Vairamuthu: சாகும்வரை சண்டையிடும் கொலைக்களம்; சாவைச் சேமித்த உலகத்தின் பெரிய உண்டியல்”- ரோம் கொலோசியம் பற்றி வைரமுத்து!
Vairamuthu: இதுவொரு சண்டைக் கூடம் வீரர்கள் தம்மோடும் பகைவரோடும் சிறைவாசிகளோடும் அடிமைகளோடும் மரணதண்டனைக் கைதிகளோடும் சிங்கம் புலி யானை முதலை முதலிய விலங்குகளோடும் சாகும்வரை சண்டையிடும் கொலைக்களம் இது - வைரமுத்து!

ரோம் நகரத்தில் இருக்கும் வைரமுத்து, அங்கு மிகவும் பிரசித்தி பெற்ற கொலோசியம் பற்றி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.
அந்த பதிவில், “ ரோம் நகரத்தில்
இருக்கிறேன்
ரோமானியப் பேரரசின்
எச்சங்களின் உச்சமான
கொலோசியம் என்னும்
வட்டரங்கின் வாசலில் நிற்கிறேன்
ரோம் நகரத்தின் மையத்தில்
கி.பி 70 முதல் 80 வரை
சுதையாலும் கல்லாலும்
கட்டப்பட்ட களம் இது
இதுவொரு
சண்டைக் கூடம்
வீரர்கள்
தம்மோடும் பகைவரோடும்
சிறைவாசிகளோடும்
அடிமைகளோடும்
மரணதண்டனைக் கைதிகளோடும்
சிங்கம் புலி யானை
முதலை முதலிய விலங்குகளோடும்
சாகும்வரை சண்டையிடும்
கொலைக்களம் இது
இதற்கு
மேற்கூரை கிடையாது
50,000 முதல் 80,000
பார்வையாளர்கள்
அமர்வதற்கான
படிமாடங்கள் கொண்டது
வீரர்களோடு சண்டையிடப்
பட்டினியால் பசியூட்டப்பட்ட
சிங்கங்களும் புலிகளும்
திறந்துவிடப்படுவதுண்டு
கொலோசியத்தின்
தொடக்கவிழாவின்
முதல் நூறு நாட்களில்
9000 விலங்குகளும்
1000 வீரர்களும்
பிளந்த மாமிசங்களாய்
இறந்து விழுந்த கதை இருக்கிறது
அங்கு சென்று நின்றதும்
நிகழ்கால ஓசைகள்
நிசப்தங்களாகிவிட்டன
வீரர்களின் வாளோசைகளும்
வெற்றியின் வாழ்க ஓசைகளும்
விலங்குகளின்
உறுமல்களும் கதறல்களும்
காலங்களின் ஓலங்களுமே
என் காதுகளில்
ஒலிக்கத் தொடங்கின
இது
சாவைச் சேமித்த
உலகத்தின் பெரிய உண்டியல்” என்று குறிப்பிட்டு இருக்கிறார்.
முன்னதாக, ஏ.ஆர்.ரஹ்மான் - வைரமுத்து கூட்டணி உடைந்ததற்கான காரணம் குறித்து திரைக்கடல் யூடியூப் சேனலுக்கு ராஜகம்பீரன் பேசி இருந்தார். அந்த பேட்டி இங்கே!
அவர் பேசும் போது, “இளையராஜாவுக்கும் வைரமுத்துவுக்கும் இடையிலான பயணம் ஆறு ஆண்டுகள் இருந்தது. அந்த நட்பில் விரிசல் ஏற்பட்ட உடன் வைரமுத்து ஏ ஆர் ரஹ்மானின் பக்கம் வந்தார். இளையராஜாவைப் பொறுத்தவரை, பாடல் வரிகளில் அவரது தலையீடானது இருக்கும். ஆனால் ரஹ்மானை பொறுத்த வரை, அந்த தலையீடானது இருக்காது. அதே நேரம் அவர் அதனை மேம்படுத்துவதற்கு என்ன செய்வது என்பதை பார்ப்பார். எல்லாவற்றிற்கும் மேலாக ஏ ஆர் ரஹ்மானை கவிதைகளின் ரசிகன்.
வைரமுத்து தான் எழுதிய ஒரு பாடலில் 12 வரிகள் இருக்கிறது என்றால், அதில் எட்டு வரிகளில் கவித்துவம் வருமாறு பார்த்துக்கொள்வார். உண்மையில் ஏ.ஆர்.ரஹ்மான் அதில் மயங்கி கிடந்தார் என்றே சொல்லலாம். இதனால் பிற பாடல் ஆசிரியர்களுக்கு ரஹ்மானிடம் பாடல் எழுதும் வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இது அவர்களுக்கு கோபத்தையும் உண்டாக்கி இருந்தது
தலைமுறை மாற்றம்
கிட்டத்தட்ட இந்த காம்போ 25 வருடங்களாக பயணித்தது அதன் பின்னர் தலைமுறை மாற்றத்தை முன்னிறுத்தி, ஏ ஆர் ரஹ்மான் அவரிடம் இருந்து சற்று விலகி, புது பாடல் ஆசிரியர்களுடன் வேலை பார்க்க ஆரம்பித்தார்.
வைரமுத்து உடனான விலகலுக்கு இன்னொரு காரணம், வேறு பாடல் ஆசிரியர்கள் தன்னிடம் பாடல் எழுதுவதற்கு இவர் ஒரு தடையாக இருக்கக் கூடாது என்றும் ஏ.ஆர்.ரஹ்மான் நினைத்தார்.
ஆனால் வைரமுத்துவை பொறுத்தவரை, அவர் எப்போதும் தன்னை ஒரு புது பாடல் ஆசிரியருடன் போட்டி போடும் இளைஞனாகவே நினைத்துக் கொள்வார். அதே போல அவருக்கு புது பாடல் ஆசிரியர்களுடன் நட்பு இருந்த போதினும், யாரும் தன்னை முந்தவில்லை என்ற கர்வம் அவருக்கு ஆழமாக உண்டு.
இதில் சின்மயில் விவகாரத்தால்தான் ஏ ஆர் ரஹ்மான் வைரமுத்து கூட்டணி உடைந்திருப்பதாக ஒரு தகவல் இருக்கிறது. சின்மயி போன்று, பாலியல் ரீதியாக குற்றச்சாட்டு வைக்கும் போது, அதில் உண்மையாக என்ன நடந்தது என்பது சம்பந்தப்பட்டவர்களுக்கே தெரியும்” என்று பேசினார்.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

டாபிக்ஸ்