500 வருஷம் முன்னர் பழங்குடியினர் போல்.. சர்ச்சை கருத்தால் சிக்கிய விஜய் தேவரகொண்டா! வன்கொடுமை சட்டத்தில் வழக்குப்பதிவு
பழங்குடி மக்களைப் பற்றிய சர்ச்சைக்குரிய கருத்துகளைத் தொடர்ந்து, நடிகர் விஜய் தேவரகொண்டா மீது எஸ்சி/எஸ்டி சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தெலுங்கு சினிமாவில் இளம் ஹீரோவாக இருப்பவர் விஜய் தேவரகொண்டா. ரெட்ரோ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வின் போது பழங்குடி மக்களைப் பற்றி சர்ச்சைக்குரிய கருத்துகளை பேசியதாக, எஸ்சி/எஸ்டி (வன்கொடுமை தடுப்பு) சட்டத்தின் கீழ் நடிகர் விஜய் தேவரகொண்டா மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. பிடிஐ செய்தி நிறுவனத்திடம் போலீசார் இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளனர்.
விஜய் தேவரகொண்டா மீது வழக்குப் பதிவு
ஏப்ரல் மாதத்தில் நடந்த ரெட்ரோ படத்தின் நிகழ்வின்போது, பஹல்காமில் நடந்த சமீபத்திய பயங்கரவாதத் தாக்குதலை 500 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த பழங்குடி மோதல்களுடன் ஒப்பிட்டுப் பேசினார் விஜய் தேவரகொண்டா. இதையடுத்து இவரது கருத்துக்களுக்கு ஜூன் 17 அன்று நடிகர் மீது எஸ்சி/எஸ்டி சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
"நடிகர் விஜய் தேவரகொண்டா ஏப்ரல் மாதத்தில் சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்தார். இருப்பினும், புகாரின் அடிப்படையில், ஜூன் 17 அன்று அவர் மீது எஸ்சி/எஸ்டி சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது," என்று போலீஸ் அதிகாரி பிடிஐயிடம் தெரிவித்தார்.