இராமேஸ்வரபுரத்துக்காரன்.. போலீஸ் சட்டை வாங்கிக்கொடுத்த சினிமா வாய்ப்பு.. வெற்றிமாறனின் தமிழ் யார் தெரியுமா?
இராமேஸ்வரபுரத்துக்காரன்.. போலீஸ் சட்டை வாங்கிக்கொடுத்த சினிமா வாய்ப்பு.. வெற்றிமாறனின் விடுதலை படத்தில் நடித்த தமிழ் யார்என்பதை இங்கே பார்க்கலாம்.
வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர்கள் சூரி,விஜய் சேதுபதி, மஞ்சு வாரியர், கிஷோர், கென் கருணாஸ், சேத்தன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்து கடந்த டிசம்பர் 20 அன்று வெளியான திரைப்படம் விடுதலை பாகம் 1. இளையராஜா இந்தப்படத்திற்கு இசையமைத்து இருக்கிறார். இந்தப்படத்தின் முதல் பாகம் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிலையில், இரண்டாம் பாகத்திற்கு மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பு நிலவியது. பெரும்பான்மையான மக்களுக்கு படம் பிடித்திருப்பதாகவே தெரிகிறது.
இந்தப்படத்தில் பல கதாபாத்திரங்கள் வரவேற்பை பெற்றாலும், அமுதன் கதாபாத்திரத்தில் நடித்த தமிழ் நடித்த அமுதன் கதாபாத்திரம் பெரிய வரவேற்பை பெற்று இருக்கிறது. அடிப்படையில் போலீஸ் அதிகாரியான இவர் வெற்றிமாறனின் உதவி இயக்குநராக பல வருடங்கள் பணியாற்றியவர். டாணாக்காரன் படத்தின் மூலம் இயக்குநராக மாறிய இவர், அசுரன், விடுதலை, ஜெய்பீம் உள்ளிட்ட பல படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமானார். இவர் அண்மையில் டேக் லெஃப்ட் யூடியூப் சேனலுக்கு வெற்றிமாறனுடன் பயணித்த கதையை பற்றி பேசி இருக்கிறார்.
வெற்றியின் உதவி இயக்குநர்
இது குறித்து அவர் பேசும் போது, ‘அடிப்படையில் நான் ஒரு போலீஸ் அதிகாரி; எனக்கு சொந்த ஊர் ராமேஸ்வரம்; கிட்டத்தட்ட 13 வருடங்களாக நான் காவல்துறையில் பணியாற்றி இருக்கிறேன். டெல்லி திஹார் சிறையில் மூன்று வருடங்கள் வேலை செய்து இருக்கிறேன். இந்த 13 வருடங்களையும் சினிமாவை சுற்றியே வேலை செய்தேன். அதாவது சென்னை வந்தால் இங்குள்ள சினிமா நண்பர்களை சந்தித்து பேசுவேன். டெல்லியில் இருந்து விடுமுறைக்கு வந்தால் கூட, நான் சென்னையில் தான் தங்குவேன்.
சென்னை வந்தால் இங்குள்ள சினிமா நண்பர் யாரையாவது நான் சந்தித்து பேசவில்லை என்றாலோ, திரைப்படம் பார்க்க வில்லை என்றாலோ எனக்கு தூக்கமே வராது. அப்படித்தான் நான் ட்ராவல் செய்து இந்த சினிமாவிற்குள் வந்தேன். ஒரு கட்டத்தில் எனக்கு போலீஸ் வேலை வெறுத்து விட்டது. ஒரு இரண்டு வருடங்கள் சினிமாவில் முயற்சி செய்து கிடைக்கவில்லை என்றால், திரும்பிவிடலாம் என்று முடிவு செய்து, ஒரு நாள் யாரிடமும் சொல்லாமல் தலைமறைவாகிவிட்டேன்.
ஜானகிராமன் செய்த உதவி
பின்னர் சென்னைக்கு வந்து ஒரு சினிமா நண்பர்கள் ரூமில் தங்கியிருந்தேன். அங்கு ஜானகிராமன் என்பவர் இருந்தார். அவர் அப்போது வேல்ராஜன் உதவியாளராக இருந்தார். வெற்றிமாறன் விசாரணை திரைப்படம் ஆரம்பிக்கும் பொழுது, இந்த படத்தில் ஒரு போலீஸ்காரனின் இன்புட் இருந்தால் நன்றாக இருக்கும் என்று சொல்ல, ஜானகிராமன் என்னுடைய பெயரை பரிந்துரை செய்து இருக்கிறார். இதையடுத்து வெற்றி சார் என்னை அழைத்து பேசினார்; ஒரு மணி நேரம் பேசி இருப்பார்.
முடித்துவிட்டு ஒளிப்பதிவாளர் வேல்ராஜிடம், வேல்ராஜ் இவன் நமக்கு சரியாக இருப்பான் என்று சொல்லி சென்று விட்டார். அதன் பின்னர் நீண்ட நாட்களுக்குப் பிறகு, அவரே என்னை உதவியாளராக தேர்ந்தெடுத்ததிற்கான காரணத்தை பகிர்ந்தார். அப்போது அவர், நீ ஒரு போலீஸ்காரனாக இருந்த பொழுதும், நீ போலீசை பற்றியே விமர்சனம் செய்தாய். உனக்கு போலீஸ் காரன் என்ற பெருமிதம் இல்லை. அதனால் தான் உனக்கு வாய்ப்பு கொடுத்தேன்’ என்று கூறினார்.
டாபிக்ஸ்