"காத்திரமாக களமாடிய திருமகனார்".. பெரியாரைத் தொடர்ந்து பசும்பொன்னாரை வாழ்த்திய விஜய்
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் பிறந்தநாளை ஒட்டி, அவரை வாழ்த்தி மரியாதை செய்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 117வது பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பசும்பொன்னாருக்கு வாழ்த்து தெரிவித்த தவெக தலைவர் இதுதொடர்பாக அவரது எக்ஸ் தள பக்கத்தில், "அய்யா பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் திருமகனார். இந்திய விடுதலைக்காகக் காத்திரமாகக் களமாடியவர். மாவீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் படையை வலுப்படுத்தத் துணை நின்றவர். பாராளுமன்ற, சட்டமன்ற அரசியலில் முத்திரை பதித்த பேச்சுக் கலைப் பேரரசர். சமூக நல்லிணக்கம் பேணியவர். தமிழக அரசியலின் முக்கிய அடையாளங்களில் ஒருவராகவும் மாறிய, மகத்தான மனிதரை அவரது குருபூஜைத் திருநாளில் வணங்கி வாழ்த்திப் போற்றுவோம்." எனக் குறிப்பிட்டுள்ளார்.
அரசியலில் அடி எடுத்து வைத்த விஜய்
இதுவரை நடிப்பதில் மட்டும் கவனம் செலுத்தி வந்த விஜய், தற்போது தீவிர அரசியலிலும் கவனம் செலுத்தி வருகிறார். இவர் தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியைத் தொடங்கிய நிலையில், தமிழ்நாட்டு அரசியல் குறித்து மிகவும் உண்ணிப்பாக கவனித்து வருகிறார்.
