இந்த பாடலுக்கு எம்.ஜி.ஆர் ஒரு வீடு வாங்கும் அளவுக்கு பணம் கொடுத்தாராம்.. மனங்களை வென்ற பாடலாசிரியர் ஆலங்குடி சோமு!
ஆலங்குடி சோமு எழுதிய 200 பாடல்களுமே ஹிட் என்று சொல்லும் அளவிற்கு அவர் பாடல்களை கொடுத்திருப்பார். இவருக்கு இன்று பிறந்தநாள். இன்றைய தினம் அவரை நினைவு கூறுவோம்.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை அடுத்த ஆலங்குடியில், 1932ஆம் ஆண்டு டிசம்பர் 12ல் பிறந்தவர் சோமு. ஆலங்குடி சோமு என்றால் தான் அனைவருக்கும் தெரியும். பாடலாசிரியர், கவிஞர், திரைப்படத் தயாரிப்பாளர் என பன்முக தன்மை கொண்டவர் ஆலங்குடி சோமு.
திரையுலகில் இவரை பாடலாசிரியராக அறிமுகப்படுத்தியவர் அவரின் நண்பர் புரட்சிதாசன். தமிழ் திரையுலகில், 1960 முதல்1997 வரை 80 படங்களுக்கு 200 பாடல்கள் எழுதியுள்ளார். சின்னப்ப தேவரின் யானைப்பாகன் படத்தில் இடம்பெற்ற, 'ஆம்பளைக்குப் பொம்பளை அவசியம் தான்’என்ற நகைச்சுவை பாடல் தான் இவர் எழுதிய முதல் பாடல். இப்பாடலை எல் ஆர் ஈஸ்வரி, ராகவன் பாடியிருப்பார்கள்.
'கலைமாமணி' விருது வழங்கப்பட்டது
இரவு வரும் பகலும் வரும் உலகம் ஒன்று தான், மலருக்குத் தென்றல் பகையானால், ஆடலுடன் பாடலை கேட்டு, துள்ளுவதோ இளமை தேடுவதோ தனிமை உள்ளிட்ட ஏராளமான ஹிட் பாடல்களை எழுதியுள்ளார். கே.பாலசந்தரின் இயக்கத்தில், பத்தாம்பசலி என்ற படத்தையும், ஜெய்சங்கர் நடிப்பில், வரவேற்பு என்ற படத்தையும் சொந்தமாக தயாரித்தார். இவருக்கு, 1973-74ம் ஆண்டில், தமிழக அரசின், 'கலைமாமணி' விருது வழங்கப்பட்டது.