Ajith Kumar: அஜித்குமாருக்கு பத்மபூஷண் விருது அறிவிப்பு.. கிரிக்கெட் வீரர் அஸ்வினுக்கு பத்மஸ்ரீ விருது
Padma Bhusan For Ajith Kumar: குடியரசு தினத்தை முன்னிட்டு 2025ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழ் சினிமாவில் டாப் நடிகரான அஜித்குமாருக்கு பத்ம பூஷண் விருது அறிவித்து மத்திய அரசு கெளரவித்துள்ளது.

நாட்டின் மூன்றாவது உயரிய குடிமகன் என அங்கீகரிக்கும் பத்ம பூஷண் விருது நடிகர் அஜித்குமாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. நாட்டுக்காக உயர்நிலையில் சேவையாற்றயவர்களுக்காக வழங்கி கெளரவிக்கும் விருதாக பத்ம பூஷண் விருது இருந்து வருகிறது.
பத்ம விருதுகள் அறிவிப்பு
நாட்டின் 76வது குடியரசு தின விழா கொண்டாட்டம் நாளை கொண்டாடப்பட இருக்கும் நிலையில் 2025 ஆண்டுக்கான பத்ம விருதுகள் வென்றவர்களின் பெயர்களை மத்திய அரசு அறிவித்துள்ளது. நாட்டின் உயரிய விருதாக கருதப்படும் பத்மவிபூஷண், பத்மபூஷண், பத்மஸ்ரீ விருதுகள் வென்றவர்களின் பெயர்களை மத்திய அரசு அறிவித்துள்ளது.
கலை, சமூகப் பணி, மருத்துவம், கல்வி, விளையாட்டு, அறிவியல் என பல்வேறு பிரிவுகள் மற்றும் துறைகளில் சிறப்பாக பணியாற்றுவோருக்கு மத்திய அரசு சார்பில் ஆண்டுதோறும் பத்ம விருதுகள் வழங்கி கெளரவிக்கப்படுகிறது.
குடியரசு தினத்தை முன்னிட்டு 2025ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் மொத்தம் 139 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், 7 பத்ம விபூஷண் விருதுகள், 19 பத்ம விபூஷண் விருதுகள், 113 பத்ம ஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்தப் பட்டியலில் 23 பெண்கள் இடம்பெற்றுள்ளனர்
மூன்று பேருக்கு பத்மபூஷண் விருது
அஜித்குமாருடன் தமிழ்நாட்டை சேர்ந்த மேலும் இருவருக்கு பத்மபூஷண் விருது வழங்கப்பட்டுள்ளது. அதன்படி நடிகையும் பரதநாட்டிய கலைஞருமான ஷோபனா சந்திரகுமார், தொழிலதிபர் நல்லி குப்புசாமி ஆகியோருக்கு பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. கலை பிரிவில் சிறந்த பங்களிப்பை வெளிப்படுத்திய அஜித்குமாருக்கு இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
கிரிக்கெட் வீரர் அஸ்வினுக்கு பத்மஸ்ரீ விருது
தமிழ்நாட்டை சேர்ந்த கிரிக்கெட் ஆல்ரவுண்டர் ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது அத்துடன் வேலு ஆசான் (கலை), குருவாயூர் துரை (கலை), கே.தாமோதரன் (சமையற்கலை), லட்சுமிபதி ராமசுப்பையர் (இலக்கியம், கல்வி, இதழியல்), எம்.டி.ஸ்ரீனிவாஸ் (அறிவியல், கட்டிடக் கலை), புரசை கண்ணப்ப சம்பந்தன் (கலை), ராதாகிருஷ்ணன் தேவசேனாதிபதி (கலை), ஸ்ரீனி விஸ்வநாதன் (இலக்கியம் - கல்வி) மற்றும் சோபானா சந்திரகுமார் ஆகியோருக்கும் பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது
துபாய் கார் ரேஸில் வெற்றி
சமீபத்தில் துபாயில் நடைபெற்ற துபாய் 24H கார் ரேஸ் போட்டியில் அஜித்குமார் ரேஸிங் என்ற தனது அணியுடன் பங்கேற்றார் நடிகர் அஜித்குமார். இந்த போட்டியில் பல்வேறு இடர்பாடுகளை கடந்து அஜித்குமாரின் அணி மூன்றாவது இடத்தை பிடித்து சாதனை புரிந்தது. வெற்றி பெற்ற அஜித் குமார் இந்திய தேசிய கொடியை கையில் ஏந்தி சர்குட்டில் வலம் வந்தது உணர்வு பூர்வமான விஷயமாக அமைந்தது
இதைத்தொடர்ந்து தெற்கு ஐரோப்பிய போர்ஷே ஸ்பிரிண்ட் தொடர் 2025இல் அஜித் குமாரின் ரேஸிங் அணி பங்கேற்கவுள்ளது. போர்டிமாவே சர்குட்டில் நடந்த முதல் சுற்று போட்டிக்கு அஜித் குமார் தகுதி பெற்றுள்ளார். 4.653 கிமீ சுற்றுவட்டத்தை, ஒரு சுற்றுக்கு 1.49.13 வினாடிகள் அவர் சுற்றி முடித்தார். 5 பயிற்சி செஷன்களுக்கு பிறகு இது அவரது தனிப்பட்ட சிறந்த சாதனையாக அமைந்தது.
அஜித்குமார் நடித்திருக்கும் புதிய படமான விடாமுயற்சி பிப்ரவரி 6ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்த படத்தின் ரிலீஸை எதிர்நோக்கி காத்திருக்கும் அஜித் ரசிகர்களுக்கு, பத்மபூஷண் விருது அறிவிப்பு மகிழ்ச்சி செய்தியாக உள்ளது.
