தவெக மாநாடு.. அண்ணாவின் பெயரைக் குறிப்பிட்டு கடிதம் எழுதிய விஜய்.. 2026 வரை செய்யப் போவது இது தானாம்..
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  தவெக மாநாடு.. அண்ணாவின் பெயரைக் குறிப்பிட்டு கடிதம் எழுதிய விஜய்.. 2026 வரை செய்யப் போவது இது தானாம்..

தவெக மாநாடு.. அண்ணாவின் பெயரைக் குறிப்பிட்டு கடிதம் எழுதிய விஜய்.. 2026 வரை செய்யப் போவது இது தானாம்..

Malavica Natarajan HT Tamil
Published Oct 29, 2024 06:09 PM IST

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு வெற்றிகரமாக நிறைவடைந்ததை அடுத்து, இந்த மாநாடு சிறப்பாக நடக்க உதவிய அனைவருக்கும் விஜய் நன்றி தெரிவித்து கடிதம் வெளியிட்டுள்ளார்.

தவெக மாநாடு.. அண்ணாவின் பெயரைக் குறிப்பிட்டு கடிதம் எழுதிய விஜய்.. 2026க்காக இனி தீவிர அரசியல் செய்தல் தானாம்..
தவெக மாநாடு.. அண்ணாவின் பெயரைக் குறிப்பிட்டு கடிதம் எழுதிய விஜய்.. 2026க்காக இனி தீவிர அரசியல் செய்தல் தானாம்..

இதையடுத்து, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், மாநாட்டை வெற்றிகரமாக நடத்த உதவிய அனைவருக்கும் நன்றி தெரிவித்து கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இது அவர் மாநாடு தொடர்பாக எழுதும் 4வது கடிதம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

அந்தக் கடிதத்தில், அரசியலில், கடிதமுறை என்பது ஆகப்பெரும் ஆயுதம். பேரறிஞர் அண்ணா தந்த ஆயுதம். தமிழக மக்கள், நம் அனைவருக்கும் சொந்தமானது. அந்த உணர்வின் அடிப்படையில்தான் நாமும் அதைக் கையில் எடுத்தோம்.

களம் கண்டவர்களுக்கு நன்றி

மாநாடு நடத்த, பல்வேறு காரணங்களால், நமக்குக் கிடைத்தது மிகக் குறைந்த கால இடைவெளிதான். அதிலும் அடைமழை வேறு குறுக்கிட்டது. இருந்தும், எல்லாவற்றையும் சமாளித்து, சூறாவளியாகச் சுழன்று, நம் கழகத்தின் முதல் மாநில மாநாட்டை வெற்றிபெறச் செய்த உங்கள் அனைவருக்கும் என் மனம் நிறைந்த நன்றி எனக் கூறியுள்ளார்,

குறிப்பாக. மாநாட்டுப் பணிகளுக்காக, இடம் தேர்வில் இருந்து திடல் பணிகள் வரை மட்டுமல்லாது, மாநாடு வெற்றிகரமாக நிறைவுறும் வரையிலும், கழகத்தின் நிர்வாகிகள் அனைவரையும் ஒருங்கிணைத்து, அதி சிரத்தையுடன் பணியாற்றிய நம் கழகத்தின் பொதுச் செயலாளர் என்.ஆனந்த், உள்ளிட்ட விழுப்புரம் மாவட்ட பொறுப்பாளர்களுக்கும், அவசர காலத்தில் உதவிய மருத்துவர்களுக்கும், செவிலியர்களுக்கும் அவர் நன்றி தெரிவித்துள்ளார்.

தாய்மார்களுக்கு நன்றி

கடிதங்கள் வாயிலாக வெளியிட்ட என் வேண்டுகோள்களை ஏற்று, தங்கள் வீடுகளில் இருந்தே வெற்றிக் கொள்கைத் திருவிழாவைக் கண்டு களித்த அனைத்துத் தாய்மார்களுக்கும், முதியோர்களுக்கும் என் மனப்பூர்வமான நன்றி. மாநாட்டில் கலந்து கொள்வதற்காக, நீண்ட தூரம் பயணம் மேற்கொண்டவர்கள், இரவெல்லாம் கண்விழித்து, மதியம் வரை சுட்டெரித்த வெயிலையும் தாங்கிக் கொண்டவர்களின் அன்பை எப்படி ஏற்றிப் போற்றுவதென்றே தெரியவில்லை.

நான் பெற்ற பாக்கியம்

நமது மாநாட்டிற்குப் பேரலைகளாக எழுந்து வந்த பொதுமக்களுக்கு நன்றி சொல்ல, வார்த்தைகளைத் தேடித் தேடி கண்டுபிடிக்க இயலாமல் மவுனமொழி பேசி, கண்கள் கலங்க நிற்கிறேன். எதைப் பற்றியும் யோசிக்காமல், இந்த மண்ணைச் சேர்ந்த ஒற்றை மகனுக்காக, இத்தனை லட்சம் மனங்கள் திரண்டு நின்றது என் மனதை நெகிழச் செய்துவிட்டது. உங்களை உறவுகளாகப் பெற்றது என் பாக்கியமன்றி வேறென்ன?

கண்களில் ஆனந்தக் கண்ணீர் தேங்க. அரசியல் வெற்றிப் பயணத்தைத் தொடங்கி இருக்கிறோம். மாநாட்டில் கண்டகாட்சிகள் எல்லாம், கண்களிலும் மனதிலும் கல்வெட்டுகளாகவே பதிந்துவிட்டன. தமிழக அரசியல் வரலாற்றில், காலாகாலத்திற்கும் அழிக்கவே இயலாத பதிவுகள் அவை.

மாநாடு- அழகிய கவிதை

மாநாட்டில் நடந்தவற்றை அப்படியே வார்த்தைகளில் வடித்தெடுக்க நானொன்றும் கவிஞன் இல்லை. இருந்தும் நினைவுகளைப் பகிர்வதும்கூட ஓர் அழகிய கவிதைதானே. என் எல்லா வார்த்தைகளுக்கும் நீங்கள் உயிர் கொடுத்தீர்கள்.

நம்முடைய அரசியல் பயணத்தை, நாம் தொடங்கும் முன்னரே நம்மை விமர்சித்தவர்கள். இனி இன்னும் கடுமையாக விமர்சிப்பார்கள். அத்தகைய விமர்சனங்களில் ஏதேனும் ஆக்கப்பூர்வமான ஆலோசனைகள் தெரிந்தால், அவற்றை மட்டுமே கருத்தில் கொள்வோம். மற்றவற்றை மறந்தும்கூட மனதில் ஏற்றிவிடாமல் கடந்து செல்லப் பழகிக் கொள்வோம்.

தீவிரஅரசியல் செய்தல்

அனைத்து மக்களின் அத்தியாவசியத் தேவைகளை நோக்கிய உழைப்பு மட்டுமே இனி நம் அரசியல், அதைச் சாத்தியப்படுத்துதல் மட்டுமே நம் 'தீவிர அரசியல் செய்தலாக' இருக்கும்.

தமிழ்நாட்டு மக்களுக்காக, இன்னும் அதி தீவிரமாக, தீர்க்கமாக தீர்மானமாக உழைப்போம். தங்கள் மண்ணைச் சேர்ந்த மகன்களான, மகள்களான நம்மைத் தக்க இடம் நோக்கி, தகுதியான அங்கீகாரம் நோக்கி மக்களே அழைத்துச் செல்வர். அவர்களின் மனதில் நிறையும் அளவிற்கு, அதிக நம்பிக்கையுடனும் நன்றியுடனும் ரெட்டைப் போர்யானைகளின் பலத்துடன் உழைப்போம். வாகைப் பூக்கள் நமக்காகவே நாடெங்கும் பூத்துக் குலுங்கப் போகின்றன.

2026 இலக்கு

நமது மாநாட்டின் மூலம், வி.சாலை நமது வியூகச் சாலையாகவும், விவேக சாலையாகவும் மற்றும் வெற்றிச் சாலையாகவும் ஆனது. போலவே, நம்மை யாராலும் வெல்ல இயலாத வித்தியாசமான, யதார்த்த அரசியல் சாலைக்கும் நம்மை அழைத்துச் செல்லும்.

எப்போதும் ஆக்கப்பூர்வமான அரசியலையே கையிலெடுப்போம். 2026-ல் நம் இலக்கை அடைவோம். வெற்றி நிச்சயம் என அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டு தொண்டர்களுக்கு உத்வேகம் அளித்துள்ளார்.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.