வேட்டையனுக்கு மழை வைத்த வேட்டு.. லாலாபாடும் லைகா.. வசூலில் பேரிடி.. வேட்டையன் வசூல் எவ்வளவு தெரியுமா கண்ணா?
ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி இருக்கும் வேட்டையன் திரைப்படத்திற்கு மழை வேட்டு வைத்ததா? இல்லையா? என்பதை இங்கே பார்க்கலாம்.

ரஜினிகாந்த நடித்து கடந்த அக்டோபர் 10ம் தேதி வெளியான திரைப்படம் ‘வேட்டையன்’ . இந்தத் திரைப்படம் வெளியாகி நேற்றோடு 6 வது நாள் முடிந்திருக்கிறது. கலவையான விமர்சனங்களை பெற்று வரும் இந்தத்திரைப்படத்தின் வசூல் நேற்று பல்வேறு மாவட்டங்களில் பெய்த மழை காரணமாக பாதிக்கப்பட்டு இருக்கிறது.
வேட்டையன் வசூல் எவ்வளவு
ஆம், நேற்றைய தினம் ‘வேட்டையன்’ திரைப்படம் 4.25 கோடி வசூல் செய்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த திரைப்படம் வெளியான அன்றைய தினம் 31.7 கோடி ரூபாய் வசூல் செய்த நிலையில், இரண்டாவது நாளில் 24 கோடி வசூல் செய்தது. மூன்றாவது நாளில் 26.75 கோடி வசூல் கிடைத்த நிலையில், நான்காம் நாளில் 22.3 கோடி ரூபாய் வசூல் செய்திருக்கிறது. 5ம் நாளான நேற்று முன் தினம் வேட்டையன் திரைப்படம் 5.6 கோடி ரூபாய் வசூல் செய்திருக்கிறது.
உலகளவில், வெளியான அன்றைய தினம் 77.90 கோடி ரூபாய் வசூல் செய்த வேட்டையன் திரைப்படம், 2 வது நாளில் 45.26 கோடி ரூபாயும், 3 வது நாளில் 47.87 கோடி ரூபாயும், 4 வது நாளில் 41.32 கோடி ரூபாயும், 5 வது நாளில் 27.80 கோடி ரூபாயும், 6 வது நாளில் 24.16 கோடி ரூபாய் வசூல் செய்திருக்கிறது.
வேட்டையன் திரைப்படம் இதுவரை மொத்தமாக இந்திய அளவில், 114.60 கோடி ரூபாய் வசூல் செய்திருக்கும் நிலையில், உலகளவில் 264.31 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
கதையின் கரு என்ன?
கன்னியாகுமரி எஸ்.பி அதிகாரியாக இருக்கும் அதியன் ( ரஜினி) என்கவுண்டர் ஸ்பெசலிஸ்ட்டாக ரவுடிகளை அடுத்தடுத்து சுட்டுத் தள்ளுகிறார். அந்த மாவட்டத்தில், அரசு பள்ளியில் நேர்மையான ஆசிரியையாக இருக்கும் சரண்யா ( துஷாரா) நீட் தேர்வுக்கு எதிராக சில வேலைகளை பார்க்க, அதில் கோபமான தனியார் நீட் கோச்சிங் நிறுவனர் நட்ராஜ் ( ராணா) கூலிப்படை ஏவி அவரை கொடூரமாக கொலை செய்கிறார்.
அந்த வழக்கு விசாரணை தெரிந்தே தவறான முறையில் நடந்து இருக்க, அது தெரியாமல் கடைசி நேரத்தில் வந்த அதியன், அதில் சம்பந்தப்படாத ஒருவரை என்கவுண்டர் செய்து விடுகிறார். அந்த வழக்கு மனித உரிமை அதிகாரியும், நீதிபதியுமான சத்ய தேவ் ( அமிதாப்) விசாரணை குழுவிடம் செல்கிறது.
அந்த அப்பாவிக்கு நீதி கிடைக்கும் விவகாரத்தில் ஜெயித்தது காக்கிச் சட்டையா? கருப்புச் சட்டையா?.. சரண்யா கொலையின் பின்னணியில் நடந்த கார்பரேட்டின் சதி வேலை என்ன உள்ளிட்ட கேள்விகளுக்கான பதில்களே வேட்டையன் படத்தின் கதை!
வேட்டையன் சொல்லும் நீதி என்ன?
கடந்த படத்தில், பழங்குடி மக்களுக்கு எதிரான அடக்குமுறைக்கு எதிராக குரல் கொடுத்த த. செ. ஞானவேல் இந்தப்படத்தில் என்கவுண்டர் சரியா? தவறா?.. தாமதமான நீதியின் பலன்...? நீட் தீர்வால் ஏழை மாணவர்கள் எப்படி பாதிக்கப்படுகிறார்கள் உள்ளிட்டவற்றை விவாதமாக எடுத்து முன் வைத்திருக்கிறார். படத்தில் என்கவுண்டருக்கு ஆதரவாக ரஜினியும், அதற்கு எதிராக அமிதாப்பும் நடக்கும் வாக்குவாதங்கள் மிக முக்கியமானவை..
குறிப்பாக, "சட்டம் கொடுப்பது நீதியா.. இல்லை தனி நபர் கொடுப்பது நீதியா? ".. " விரைவாக கிடைக்கும் நீதியே சரியான நீதி" .. " துப்பாக்கியை பயன்படுத்தும் போது, போலீஸ் அழுத்த வேண்டியது ட்ரிகரை அல்ல மனசாட்சியை" "குப்பத்து ஆட்களை நம்ப முடியாது என்றால் மாடி வீட்டு ஆட்களை நம்பலாமா?" "போலீசுக்கு முன் தீர்மானங்கள் இருக்கக்கூடாது" "மக்களுக்கு நீதியும், கல்வியும் சமமாக கிடைக்க வேண்டும் " உள்ளிட்ட வசனங்களில் இயக்குனருக்கே உரித்தான டச் இருந்தது.
ஆரம்பத்தில் ரஜினி படமாக ஆரம்பிக்கும் திரைப்படம்,.சிறிது நேரத்தில் முழுக்க, முழுக்க ஞானவேல் படமாக மாறி விடுகிறது. என்கவுண்டர் விவாதத்தின் பின்னணியில், நீட் தேர்வில் ஏழை மாணவர்கள் சந்திக்கும் பிரச்சினைகள், அதன் பின்னணில் இருக்கும் கார்ப்பரேட் பணப்பேராசை அனைத்தையும் அப்பட்டமாக போட்டு கிழித்து ஒரே கல்லில் இரண்டு மாங்காய்களை அடிக்க முயன்று இருக்கிறார் இயக்குனர். அதனால்தான் என்னவோ சில இடங்களில் பிரச்சார நெடி கொஞ்சம் தூக்கலாக இருந்தது அது நம்மை நெழியவும் வைத்தது.
அனிருத் இசை தேவையான அளவு இருக்கிறது. ஆனால், ரசிகர்களின் கூஸ் பம்ப்ஸ் மொமன்ட்டுகளுக்கான அனிருத் டச் மிஸ்ஸிங்.. கிட்டத்தட்ட 3 மணி நேரத்தை எட்டும் படத்தில் இருக்கும் அதிகப்படியான டீ டெயிலிங் சில இடங்களில் அயர்ச்சியை கொடுக்கிறது. ரஜினியின் கண்ணாடி மொமன்ட்... ரவுடி கும்பலை தூக்க வேண்டும் என்று போலீஸ் அதிகாரிகளிடம் ரஜினியின் பேசும் இடங்கள் செயற்கைத்தனமாக இருந்தது.

டாபிக்ஸ்