23 years of Unnai Kodu Ennai Taruven: வித்யாசமான கதைக்களம் இருந்தும் அஜித்துக்கு கை கொடுக்காத உன்னைக்கொடு என்னைத்தருவேன்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  23 Years Of Unnai Kodu Ennai Taruven: வித்யாசமான கதைக்களம் இருந்தும் அஜித்துக்கு கை கொடுக்காத உன்னைக்கொடு என்னைத்தருவேன்

23 years of Unnai Kodu Ennai Taruven: வித்யாசமான கதைக்களம் இருந்தும் அஜித்துக்கு கை கொடுக்காத உன்னைக்கொடு என்னைத்தருவேன்

Priyadarshini R HT Tamil
Published May 26, 2023 07:10 AM IST

அவள் வருவாளாவில் தொடங்கிய அஜித் - சிம்ரன் ஹிட் ஃபார்முலாவில் சற்று சறுக்கலை ஏற்படுத்திய படம் உன்னைக்கொடு என்னைத்தருவேன். அஜித் வளர்ந்து வந்த காலகட்டத்தில் அவருக்கு ஃபளாப் கொடுத்த திரைப்படம் என்றால், அது உன்னைக்கொடு என்னை தருவேன் திரைப்படம். 23 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கிறது அந்தப்படம்.

உன்னைக்கொடு என்னை தருவேன் பட போஸ்டர்
உன்னைக்கொடு என்னை தருவேன் பட போஸ்டர்

அஜித் ஒரு ராணுவ அதிகாரியால் வளர்க்கப்படுகிறார். அவரது பிறப்பு மற்றும் தாய், தந்தை யார் என்பது உள்ளிட்ட எதையும் வெளியில் காட்டிக்கொள்ளமாட்டார். அவர் தேசபக்திமிக்க ஒரு ராணுவ வீரனாகவும், நாட்டிற்காக உயிரையும் கொடுக்க தயங்காதவராகவும் அந்த ராணுவ அதிகாரி அவரை வளர்த்திருப்பார். 

ஊட்டியில் உள்ள ராணுவ பயிற்சி முகாமில் சிறந்த ராணுவ வீரனாக இருக்கும் அவருக்கு பயிற்சி முகாமுக்கு வரும் ராணுவ அதிகாரியின் மகள் சிம்ரனுடன் காதல் ஏற்படுகிறது. பயிற்சி முடித்து எல்லைக்கு செல்ல தயாராகிக்கொண்டிருக்கும் கட்டுக்கோப்பான ராணுவ வீரன் காதலில் விழுந்து விடுகிறான்.

சிம்ரன் வீட்டில் இந்தக்காதலை ஏற்றுக்கொள்கிறார்கள். அந்த சந்தோசத்தில் காதலர்கள் காதல் உலகில் இறக்கையின்றி பறந்துகொண்டிருக்கும் வேளையில், எல்லையில் நடந்த குண்டுவெடிப்பில் சிம்ரனின் தந்தை இறந்துவிட, அதைக்கேட்ட அதிர்ச்சியில் அவரது தாயும் இறந்துவிட, நாட்டுக்கு உழைப்பதே தனது தலையாய கடமை என்று இருக்கும் காதலனை யுத்தத்தில் பலி கொடுக்க எந்த காதலிதான் விரும்புவாள்? 

இதனால், சிம்ரனுக்கும், அஜித்துக்கும் இடையே வாக்குவாதம் நடைபெறுகிறது. சிம்ரன், நானா? அல்லது நாடா? என்று முடிவெடுக்கும்படி இரண்டு தேர்வுகளை வழங்குகிறார்.

அப்போதுதான் அஜித் தனது கதையை சிம்ரனிடம் கூறுகிறார். தான் ஒரு பயங்கரவாதிக்கும், அவரை திருத்த வந்த கன்னியாஸ்திரிக்கும் பிறந்த குழந்தை என்ற உண்மையை கூறுகிறார். பயங்கரவாதியான தனது தந்தை திருந்தி, இந்த நாட்டிற்கு ஏதாவது செய்ய விரும்பினார். ஆனால், அவர் தலைமேல் தொங்கிய தூக்கு கயிறு அதற்கு அனுமதிக்கவில்லை. 

எனவே, கன்னியாஸ்திரியிடம், தனக்கு மட்டும் ஒரு குழந்தை இருந்திருந்தால், அவரை நாட்டிற்காக போராட வைக்கவேண்டும் என்பதே தனது கடைசி ஆசை என்று கூறுகிறார். இதைக்கேட்ட கன்னியாஸ்திரி, தேவாலயத்தில் இருந்து விலகிவிடுகிறார். 

அந்த பயங்கரவாதியின் கடைசி ஆசையை நிறைவேற்ற அவரது குழந்தையை சுமந்து அதை பெற்று ஒரு ராணுவ அதிகாரியிடம் கொடுத்து, அவனை சிறந்த ராணுவ வீரனாக் வளர்க்க வேண்டும் என்ற உறுதியை வாங்கிக்கொண்டு தற்கொலை செய்து விடுகிறார். எனவே தனது தந்தை மீதான பழிகளை துடைக்கவும், தாயின் தியாகத்திற்காகவும் இந்த நாட்டிற்கு சேவை செய்வது கட்டாயம் என்று கூறுகிறார். 

தன்னை திருமணம் செய்ய விரும்பினால் 12 ஆண்டுகள் காத்திருக்கும்படி சிம்ரனிடம், அஜித் கேட்டுவிட்டு எல்லை சென்றுவிடுகிறார். அவர் திரும்பி வந்து சிம்ரனை மணந்தாரா என்பது படத்தின் கதை.

நல்ல கதைக்களம்தான் எனினும் இந்தப்படம் அஜித்துக்கு ஹிட் கொடுக்கவில்லை. இந்தப்படத்தை எழுதி இயக்கியவர் கவி காளிதாஸ். ஆர்.பி.சௌத்ரி தயாரித்திருப்பார். எஸ்.ஏ.ராஜ்குமாரின் இசையில் உன்னைக்கொடு என்னைத்தருவேன் காதல் இதுதானே என்ற பாடல் ஹிட்டானது. நாசர், ராகவா லாரன்ஸ், பார்த்திபன், சுகன்யா, மணிவண்ணன், பாத்திமாபாவு, ரமேஷ் பாபு என பெரிய நடிகர் பட்டாளமே படத்திற்கு மேலும் கனம் சேர்த்திருப்பார்கள். 23 ஆண்டுகளை அந்தப்படம் இந்த தருணத்தில் பூர்த்தி செய்திருக்கிறது.