பஹல்காம் தாக்குதல் குறித்த சர்ச்சைக்கருத்து.. ‘தவறாக புரிந்து கொண்டவர்களின் கவனத்திற்கு’ - விஜய் ஆண்டனி மறுஅறிக்கை!
காஷ்மீரில் நடந்த கொடிய படுகொலையை செய்த, அந்த மிருக வெறி கொண்ட பயங்கரவாத கூட்டத்தின் நோக்கம், நம் ஒற்றுமையை சிதைப்பதே ஆகும். - விஜய் ஆண்டனி மீண்டும் அறிக்கை!

நடிகரும், இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி பஹல்காம் தாக்குதல் குறித்து நேற்று கருத்து ஒன்றை வெளியிட்டு இருந்தார்.
அந்தக்கருத்தில், ‘காஷ்மீரில் உயிரிழந்த சகோதரர்களுக்கும், அவர்களின் குடும்பங்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கிறேன். அதே சமயத்தில் பாகிஸ்தானில் வசிக்கும் 50 லட்சம் இந்தியர்களையும் பாகிஸ்தான் பொதுமக்களையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.
அவர்களும் நம்மைப்போல அமைதியையும், மகிழ்ச்சியையும் மட்டுமே விரும்புகிறார்கள். வெறுப்பைக்கடந்த மனிதத்தை வளர்ப்போம்.’ என்று குறிப்பிட்டு இருந்தார். இதற்கு பல்வேறு தரப்பில் இருந்து கண்டனங்கள் வந்தன. இந்த நிலையில் அவர் மீண்டும் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.
அந்த அறிக்கையில், என் கருத்தை தவறாக புரிந்து கொண்டவர்களின் கவனத்திற்கு.. காஷ்மீரில் நடந்த கொடிய படுகொலையை செய்த, அந்த மிருக வெறி கொண்ட பயங்கரவாத கூட்டத்தின் நோக்கம், நம் ஒற்றுமையை சிதைப்பதே ஆகும். இந்திய அரசும் நாமும், நம் வலிமையான கரங்களால் நம் இறையாண்மையை பாதுகாப்போம்’ என்று குறிப்பிட்டு இருக்கிறார்.
ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22 அன்று நடந்த கொடூரமான பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். பலரும் படுகாயம் அடைந்தனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பாகிஸ்தான் உடனான சிந்து நதி ஒப்பந்ததை இந்தியா நிறுத்தி வைத்து இருக்கிறது. இதற்கு பதிலடியாக பாகிஸ்தான் வான்வெளியை மூடியதுடன் இந்தியா உடனான சிம்லா ஒப்பந்ததையும் ரத்து செய்திருக்கிறது.
இதனால் இந்தியா பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. இருப்பினும், பாகிஸ்தான் நேர்மையான விசாரணைக்கு ஒத்துழைப்பதாக தெரிவித்திருக்கிறது. இந்தியாவிற்கு இஸ்ரேல், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் ஆதரவு தெரிவித்திருக்கும் நிலையில், பாகிஸ்தானுக்கு சீனா ஆதரவு தெரிவித்திருக்கிறது.
பயங்கரவாத தாக்குதலுக்கு கொடூரமான சம்பவத்திற்கு அரசியல் கட்சி தலைவர்கள் பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்த விவகாரம் குறித்து அண்மையில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய விஜய் ஆண்டனி, ‘பாகிஸ்தானில் உள்ள மக்களும் நம் சகோதரர்கள் தான். அவர்கள் எதுவும் செய்யவில்லை. பஹல்காம் தாக்குதல் விவகாரத்தில் வீணாப்போன நாலு பேர் தவறுக்காக ஒட்டுமொத்த பாகிஸ்தானையும் குறை கூற முடியாது’ என்று பேசினார்.

டாபிக்ஸ்