Veenai S.Balachander: தமிழ் சினிமாவின் ஹிட்ச்காக்.. த்ரில்லர் நாயகன்.. இயக்குநர்கள் மகேந்திரன், மணிரத்னம் மானசீக குரு
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Veenai S.balachander: தமிழ் சினிமாவின் ஹிட்ச்காக்.. த்ரில்லர் நாயகன்.. இயக்குநர்கள் மகேந்திரன், மணிரத்னம் மானசீக குரு

Veenai S.Balachander: தமிழ் சினிமாவின் ஹிட்ச்காக்.. த்ரில்லர் நாயகன்.. இயக்குநர்கள் மகேந்திரன், மணிரத்னம் மானசீக குரு

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Jan 18, 2025 06:00 AM IST

Veenai S.Balachander Birthday: தமிழ் சினிமாவின் ஹிட்ச்காக் என போற்றும் விதமாக வித்தியாசமான த்ரில்லர் கதைகளின் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர் வீணை எஸ். பாலசந்தர். தமிழில் பாடல் இல்லாமல் வெளியான முதல் படத்தை இயக்கிய இயக்குநராக திகழ்கிறார்.

தமிழ் சினிமாவின் ஹிட்ச்காக்.. த்ரில்லர் நாயகன்.. இயக்குநர்கள் மகேந்திரன், மணிரத்னம் மானசீக குரு
தமிழ் சினிமாவின் ஹிட்ச்காக்.. த்ரில்லர் நாயகன்.. இயக்குநர்கள் மகேந்திரன், மணிரத்னம் மானசீக குரு

சிறுவயதிலேயே இசையிலும், நடிப்பிலும் முத்திரை

எஸ். பாலசந்தரின் தந்தை வழக்கறிஞராக இருந்தாலும் இசை மீது தந்தைக்கு இருந்த நாட்டம் இவரிடமும் ஒட்டிக்கொள்ள 7 வயிதிலேயே மேடை ஏறி இசை உலகில் புகழ் பெற்றார். 1932இல் சாந்தாராம் இயக்கத்தில் வெளஇயான சீதா கல்யாணம் படத்தில் கஞ்சிரா வாசிக்கும் சிறுவனாக கூட்டத்தில் ஒருவனாக வந்தாலும் தனது இயல்பான நடிப்பால் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். இந்த படத்தில் இவரது தந்தை, அக்கா என குடும்பத்தினர் அனைவரும் நடித்திருப்பார்கள்.

12 வயசுல சிதார் கருவி வாசிச்சு தனிக்கச்சேரி நடத்தும் அளவில் திறன் பெற்ற எஸ். பாலசந்தர், அதன் பிறகு வீணை வாசிக்க பயிற்சி பெற்று வீணை கலைஞர் ஆனார். பாரம்பரியம் மிக்க கர்நாடக இசையை விட இந்துஸ்தானி, மேற்கத்திய இசையில் புலமை பெற்றவராக இருந்தார்.

இந்தியாவில் மட்டுமல்லாமல் உலகின் பல்வேறு நாடுகளிலும் இசைக்கச்சேரி நடத்தியதோடு, மேஜிக் மியூசிக் ஆஃப் இந்தியா, சவுண்ட்ஸ் ஆஃப் வீணா போன்ற சில இசைத்தட்டுகளையும் வெளியிட்டு புகழ் பெற்றார்.

வீணை இசை மீதான காதலால் அந்த கருவியுடன் இரண்டறக் தன்னை இணைத்து கொண்டார்.

தமிழ் சினிமாவின் ஹிட்ச்ஹாக்

திர்ல்லர் சினிமா என்ற நினைவுக்கு வரும் பெயராக ஹாலிவுட் இயக்குநர் ஹிட்ச்காக் இருந்து வருகிறார். அந்த வகையில் பிளாக் அண்ட் ஒயிட் சினிமா காலகட்டத்தில் த்ரில்லர், திகில் படங்களின் மூலம் தமிழ் சினிமாவின் ஹிட்ச்ஹாக் ஆக தன்னை அடையாளப்படுத்தி கொண்டார் எஸ். பாலசந்தர்.

நடிகராக சினிமாவில் அறிமுகமான இவர், பின்னர் 1948இல் வெளியான இது நிஜமா படத்தின் துணை இயக்குநர், திரைக்கதை ஆசிரியாக இருந்தார். அதே ஆண்டில் வெளியான என் கணவர் என்ற படம் மூலம் இயக்குநர் ஆனார்.ய இந்த இரு படங்களும் த்ரில்லர் பாணியில் உருவான படங்கள் தான். தனது படங்களுக்கு இவரே இசையமைப்பாளராகவும் பணியாற்றி வந்துள்ளார்.

தொடர்ந்து கைதி, தேவகி போன்ற படங்களை இயக்கிய இவர், பின்னர் சில படங்களில் நடிகராக முத்திரை பதித்தார்.

தமிழில் பாடல் இல்லாத முதல் படம்

ஒரு சம்பவத்தை கதையில் இடம்பெறும் பல்வேறு கதாபாத்திரங்கள் தங்களது கோணத்தில் வெளிப்படுத்தும் ரோஷோமோன் எபெக்ட் பாணியிலான திரைக்கதை அமைப்பில் விருமாண்டி படத்தை உருவாக்கியிருப்பார் கமல்ஹாசன். இந்த கதை சொல்லல் பாணி ரசிகர்களுக்கு புது வித அனுபவத்தை தந்ததோடு, தமிழ் சினிமாவுக்கும் புதுமையாக அமைந்தது.

ஆனால் இந்த ரோஷோமோன் எபெக்ட்டிஸ் 1954ஆம் ஆண்டிலேயே சிவாஜி கணேசன் நடிப்பில் அந்த நாள் என்ற படம் இயக்கி வித்தியாசமாக கதை சொல்லியவர் எஸ். பாலசந்தர்.

தமிழில் முதல் நியோ நாயர் பாணியிலான இந்த படத்தை இயக்கும்போது இவருக்கு வயது 27 தான். பல நடிகர்களை வைத்து உருவாக்கப்பட்டு திருப்தி அடையாமல் போக, இறுதியில் அப்போது பிஸியான நடிகராகவும், வளர்ந்து வரும் ஹீரோவாகவும் இருந்த சிவாஜி கணேசனை வைத்து இறுதியாக உருவாக்கினார். படமும் சூப்பர் ஹிட் ஆனதோடு, கல்ட் கிளாசிக் அந்தஸ்தை பெற்றது.

ஹீரோவாக வெற்றிக்கொடி நாட்டி வந்த சிவாஜி கணேசன் இந்த படத்தில் நெகடிவ் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். அத்துடன் தமிழ் சினிமாவில் பாடல் இல்லாமல் வந்த முதல் படம் என்ற பெருமையையும் அந்த நாள் பெற்றது. அந்த வகையில் பார்த்தால் கமலுக்கு முன்னோடியாக இவர் திகழ்ந்துள்ளார்.

இந்த படத்துக்கு பின்னர் நடிப்பில் கவனம் செலுத்தி வந்த எஸ். பாலசந்தர் பின்னர் மீண்டும் எது நிஜம், பூலோக ரம்பை, மரகதம், அவனா இவன், பொம்மை, நடு இரவில் போன்ற படங்களை இயக்கினார்.

வித்தியாசங்களின் விரும்பி

தனது ஒவ்வொரு படங்களிலும் திரைக்கதை, இசை, காட்சிமைப்பு என அனைத்திலும் வித்தியாசம் காட்டும் வித்தியாச விரும்பியாக இருந்துள்ளார். தான் இயக்கிய பொம்மை என்ற திகில் படத்தில் பணியாற்றிய அனைத்து டெக்னீஷ்யன்களையும் படத்தின் இறுதிக்காட்சியில் ரசிகர்களுக்கு அறிமுகம் செய்து சர்ப்ரைஸ் கொடுத்திருப்பார்.

இவரது படங்களின் திரைக்கதை, காட்சி கோணங்கள், இசையமைப்பு பிரமிக்க வைப்பவையாக அமைந்திருக்கும். மறைந்த இயக்குநர் மகேந்திரன் இவரை தனது மானசீக குருவாக குறிப்பிட்டுள்ளார். அதேபோல் இயக்குநர் மணிரத்னமும், எஸ். பாலசந்தர் தான் தனது இன்ஸ்பிரேஷன் என தெரிவித்துள்ளார்.

சினிமா படங்களுக்கும், கலைஞர்களுக்கு இந்திய அரசு சார்பில் விருதுகள் கொடுக்கும் முறை 1954இல் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த விருதுகளை அறிமுகம் செய்யப்பட்ட முதல் ஆண்டிலேயே இவரது அந்த நாள் படம் சிறந்த படத்துக்கான தேசிய விருதை வென்றது. இவர் இயக்கிய எது நிஜம் தெலுங்கு பதிப்பான எடி நிஜம் படமும் தேசிய விருதை வென்றது. இந்திய அரசு சார்பில் பத்மபூஷண் விருது இவருக்கு 1982ஆம் ஆண்டில் வழங்கப்பட்டு கெளரவிக்கப்பட்டார்.

தமிழ் சினிமாவில் வித்தியாச படைப்பாளியாகவும், வீணை இசை கலைஞராகவும் முத்திரை பதித்தை வீணை எஸ். பாலசந்தர் 98வது பிறந்தநாள் இன்று.

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.