லால் சலாம் பட புரமோஷன் தொடர்பான நேர்காணல்களில் பேசிய விஷ்ணு, சூரியுடனான பிரச்சினை முடிந்து விட்டதாகவும், மீண்டும் தாங்கள் இணைந்து விட்டதாகவும் பேசி இருந்தார்.
இந்த நிலையில் அவர் தற்போது தனது தந்தையுடன் சூரியை சந்தித்த புகைப்படத்தை பகிர்ந்து இருக்கிறார். அந்த பதிவில், “ நேரம் எல்லாவற்றிற்கும், எல்லோருக்கு பதில் சொல்லி விடும். நேர்மறையான தாக்கம் ஓடட்டும் சூரி அண்ணா, லவ் யூ அப்பா என்று பதிவிட்டு இருக்கிறார். இதனை ஷேர் செய்த சூரி, “ நடப்பவை எல்லாம் நன்மைக்கே நன்றிங்க” என்று பதிவிட்டு இருக்கிறார். இந்த பதிவு தற்போது சமூகவலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
முன்னதாக இது தொடர்பாக கலாட்டா சேனலில் பேசிய விஷ்ணு விஷால், “எனக்கும் சூரிக்கும் இடையே என்ன நடந்தது என்பது குறித்தான விவரங்கள் கூடிய சீக்கிரமே வெளி வரும். என்னுடைய வாழ்க்கையில் அந்த மூன்று வருடங்கள் மிக மிக கடினமானவையாக இருந்தன. ஆம், அந்த காலக்கட்டத்தில்தான் என்னுடைய முன்னாள் மனைவியுடன் எனக்கு விவாகரத்து ஏற்பட்டது. சூரிக்கும் எனக்கும் இடையேயான பிரச்சினை பெரும் சர்ச்சையாக வெடித்தது.
எல்லாமே ஒரே சமயத்தில் தவறாக நடக்கும் என்று சொல்வார்கள் இல்லையா? அப்படித்தான் அதுவும் நடந்தது. ஆனால் அது எல்லாமே தற்போது முடிவுக்கு வந்துவிட்டது. இங்கு தவறு செய்யாத மனிதர்களை கிடையாது!.
ஆனால் அவர்கள் அந்தளவு கோபப்படும் அளவுக்கு நான் ஒன்றும் பெரிய தவறு செய்யவில்லை... தற்போது எல்லாமே முடிவுக்கு வந்திருக்கிறது. தற்போது சூரிக்கும் எனக்கும் இடையேயான பேச்சுவார்த்தை சுமூகமாக இருக்கிறது. அவர் என்னுடைய பையன் ஆர்யன் குறித்து கேட்பார்.
நாம் கோபத்தை நம் மனதுக்குள்ளேயே வைத்திருந்தால்,அது நம்மை வேறொரு மனிதராக மாற்றி விடும்.சூரி உடனான பிரச்சனையில் நானும் அவரும் உட்கார்ந்து பயங்கரமாக பேசினோம். அப்போது எங்கள் இரண்டு பேருக்கும் ஒரு தெளிவு கிடைத்தது. வாழ்க்கை பற்றிய ஒரு புரிதல் கிடைத்தது. நாங்கள் மறக்கவும் மன்னிக்கவும் ஒத்துக் கொண்டோம்.
பிரச்சினை என்று ஒன்று வந்து விட்டால், என் மீது உள்ள தவறுக்கு நான் மன்னிப்பு கேட்க தயாராக இருப்பேன். அவர் மீது தவறு இருக்கும் பட்சத்தில், அதையும் எடுத்துக்காட்டுவேன். அதில் தவறு இருக்கும் பட்சத்தில் அதற்காக மன்னிப்புக் கேட்கவும் நான் தயங்கமாட்டேன்.
கண்டிப்பாக அவருடன் நான் தொடர்ந்து படங்கள் நடிப்பேன். எங்கள் இருவருக்குள்ளும் நடந்த விஷயங்களை மறந்து நாங்கள் தற்போது நன்றாகவே பேசிக் கொண்டிருக்கிறோம்” என்று பேசினார்.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

டாபிக்ஸ்