Viduthalai:குருதியைச் சுவைக்கும் குரூரம்;வெற்றி ஒரு பேராசிரியர்;திருமா புகழாரம்!
குருதியைச் சுவைக்கும் குரூரமான ஒடுக்குமுறை என்பதை அங்குலம் அங்குலமாக அம்பலப்படுத்துகிறது விடுதலை திரைப்படம் என திருமாவளவன் ட்வீட் செய்து இருக்கிறார்
எழுத்தாளர் ஜெயமோகனின் துணைவன் நாவலை அடிப்படையாக கொண்டு இரண்டு பாகங்களாக உருவாக்கப்பட்டுள்ளது விடுதலை திரைப்படம். ஆர்.எஸ். இன்போடெயின்மென்ட் நிறுவனத்தின் சார்பில் எல்ரெட் குமார் தயாரித்து உள்ள இந்த திரைப்படத்தை பிரபல இயக்குநர் வெற்றிமாறன் இயக்கி இருக்கிறார். கதையின் நாயகனாக சூரி நடித்து இருக்கிறார்.
ட்ரெண்டிங் செய்திகள்
வாத்தியாராக விஜய்சேதுபதி நடித்து இருக்கிறார். இவர்களுடன் கௌதம் மேனன், ராஜீவ்மேனன், சேத்தன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து உள்ளனர். 30 -03-2024 அன்று வெளியாகி மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வரும் இந்த திரைப்படத்தை விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் திருமாவளவன் பார்த்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் படம் குறித்தான தன்னுடைய கருத்துக்களை பதிவிட்டு இருக்கிறார்.
அதில், “ தோழர் வெற்றிமாறன் அவர்களின் விடுதலை திரைப்படம் பார்த்தேன்.அரசு -அதிகாரம் -ஆட்சி நிர்வாகம் ஆகியவற்றுக்கும் உழைக்கும் மக்களுக்கும் இடையிலான முரண்களை விவரிக்கிறது. அரசு என்றால் அதிகாரம்; அதிகாரம் என்றால் ஆயுதம்; ஆயுதம் என்றால் ஆணவம்; ஆணவம் என்றால் எளிய மக்களின் குருதியைச் சுவைக்கும் குரூரமான ஒடுக்குமுறை என்பதை அங்குலம் அங்குலமாக அம்பலப்படுத்துகிறது.
மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஆயுதம் தாங்கிய குழு எவ்வாறு ஆளும் வர்க்கத்துடன் எதிர்வினையாற்றுகிறது என்பதையும் அதனால் ஏற்படும் விளைவுகளையும் ஆழமான உரையாடலுக்கு உட்படுத்துகிறது. தோழர் வெற்றி.மாறன் அவர்கள் ஒரு படைப்பாளராக மட்டுமின்றி வர்க்க முரண்களை விவரிக்கும் பேராசிரியராகவும் வெளிப்படுகிறார்.
மக்களை அமைப்பாக்குவதும் அரசியல்படுத்துவதும் இன்றியமையாத ஒரு தேவை என்பதை உணர்த்துகிறார். வழக்கம் போல இது'வெற்றிமாறன் படைப்பு' என முத்திரை பதித்துள்ளார்.” என்று குறிப்பிட்டு இருக்கிறார். நேற்றைய தினம் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானும் படத்தை பார்த்து வெற்றிமாறனை பாராட்டியது குறிப்பிடத்தக்கது.
டாபிக்ஸ்