‘மனிதநேயத்தை பின்பற்றும் இஸ்லாமிய சொந்தங்கள் வந்தது மகிழ்ச்சி’: இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் விஜய் பேச்சு
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  ‘மனிதநேயத்தை பின்பற்றும் இஸ்லாமிய சொந்தங்கள் வந்தது மகிழ்ச்சி’: இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் விஜய் பேச்சு

‘மனிதநேயத்தை பின்பற்றும் இஸ்லாமிய சொந்தங்கள் வந்தது மகிழ்ச்சி’: இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் விஜய் பேச்சு

Marimuthu M HT Tamil Published Mar 07, 2025 07:29 PM IST
Marimuthu M HT Tamil
Published Mar 07, 2025 07:29 PM IST

இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சிக்கு வெள்ளை கைலி, வெள்ளை சட்டை, தொப்பியுடன் விஜய் வருகை தந்து கலந்துகொண்டார்.

‘மனிதநேயத்தை பின்பற்றும் இஸ்லாமிய சொந்தங்கள் வந்தது மகிழ்ச்சி’: இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் விஜய் பேச்சு
‘மனிதநேயத்தை பின்பற்றும் இஸ்லாமிய சொந்தங்கள் வந்தது மகிழ்ச்சி’: இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் விஜய் பேச்சு

அதனைத் தொடர்ந்து, தமிழக வெற்றிக் கழகம் சார்பில் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒய்.எம்.சி.ஏ திடலில் நடைபெற்றது.

அதில் த.வெ.க சார்பில் நோன்பு கஞ்சியும், 2 ஆயிரம் நபர்களுக்காக மட்டன் பிரியாணியும் தயார் செய்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது.

அதனைத் தொடர்ந்து ஒய்.எம்.சி.ஏ திடலுக்கு பிரசார வாகனம் மூலம் விஜய் வந்தார். குறிப்பாக, இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சிக்கு வெள்ளை கைலி, வெள்ளை சட்டை, தொப்பியுடன் விஜய் வருகை தந்தார்.

அதன்பின் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

’அனைத்து இஸ்லாமிய சொந்தங்களும் எனது அழைப்பை ஏற்று வந்து கலந்து கொண்டதில் மிக்க மிக்க மகிழ்ச்சி':நடிகர் விஜய்

அந்நிகழ்வில் பேசிய நடிகர் விஜய், ‘’என் நெஞ்சில் குடியிருக்கும் எனது அன்பான இஸ்லாமிய பெருமக்கள் உங்கள் அனைவருக்கும் வணக்கம்;

மாமனிதர் நபிகள் நாயகம் அவர்களின் வாழ்க்கையை பின்பற்றி மனிதநேயத்தையும் சகோதரத்துவத்தையும் பின்பற்றுகிற இங்கு உள்ள அனைத்து இஸ்லாமிய சொந்தங்களும் எனது அழைப்பை ஏற்று வந்து கலந்து கொண்டதில் மிக்க மிக்க மகிழ்ச்சி; உங்க எல்லோருக்கும் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்'' என தவெக தலைவர் விஜய் பேசினார்.

அதன்பின், நிகழ்ச்சி முடிந்த பிறகு பிரசார வாகனத்தில் நின்றவாறு மக்களைப் பார்த்து கையசைத்தவாறு விஜய் புறப்பட்டார்.

விஜய்யின் அரசியல் பயணம்:

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திர நடிகரான விஜய் அரசியல் கட்சி தொடங்குவார் என அவரது ரசிகர்கள் பல ஆண்டுகளாக காத்திருந்தனர். அதற்குத் தீனிபோடும் விதமாக, 2024ஆம் ஆண்டின் தொடக்கத்தில் ’’தமிழக வெற்றிக் கழகம்’’ என்ற கட்சிப்பெயரை அறிவித்து, அதைத் தேர்தல் ஆணையத்தில் பதிவும் செய்திருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார், விஜய்.

இதனைத் தொடர்ந்து, அவரது ரசிகர் மன்றமான ‘தளபதி மக்கள் இயக்கம்’ அப்படியே, அவரது கட்சியாக மாறியது. அதனைத்தொடர்ந்து தமிழக வெற்றிக் கழகத்தில், உறுப்பினர் சேர்க்கையில் 2 கோடி உறுப்பினர்களை சேர்க்க இலக்கு வைத்து வேலை செய்தனர், அக்கட்சி நிர்வாகிகள்.

மேலும், உறுப்பினர் சேர்க்கைக்காக , ’’தமிழக வெற்றிக் கழகம்’’ என்னும் செயலி ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டது. அதில் தமிழக வெற்றிக் கழகம், தனக்கான உறுப்பினர் சேர்க்கையை 2024ஆம் ஆண்டு, மார்ச் 8ஆம் தேதி தொடங்கியது.

தொடங்கிய மூன்றே நாட்களில் அந்தக் கட்சியில் 50 லட்சம் பேர் உறுப்பினர்களாக இணைந்தனர். தவிர, தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் உறுப்பினர்கள் சேர்க்கையில் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றனர்.

அடுத்து கள்ளக்குறிச்சி விஷ சாராய மரணங்கள் நிகழ்ந்த பகுதிக்கு நேரடியாகச் சென்று, பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் தெரிவித்தார். அண்மையில் 10, 12ஆம் வகுப்புகளில் மாவட்ட அளவில், ஊரக அளவில் முதலிடம் பெற்றவர்களை விஜய் விழாவாக ஏற்பாடு செய்து கெளரவித்தார்.

மேலும் பி.ஆர்.அம்பேத்கர், பெரியார் ஈ.வே.ராமசாமி மற்றும் காமராஜ் போன்ற தலைவர்கள் மற்றும் அவர்களின் லட்சியங்களைப் பற்றி படிக்குமாறு மாணவர்களை வலியுறுத்தினார்.

தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் மாநாடு அக்டோபர் 27ஆம் தேதி விக்கிரவாண்டியில் வி.சாலையில் நடைபெற்றது. அங்கு த.வெ.க கட்சியின் தலைவராக பேசிய விஜய் அரசியல், பொருளாதார, சமநிலையை உருவாக்கணும் என்றால், புரொபோசல் ரெபிரசன்டேஷன் (முன்மொழிவு பிரதிநிதித்துவம்) ஆக இருக்கிற சாதி ரீதியிலான கணக்கெடுப்பு நடத்தணும் என்றும், அப்போதுதான், எல்லாருக்கும் எல்லாம் சமநிலையாகக் கிடைக்கும் என்றும்; அது தான் சரியான சமூக நீதிக்கான அணுகுமுறையாகவும் இருக்கும் என்றும் கூறினார். மேலும், அம்பேத்கரை தன் கட்சியின் கொள்கை வழிகாட்டியாகவும் விஜய் அறிவித்தார்.