HBD Puneeth Rajkumar: நிஜ வாழ்விலும் ஹீரோவாக வலம் வந்த புனித் பிறந்த தினம் இன்று
புனித் ராஜ்குமாரின் பிறந்த நாளில் அவரது நினைவுகளையும், சாதனைகளையும் உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் ஹெச்டி தமிழ் மகிழ்ச்சி அடைகிறது.
சினிமா உலகம் என்பது புகழ் போதையில் மனிதர்களை தள்ளும். தனிமனிதனை சாதாரண மக்களிடம் இருந்து சினிமா ஏதோ ஒரு இடத்தில் பிரித்து விடும் என்ற நம்பிக்கை உள்ளது .அந்த நம்பிக்கைகளை எல்லாம் தகர்த்து எரிந்தவர் நடிகர் புனித் ராஜ் குமார். 45 இலவசபள்ளிகள், 26 அனாதை இல்லம், 16 முதியோர் இல்லம்,19 பசு காப்பகங்கள், சிறப்பு குழந்தைகளுக்கான பள்ளிகள், சுமார் 1800 மாணவர்களுக்கு இலவச கல்வி இவை எல்லாவற்றையும் பொழுது போக்காகாக அல்ல தன் வாழ்நாளின் கடமையாக எண்ணி ஆத்மார்த்தமாக செய்து வந்தார் நடிகர் புனித் ராஜ்குமார்.
ட்ரெண்டிங் செய்திகள்
யார் இந்த புனித் ராஜ் குமார்
கன்னட திரை உலகில் முன்னணி நட்சத்திரமாக வலம் வந்த சந்தன கடத்தல் வீரப்பனால் கடந்த 2000 ஆம் ஆண்டு கடத்தப்பட்ட ராஜ் குமாரின் மகன் தான் புனித் ராஜ்குமார். ராஜ்குமார் பர்வதம்மா தம்பதிக்கு 17 மார்ச் 1975ம் ஆண்டு சென்னையில் 5வது மகனாக பிறந்தவர் தான் புனித். ராஜ்குமாரின் 3 மகன்களுமே நடிகர்கள் தான். ஆனால் புனித் ராஜ்குமார் தான் ராஜ்குமாரின் அங்க அசைவுகளையும் அவரது நடிப்பு சாயல்களையும் கொண்டவர். தனது தந்தையை போலவே நன்றாக பாடக்கூடியவர். பல்வேறு ரியாலிட்டி ஷோக்களில் பங்கேற்று பாடியும் உள்ளார். ரியாலிட்டி நிகழ்ச்சிகளை தொகுத்தும் வழங்கி உள்ளார்
குழந்தை நட்சத்திரம்
பாரம்பரிய கலை குடும்பத்தில் பிறந்த புனித் ராஜ்குமார் தனது 6 மாதத்திலேயே குழந்தை நட்சத்திரமாக திரையில் தோன்றினார். 10 வயதில் தேசிய விருது பெற்றார். 14 வயதில் 14 படங்களில் நடித்திருந்தார். பெட்டடா ஹுவு என்ற படத்தில் நடித்ததற்காக சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான தேசிய விருதை பெற்றார். 2002ஆம் ஆண்டு வெளியான அப்பு படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார் புனித் ராஜ்குமார். அதிலிருந்து கன்னட மக்கள் புனித் ராஜ்குமாரை செல்லமாக அப்பு என்றே விழித்தனர்.
பாடகர் தயாரிப்பாளர் என தன் திரை உலக பயணத்தில் வேகம் காட்டியவர் புனித். கன்னட உலகின் பவர் ஸ்டார் என்று அழைக்கப்பட்ட புனித் வெறும் 29 படங்களில் மட்டுமே கதாநாயனாக நடித்துள்ளார். ஃபிலிம் ஃபேர் விருது, சைமா விருது, கர்நாடக மாநில அரசின் விருது என ஏராளமான விருதுகளை குவித்துள்ளார்
புனித் ராஜ்குமார் திருமணம்
புனித் ராஜ்குமார், கடந்த 1999ஆம் ஆண்டு டிசம்பர் 1ஆம் தேதி அஷ்வினி ரேவந்த் என்பவரை திருமணம் செய்தார். அஷ்வினி ரேவந்த் நண்பர் ஒருவரின் ஜிம்மில் அறிமுகமானார். நட்பாக ஆரம்பித்த அவர்களது பழக்கம் காலப்போக்கில் காதலாக மாறி திருமணத்தில் முடிந்தது. இவர்களுக்கு திரித்தி, வந்திதா என்ற இரண்டு மகள்கள் உள்ளனர்.
எப்போதும் உடற்பயிற்சியில் மிகுந்த ஆர்வம் கொண்ட புனித் கடந்த 2021ம் ஆண்டு அக்டோபர் 29ம் தேதி அன்று உடற்பயிற்சி கூடத்தில் பயிற்சிகளை மேற்கொண்டிருந்த போது மாரடைப்பு ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார். அவரது இறுதி ஊர்வலத்தில் பல லட்சக்கணக்கானோர் பங்கேற்றனர்.
புனித் ராஜ்குமார் திரையில் நடிகராக இருந்தாலும் உண்மையில் மனிதராகவே அனைவரிடமும் பழகி வந்துள்ளார். திடீரென தனது ரசிகர்களின் வீடுகளுக்கு சென்று அவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்துவார். ரசிகர்களின் குடும்பத்துடன் இணைந்து அங்கேயே உணவருந்துவார் என கன்னட திரை உலகினர் அவரை பற்றி இன்றும் சிலாகிக்கின்றனர். அது மட்டும் இல்லாம் வெளியில் தெரிந்தும் தெரியாமலும் தொடர்ச்சியாக ஏழை, எளிய மக்களுக்கு உதவுவது குழந்தைகளின் கல்விக்கு உதவுவது என நிஜ வாழ்க்கையிலும் ஹீரோவாகவே வாழ்ந்துள்ளார். புனித் ராஜ்குமாரின் பிறந்த நாளில் அவரது நினைவுகளையும், சாதனைகளையும் உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் ஹெச்டி தமிழ் மகிழ்ச்சி அடைகிறது.
டாபிக்ஸ்