‘உதயநிதி கூட ஒப்பிடாதீங்க.. விஜய்க்கு அங்கீகாரமே இல்லை’ வாகை சந்திரசேகர் அதிரடி பேட்டி!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  ‘உதயநிதி கூட ஒப்பிடாதீங்க.. விஜய்க்கு அங்கீகாரமே இல்லை’ வாகை சந்திரசேகர் அதிரடி பேட்டி!

‘உதயநிதி கூட ஒப்பிடாதீங்க.. விஜய்க்கு அங்கீகாரமே இல்லை’ வாகை சந்திரசேகர் அதிரடி பேட்டி!

Stalin Navaneethakrishnan HT Tamil
Published Aug 18, 2023 05:10 AM IST

‘உடனே எழுந்து வந்த கலைஞர், ‘எனக்கு வழுக்கை வந்ததற்கு தமிழ்வாணன் வருத்தப்படுகிறார். எனக்கு வருத்தமில்லை..’

நடிகர் வாகை சந்திரசேகர்
நடிகர் வாகை சந்திரசேகர்

‘‘40 ஆண்டுகளாக சினிமாவிலும், அரசியலிலும் இருக்கிறேன். பெரிய பொழுதுபோக்கு என்று எனக்கு எதுவும் இல்லை. இளைஞரா இருந்த போது, நண்பர்கள் இருந்தார்கள். அதுக்குப் பின் நண்பர்கள் கிடையாது.  எனக்கு பெரிய பொழுதுபோக்கும், ரிலாக்ஸூம் வீடு தான்.

சினிமா, அரசியல், பொதுவாழ்க்கை டென்ஷன் எல்லாம் தாண்டி, வீட்டு வந்தால் தான் ரிலாக்ஸ் கிடைக்கும். எனக்கு சின்ன வயதிலிருந்தே ஆழ்ந்த இறை நம்பிக்கை உள்ள குடும்பத்தில் இருந்து வந்தவன். திராவிட கொள்கையின் தீவிர தொண்டன் என்றும் என்னை சொல்ல முடியாது; அதே நேரத்தில் தீவிரமான பக்திமான் என்றும் கூற முடியாது. 

ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்கிற கொள்ளை உடையவன். யாரையும் தொந்தரவு பண்ண மாட்டேன், எனக்கு தோன்றியதை செய்வேன். நண்பா நண்பா திரைப்படத்திற்காக 2003ல் தேசிய விருது கிடைத்தது. ஷூட்டிங்கில் இருந்த போது, உலக தொலைக்காட்சி ஒன்றில் தான் செய்தி வந்தது. 

தலைவர் கலைஞர் தான் என்னிடம் முதன் முதலில் பேசி, தேசிய விருது வாங்கிய விபரத்தை என்னிடம் தெரிவித்தார். 1991 ல் கலைமாமணி விருது வாங்கினேன். இன்று யாருக்கு கலைமாமணி விருது வழங்குவது என்பதை தீர்மானிக்கும் இடத்தில் இருக்கிறேன். 

இளைஞனாக நடிக்கும் போது என்னுடைய சுருழ் முடி, பிரபலமாக இருந்தது. இன்று எனக்கு முடியே இல்லை. நிறைய பேர் விக் வைக்கச் சொன்னார்கள். எனக்கு இது தான் எதார்த்தமாக இருப்பதால், நான் இதை தான் விரும்புகிறேன். சிலர் இதுவே எனக்கு நன்றாக இருப்பதாக கூறினார்கள்.

45 வயதில் கலைஞருக்கு வழுக்கை வரத் தொடங்கியது, ஒரு விழாவில் கல்கண்டு ஆசிரியர் தமிழ்வாணன் பேசும் போது, ‘‘கலைஞருக்கு எப்படி இருக்கும் முடி, வழுக்கை விழுந்துவிட்டதே’’ என்று பேசினாராம். உடனே எழுந்து வந்த கலைஞர், ‘எனக்கு வழுக்கை வந்ததற்கு தமிழ்வாணன் வருத்தப்படுகிறார். எனக்கு வருத்தமில்லை. இது கோடை காலம், கடைக்கு இளநீர் வாங்கப் போனால் முத்திய இளநீரா கேட்கிறோம்? வழுக்கை தானே கேட்கிறோம். அது மாதிரி, இந்த வழுக்கை சுகமான வழுக்கை’’ என்று கூறினார். அது மாதிரி தான் எனக்கும். 

நான் தொடர்ந்து நடித்துக் கொண்டு தான் இருக்கிறேன். மாநாடு, செல்ஃபி பண்ணேன், இப்போ ஜப்பான் பண்ணிட்டு இருக்கேன். தமிழ் சினிமாவின் வளர்ச்சி இப்போ பயங்கரமா இருக்கு, அதோடு பயணிப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. 

எம்.ஜி.ஆர்., சிவாஜி இருவரும் சினிமாவில் இருந்து தான் அரசியலுக்கு வந்தார்கள். எம்.ஜி.ஆர்., வெற்றி பெற்றார். சிவாஜி வெற்றி பெற முடியவில்லை. இங்கு முடிவு எடுப்பவர்கள் மக்கள் தான். சினிமாவில் இருந்து வந்தவர்கள் எல்லாம் ஜெயிப்பதில்லை. 

விஜய் அரசியலுக்கு வருவதாக கூறப்படுகிறது. நல்லது செய்ய யார் வேண்டுமானாலும் வரலாம். மக்கள் அங்கீகரிக்க வேண்டும். சினிமா நடிகர்களை பார்ப்பது மாதிரி உதயநிதியை பார்க்க முடியாது, அவர் வேறு. பாரம்பரியம், அரசியல், தாத்தா, தந்தை என்று அனுபவத்தை பெற்றவர் உதயநிதி. 

தேர்தல் களத்தில் மக்களை சந்தித்து, மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட அரசியல்வாதி உதயநிதி. அங்கீகரிக்கப்பட்ட தலைவராக உதயநிதி இருக்கிறார். விஜய்க்கு இன்னும் அங்கீகாரமே கிடைக்கவில்லை. இனிமே தான் அவர்களுக்கு அங்கீகாரமே கிடைக்க வேண்டும். ஆனால், உதயநிதி அங்கீகாரம் பெற்று களத்தில் நிற்பவர்,’’
என்று அந்த பேட்டியில் வாகை சந்திரசேகர் கூறியுள்ளார்.