‘ஆர்த்தி மட்டும் இல்லன்னா வாழ்க்கை அர்த்தமில்லாம போயிருக்கும்.. கல்யாணம் எதுக்காக’ - ரவி மோகன் த்ரோபேக்!
ஆர்த்தி மட்டும் என்னுடைய வாழ்க்கைக்குள் வரவில்லை என்றால், என்னுடைய வாழ்க்கை முழுமை அடைந்திருக்காது. நம்முடைய வாழ்க்கையில் கல்யாணம் என்பது மிக முக்கியமான ஒரு அங்கமாக இருக்கிறது; அப்படிப்பட்ட ஒரு அங்கத்தை நாம் ஏன் செய்கிறோம் என்ற கேள்வி இங்கு முக்கியமானது.

ஜெயம் ரவி - ஆர்த்தி விவாகரத்து தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் சென்று கொண்டிருக்கும் நிலையில், ஆர்த்தி கணவர் ரவியை மீண்டும் மீட்டெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். ஜெயம் ரவி - ஆர்த்தி விவாகரத்திற்கு பல காரணங்கள் கூறப்பட்டாலும், பாடகியும், ஹீலிங் தெரபிஸ்ட்டுமான கெனிஷா ரவி வாழ்க்கையில் நுழைந்ததே முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது.
பிரச்சினையின் ஆரம்பத்திலேயே அரசல் புரசலாக உலா வந்த இந்தத்தகவலை, முன்னதாக ஜெயம் ரவி மறுத்து வந்த நிலையில், நேற்றைய தினம் இவர்கள் இருவரும் திடீரென தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் மகளின் கல்யாணத்திற்கு ஜோடியாக வந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. இதைப்பார்த்து கொந்தளித்த ஆர்த்திர, ரவி மீது பல குற்றச்சாட்டுகளை அடுக்கி அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார்.
அவர்கள் இருவரும் ஒருவரையொருவர் புரிந்து கொண்டு மீண்டும் சேர வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாக இருக்கிறது. இந்த நிலையில், இவர்கள் இருவரும் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு பிஹைண்ட்வுட்ஸ் மற்றும் கலாட்டா சேனலுக்கு கொடுத்த பேட்டியைப் பார்க்கலாம்.
வாழ்க்கை முழுமை அடைந்திருக்காது.
அதில் ரவி பேசும் போது, ‘ஆர்த்தி மட்டும் என்னுடைய வாழ்க்கைக்குள் வரவில்லை என்றால், என்னுடைய வாழ்க்கை முழுமை அடைந்திருக்காது. நம்முடைய வாழ்க்கையில் கல்யாணம் என்பது மிக முக்கியமான ஒரு அங்கமாக இருக்கிறது; அப்படிப்பட்ட ஒரு அங்கத்தை நாம் ஏன் செய்கிறோம் என்ற கேள்வி இங்கு முக்கியமானது.
அந்தக் கேள்விக்கு எனக்கு ஒரு படத்தில் வந்த வசனம் என்னை ஈர்க்கும் வகையில் அமைந்திருந்தது. அதில், நீ எப்படி வாழ்ந்து இருக்கிறாய் என்பதை நீ சொல்லக்கூடாது. ஏனென்றால் நீ உனக்கு ஆதரவாக பேசுவதற்கு வாய்ப்பு இருக்கிறது. உன் உடன் இருப்பவர்கள் தான் நீ எப்படி வாழ்ந்து இருக்கிறாய் என்பது குறித்து சொல்ல வேண்டும்.
அவர்கள் தான் நீ எப்படிப்பட்டவன் நீ எப்படியான வாழ்க்கையை வாழ்ந்து இருக்கிறாய் என்பதை கூற வேண்டும். என்னுடைய வாழ்க்கையில் அந்த பதிலுக்கான பிரதிபலிப்பு என்னுடைய மனைவி ஆர்த்தி தான். வேறு யாரும் அதனை சொல்லவே முடியாது. இதற்காகத்தான் நாம் கல்யாணம் செய்து கொள்கிறோம் என்று நினைக்கிறேன். அதுதான் வாழ்க்கையானது அர்த்தமுள்ளதாக மாறுகிறது.” என்று பேசினார்.
குழந்தை பிறப்பின் போது ரவி நடந்து கொண்ட விதம்
ஆர்த்தி ரவி கலாட்டா சேனலுக்கு பேசும் போது, ‘முதல் குழந்தை பிறக்கும் பொழுது ரவி என்னுடன் இருக்க வேண்டும் என்று தான் நினைத்திருந்தார்; ஆனால், எதிர்பாராத விதமாக எனக்கு குழந்தை கொஞ்சம் சீக்கிரமாகவே பிறந்து விட்டது. அந்த சமயத்தில் ரவி எங்கேயும் எப்போதும் படத்திற்காக பாரீஸில் இருந்தார். ஆகையால் முதல் குழந்தை ஆரவ் அப்பா அருகில் இல்லாமல் பிறந்தான்.
நான் கர்ப்பமாக இருந்தபோது என்னை ரவி அருகில் இருந்து அப்படி பார்த்துக் கொண்டார். நான் வாந்தி எடுக்கும் பொழுது அதை கையில் ஏந்தினான். இரவில் நான் எழுந்து இதை சாப்பிட வேண்டும் அதை சாப்பிட வேண்டும் என்று சொல்லும் போது கூட, அவர் எழுந்து வருவார். கணவராக அவருக்கு நான் 100 மதிப்பெண்ணுக்கு மேல்தான் கொடுப்பேன்.” என்று பேசினார்.
ஜெயம் ரவி பேசும் போது, “முதல் குழந்தை பிறந்த போது என்னால் அருகில் இருக்க முடியவில்லை. அவளுக்கு பிரசவ வலி வந்தவுடன் எனது அப்பா தான் ஒவ்வொன்றாக எனக்கு போனில் அப்டேட் செய்து கொண்டிருந்தார். நான் பதட்டப்பட்டு கேட்டுக் கொண்டே இருந்தேன். ஒரு கட்டத்தில் குழந்தை பிறந்து விட்டது என்றார்; நான் உடனே குழந்தை எப்படி இருக்கிறது என்று கேட்கவில்லை;ஆர்த்தி எப்படி இருக்கிறாள் என்று தான் கேட்டேன்.
மயக்கம் போட்டு விழுந்து விட்டேன்.
ஆர்த்திக்கு அறுவை சிகிச்சை மூலமாகத்தான் குழந்தை பிறந்தது. இரண்டாவது குழந்தை பிறந்த போது நான் உடன் இருந்தேன். அப்போது ஆபரேஷன் தியேட்டருக்குள் என்னையும் அனுமதித்து இருந்தார்கள். அவள் சுயநினைவை இழந்த உடனே எனக்கு ஒரு மாதிரியாகிவிட்டது.
அதன் பிறகு கத்தியை வயிற்றில் மருத்துவர்கள் வைத்தார்கள்; அதை பார்த்த உடனேயே நான் மயக்கம் போட்டு விழுந்து விட்டேன். அதன் பிறகு நான் அருகில் சென்று, ஏதோ எனக்கு அறுவை சிகிச்சை செய்தது போல உட்கார்ந்து இருந்தேன். அப்போது என்னுடைய மாமியார் என்னை ஓங்கி அறைந்தார். அதன் பின்னர் அந்த மயக்கத்தில் இருந்து எழுந்து வந்து குழந்தையை பார்த்தேன்.” என்றார்.
