Major Sundarrajan: கட்டுக்கோப்பான உடல்.. கம்பீரமான உருவத்திற்கு சொந்தகாரர்.. மேஜர் சுந்தர்ராஜன் நினைவு தினம்!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Major Sundarrajan: கட்டுக்கோப்பான உடல்.. கம்பீரமான உருவத்திற்கு சொந்தகாரர்.. மேஜர் சுந்தர்ராஜன் நினைவு தினம்!

Major Sundarrajan: கட்டுக்கோப்பான உடல்.. கம்பீரமான உருவத்திற்கு சொந்தகாரர்.. மேஜர் சுந்தர்ராஜன் நினைவு தினம்!

Pandeeswari Gurusamy HT Tamil
Published Feb 28, 2024 05:45 AM IST

நாடக நடிகர், திரைப்பட நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் என்று கலைத்துறையில் அத்தனை ஜாம்பவான்களோடும் இணைந்து பணியாற்றிய பன்முக திறமை வாய்ந்த மேஜர். சுந்தர்ராஜன் அவர்கள் தனது 77 வது வயதில் 2003 பிப்ரவரி மாதம் 28 ஆம் தேதியான இன்று கல்லீரல் புற்றுநோய் காரணமாக மறைந்தார்.

மேஜர் சுந்தர்ராஜன்
மேஜர் சுந்தர்ராஜன்

தற்போதைய தேனி மாவட்டத்தில் உள்ள பெரியகுளத்தில் 1935 மார்ச் 17 ல் நடுத்தர பிராமண குடும்பத்தில் சீனிவாசன் மற்றும் பத்மாசினி தம்பதியினருக்கு மகனாக பிறந்தவர் சீனிவாசன் சுந்தர்ராஜன்.

சிறுவயதில் இருந்தே பள்ளியில் நடைபெறும் நாடகங்களில் ஆர்வமாக பங்கேற்றவர் கல்லூரியில் படிக்கும் போதும் தொடர்ந்தார். இளங்கலை அறிவியல் பட்டம் பெற்ற அவருக்கு நடிகர் பட்டமே பிடித்திருந்தது. ஆகவே கலை இலக்கிய பயணத்தை சென்னை சென்று அவருடைய மாமா வீரராகவன் அவர்கள் நடத்தி வந்த டிரிப்ளிகேஷன் பைன் ஆர்ட்ஸ் நாடக கம்பெனியில் சேர்ந்து நாடக நடிகராக மாறினார். தொலைபேசி துறையிலும் வேலை பார்த்து வந்தார்.

திரைப்பட உலகில் 1962 ல் வெளிவந்த பட்டினத்தார் என்ற படத்தில் சோழமன்னராக நடித்து கால் பதித்தார். கோமல் சுவாமி நாதன், பாலசந்தர் அவர்கள் நடத்தி வந்த பல நாடகங்கள் அவரை கலை உலகின் அடுத்த கட்டத்திற்கு நகர்த்தியது. மேஜர். சந்திரகாந்த் என்ற பெயரில் நடைபெற்ற நாடகத்தின் முக்கிய ரோலில் நடித்தார். அந்த நாடகம் 1966ல் பாலசந்தர் அவர்களால் திரைப்படம் ஆக மாற்றி எடுக்கப்பட்ட போது அதே லீடு ரோலில் சுந்தர்ராஜன் நடித்தார். 

மேஜர். சந்திரகாந்த் என்ற பெயரிலேயே வந்த திரைப்படத்தில் பார்வையற்ற மேஜர் கதாபாத்திரத்தில் தனது தெளிவான தமிழ் உச்சரிப்பு மற்றும் கர்ஜிக்கும் கம்பீர குரலில் அவரின் நடிப்பு மிரட்டியது. சீனிவாசன் சுந்தர்ராஜனை சினிமா ரசிகர்கள் மத்தியில் மேஜர். சுந்தர்ராஜன் ஆக இந்த படம் அடையாளப்படுத்தியது. தொடர்ந்து உயர் அதிகாரி வேடங்கள், செல்வந்தர் வேடங்கள், தோரணையான கதாபாத்திரங்கள் அவரை நோக்கி படையெடுக்கும் அளவுக்கு பிரபலமான நடிகர் ஆனார். அதுவும் ஒரே அர்த்தம் தரும் வார்த்தைகளை ஆங்கிலம் மற்றும் தமிழ் மொழியில் அடுத்தடுத்து பேசும் பாணியில் இவரை மிஞ்சும் ஆள் கிடையாது. மிகுந்த தெளிவான உச்சரிப்பும் நடிப்பில் உறுதி தொனிக்கும் கதாபாத்திரங்களும் ஏற்ற இறக்கங்களோடு பேசும் சிம்மக்குரலும் அவரின் தனி சிறப்பு.

சான்டோ சின்னப்பா தேவரின் தெய்வ செயல் என்ற படத்தின் மூலம் கதாநாயகன் ஆக நடித்தார். 1968 ல் வெளிவந்த உயர்ந்த மனிதன் திரைப்படத்தில் சிவாஜி கணேசன் அவர்களும் மேஜர் சுந்தர்ராஜன் அவர்களும் தங்களது இளமை காலத்தினை நினைவு படுத்தும் பாடலாக எம்.எஸ்.வி. அவர்கள் இசையில் வாலி வரிகளில் டி.எம்.எஸ். குரலில் "அந்த நாள் ஞாபகம் நெஞ்சில் வந்ததே நண்பனே" என்ற பாடல் இன்றும் நட்புக்கான "ஃபிரன்ட்ஸ் டே" பாடலாக இந்த காலத்திலும் கேட்டு கொண்டிருக்கிறது.

எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெயலலிதா, நாகேஷ், ஜெய்சங்கர், முத்துராமன், ஜெமினி கணேசன், சிவகுமார், ரஜினி காந்த், கமல்ஹாசன், பிரபு, சத்யராஜ், அர்ஜூன், சரத்குமார் என்று பெரும் புள்ளிகளோடு இணைந்து 800 க்கும் மேலான படங்களில் நடித்தவர். கதாநாயகனுக்குரிய அம்சங்கள் அனைத்தும் இருந்த போதிலும் அதிகமாக குணச்சித்திர வேடங்களில் நடித்தவர். அவர் ஏற்று கொண்ட கதாபாத்திரத்துக்கு நியாயம் சேர்ப்பதால் அந்த கதாபாத்திரம் ஆக நம்மை உணர வைப்பார். 

சிவாஜியின் நெருங்கிய நண்பர். சிவாஜி கணேசன் அவர்கள் "தமிழக முன்னேற்ற முன்னனி" என்ற பெயரில் கட்சி ஆரம்பித்த போது அவரோடு தேர்தல் பிரச்சாரம் வரை பணியாற்றியவர். தனது மனைவி பெயரில் சியாமளா பிலிம்ஸ் என்ற நிறுவனம் ஆரம்பித்து கற்பகம் வந்தாச்சு என்ற பெயரில் படத்தை தயாரித்து உள்ளார். கமல்ஹாசன் நடித்த "அந்த ஒரு நிமிடம்", சிவகுமார் நடிப்பில் வெளிவந்த "இன்று நீ நாளை நான்",சிவாஜி கணேசன் அவர்கள் நடிப்பில் கல்தூண்,நெஞ்சங்கள், ஊரும் உறவும் போன்ற படங்களை இயக்கி இருக்கிறார். 

கலைமாமணி விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளையும் பெற்ற இவருக்கு 1967 ல் வெளியான "ஆலயம்" என்ற படத்தில் ஏழை பிராமண எழுத்தாளர் கதாபாத்திரத்தில் திறம்பட நடித்ததை பாராட்டி ஜனாதிபதி விருதும் வழங்கப்பட்டது. இவருடைய ஒரே மகன் கௌதம் வானமே எல்லை என்ற படத்தின் மூலம் பாலசந்தர் அவர்களால் நாயகன் ஆக அறிமுகம் ஆகி தற்போது தொலைக்காட்சி தொடர்களில் பிசியாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

நாடக நடிகர், திரைப்பட நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் என்று கலைத்துறையில் அத்தனை ஜாம்பவான்களோடும் இணைந்து பணியாற்றிய பன்முக திறமை வாய்ந்த மேஜர். சுந்தர்ராஜன் அவர்கள் தனது 77 வது வயதில் 2003 பிப்ரவரி மாதம் 28 ஆம் தேதியான இன்று கல்லீரல் புற்றுநோய் காரணமாக மறைந்தார்.

அவர் மறைந்து போனாலும் தெளிந்த நீரோடையாய் அந்த கம்பீர குரல் நம் காதுகளில் ஒலித்து கொண்டே இருக்கும். 

அந்தநாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே நண்பனே.. நண்பனே.. நண்பனே..

இந்த நாள் அன்று போல் இன்பமாய் இல்லையே அது ஏன் ஏன் நண்பனே..

இந்த பாடல் கேட்கும் போதெல்லாம் மேஜர் நமது மனத்திரையில் வந்து விடும் மாயம் தான் அவர் கலையுலகின் வெற்றி எனலாம்.

Pandeeswari Gurusamy

TwittereMail
மு.பாண்டீஸ்வரி, 2010ம் ஆண்டு முதல் ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறார். முதுகலை இதழியல் பட்டத்தை மதுரை காமராஜர் பல்கலை கழகத்தில் பயின்ற இவர் தீக்கதிர் நாளிதழில் பணியாற்றினார். இவரது சொந்த ஊர் மதுரை மாவட்டம் திருமங்கலம். தற்போது கோவையில் வசித்து வருகிறார். கடந்த 2023 ஜனவரி மாதம் முதல் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் பணியாற்றி வருகிறார். தமிழகம், லைப்ஸ்டெயில் உள்ளிட்ட பிரிவுகளில் பங்களிப்பு செய்து வருகிறார்.
Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.