காமெடி நடிகர் வீட்டில் கொள்ளை, வேட்டையனுக்கு வேட்டு வைத்த மழை..புதிய பொறுப்பில் ராஷ்மிகா! டாப் சினிமா செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  காமெடி நடிகர் வீட்டில் கொள்ளை, வேட்டையனுக்கு வேட்டு வைத்த மழை..புதிய பொறுப்பில் ராஷ்மிகா! டாப் சினிமா செய்திகள்

காமெடி நடிகர் வீட்டில் கொள்ளை, வேட்டையனுக்கு வேட்டு வைத்த மழை..புதிய பொறுப்பில் ராஷ்மிகா! டாப் சினிமா செய்திகள்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Published Oct 16, 2024 11:25 PM IST

காமெடி நடிகர் வீட்டில் நகைகள் கொள்ளை, வேட்டையன் வசூலுக்கு வேட்டு வைத்த மழை ராஷ்மிகாவுக்கு கிடைத்த புதிய பொறுப்பு உள்பட இன்றைய டாப் சினிமா செய்திகள் பற்றி பார்க்கலாம்.

காமெடி நடிகர் வீட்டில் கொள்ளை, வேட்டையனுக்கு வேட்டு வைத்த மழை..புதிய பொறுப்பில் ராஷ்மிகா, டாப் சினிமா செய்திகள்
காமெடி நடிகர் வீட்டில் கொள்ளை, வேட்டையனுக்கு வேட்டு வைத்த மழை..புதிய பொறுப்பில் ராஷ்மிகா, டாப் சினிமா செய்திகள்

மீண்டும் படம் இயக்கும் நடிகர் அர்ஜுன்

தமிழ் சினிமாவில் நடிகராகவும், இயக்குநராகவும் வலம் வரும் அர்ஜுன் தற்போது குணச்சித்திரம், வில்லன் கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். இவர் கடைசியாக தனது மகள் ஐஸ்வர்யாவை வைத்து சொல்லிவடவா என்ற படத்தை இயக்கியிருந்தார்.

இதன் பின்னர் தற்போது 6 ஆண்டுகள் கழித்து மீண்டும் படம் இயக்கவுள்ளார். சீதா பயணம் என்ற பெயரில் உருவாகும் அந்த படத்தில் நடிக்க இருக்கும் நடிகர், நடிகைகள் குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது

மேடையில் நடித்தபோது உயிரிழந்த டூப் சிவாஜி கணேசன்

மறைந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசன் போல் தோற்றத்தில் இருந்து வரும் அசோகன் முனியாண்டி என்பவர் மேடையில் நடித்துக்கொண்டிருக்கும்போதே உயிரிழந்துள்ளார். இதுதொடர்பான விடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளன.

சிவாஜி கணேசனின் சிவகாமியின் செல்வன் படத்தில் இடம்பெறும் உள்ளம் ரெண்டு என்ற பாடலுக்கு பெர்பார்ம் செய்து கொண்டிருக்கையில் மேடையிலேயே சுருண்டு விழுந்து அவர் உயிரிழந்திருப்பது பார்வையாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

உடல்நல பிரச்னையால் சினிமாவில் இருந்து பிரேக் - துல்கர் சல்மான்

தற்போது நடித்து வரும் லக்கி பாஸ்கர் படத்தை தொடர்ந்து சினிமாவில் இருந்து குட்டி பிரேக் எடுக்கப்போவதாக நடிகர் துல்கர் சல்மான் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் பேட்டி ஒன்றில், "சினிமா படங்களில் நடிப்பதிலேயே கவனத்தை செலுத்தியதால் என் உடல் நிலையில் கொஞ்சம் அக்கறை காட்ட தவறிவிட்டேன். சில உடல்நல குறைபாடுகள் காரணமாகத்தான் நடிப்பதற்கு தற்காலிக இடைவெளி விட்டுள்ளேன், இது யாருடைய தவறும் அல்ல. எனக்கு ஒரு சிறிய இடைவெளி தேவைப்பட்டது, அவ்வளவுதான்" என்று கூறியுள்ளார்.

காமெடி நடிகர் கருணாகரன் வீட்டில் நகைகள் கொள்ளை

தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக இருந்து வரும் கருணாகரன் சென்னை காரப்பாக்கத்தில் வசித்து வருகிறார். இதையடுத்து இவரது வீட்டில் இருந்த 60 பவுன் தங்க நகை திருட்டு போய் உள்ளது. இந்த விவகாரத்தில் கருணாகரனின் மனைவி அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர்.

அதில் கருணாகரன் வீட்டில் பணிபுரிந்த விஜயா (44) என்பவர் நகையை திருடியது உறுதியானதை தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்துள்ளனர்.

லப்பர் பந்து ஓடிடி ரிலீஸ்

கடந்த மாதம் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து விமர்சகரீதியாக பாராட்டை பெற்ற லப்பர் பந்து படம் நல்ல வசூலையும் குவித்துள்ளது. தொடர்ந்து நான்காவது வாரமாக திரையரங்கில் ஓடி வரும் இந்த படம் வரும் 18ஆம் தேதி டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது.

கிராமத்து பின்னணியில் கிரிக்கெட் விளையாட்டை மையப்படுத்தி உருவாகியிருக்கும் இந்த படத்தில் அட்டகத்தி தினேஷ், ஹரீஷ் கல்யாண், ஸ்வாசிகா உள்பட பலரும் நடித்துள்ளார்கள்.

மலையாள நடிகர் ட்ரைவிங் லைசென்ஸ் ரத்து

போதை விவகாரத்தில் சிக்கிய மஞ்சுமல் பாய்ஸ் பட நடிகர் ஸ்ரீநாத் பாஸி, காரில் சென்றபோது பைக்கில் சென்றவரை மோதி விபத்தை ஏற்படுத்திய புகார் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டார். இந்த விவகாரத்தில் அவரது ட்ரைவிங் லைசென்ஸ் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது

பாலியல் வழக்கு விவகாரம் - முன் ஜாமின் வேண்டாம்

என் மீது சுமத்தப்பட்ட பாலியல் புகார் எல்லாம் பொய். எனக்கு முன் ஜாமின் கூட வேண்டாம். நான் வாழும் தியாகி என்பதை நம்புகிறேன் என தன் மீதான பாலியல் வழக்கு தொடர்பாக சிறப்பு விசாரணை குழுவிடம் நடிகர் ஜெயசூர்யா விளக்கம் அளித்துள்ளார்.

படப்பிடிப்பின் போது கழிவறை சென்று திரும்பியபோது தன்னிடம் பாலியல் துன்புறுத்தலில் நடிகர் ஜெயசூர்யா ஈடுபட்டதாக, மலையாள சினிமாவில் பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் அத்துமீறல்கள் குறித்து விசாரிக்கும் சிறப்பு விசாரணை குழுவிடம் நடிகை ஒருவர் புகார் அளித்தார்.

இதுதொடர்பாக நடிகர் ஜெயசூர்யா மீது பல்வேறு பரிவுகளில் ஜாமினில் வெளிவர இயலாத வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில், சிறப்பு விசாரணை குழு நடிகர் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளார்.

வேட்டையனுக்கு மழை வைத்த வேட்டு

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான வேட்டையன் படம் கடந்த வாரம் வெளியானது. இதையடுத்து படம் வெளியாக ஐந்து நாள்கள் ஆகியிருக்கும் நிலையில் தற்போது வரை இந்திய அளவில், ரூ. 114.60 கோடி, உலக அளவில் ரூ. 264.31 கோடி வசூலை ஈட்டியுள்ளது.

கலவையான விமர்சனங்களை பெற்று வரும் இந்த படத்தின் வசூல்பல்வேறு மாவட்டங்களில் பெய்த மழை காரணமாக பாதிக்கப்பட்டு இருக்கிறது.

ராஷ்மிகாவுக்கு கிடைத்த புதிய பொறுப்பு

டீப் ஃபேக் தொழில்நுட்பத்தால் பாதிக்கப்பட்ட நடிகை ராஷ்மிகா மந்தனா, இந்திய சைபர் க்ரைம் ஒருங்கிணைப்பு குழுவின் பிராண்ட் அம்பாசிடராக நியமிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விழப்புணர்வு கருத்துகளை வீடியோவாக பதிவு செய்துள்ளார். அதில், "டிஜிட்டல் உலகத்தில் வாழும் நாம் பல நேரங்களில் சைபர் குற்றங்களால் பாதிப்புக்கு உள்ளாகிறோம் சைபர் குற்றத்தால் பாதிக்கப்பட்டவர் என்ற முறையில், ஆன்லைன் உலகத்தைப் பாதுகாக்க கடுமையான நடவடிக்கைகள் எடுக்கும் நேரம் வந்துவிட்டது என நம்புகிறேன்.

ஐ4சி (I4C)க்கான பிராண்ட் அம்பாசிடராக நான் பொறுப்பேற்றுள்ளேன். இதன் பின், ​​இணையக் குற்றங்கள் குறித்த விழிப்புணர்வை அதிகளவு ஏற்படுத்த உள்ளேன். மேலும் அந்தக் குற்றங்களில் இருந்து உங்களை முடிந்த அளவு பாதுகாக்கவும் விரும்புகிறேன்.

சைபர் குற்றங்களால் பாதிக்கப்பட்ட மக்கள் 1930 என்ற எண்ணிற்கு சைபர் குற்றங்கள் குறித்து புகாரளிக்கலாம். அல்லது அல்லது cybercrime.gov.in என்ற இணையதளத்திலும் புகார்களை பதிவு செய்யலாம். உங்கள் புகார் தொடர்பாக அரசாங்கத்துடன் இணைந்து நானும் உதவ உள்ளேன்” எனக் கூறியுள்ளார்.

மும்பையில் செட்டிலாக இருக்கும் சுசித்ரா

பல்வேறு யூடியூப் பேட்டிகளில் சினிமா பிரபலங்கள் குறித்து சர்ச்சை கருத்துகளை தெரிவித்து வந்தார் பாடகியும், நடிகையுமான சுசித்ரா. இதையடுத்து தற்போது இவருக்கு மும்பையில் புதிய வேலை கிடைத்திருக்கும் நிலையில், அங்கு போய் செட்டிலாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது இன்ஸ்டாவில், "நான் எனது கனவு வாழ்க்கையை அமைத்துக் கொள்ள மும்பை செல்கிறேன். தற்போது குழந்தைகள் பதிப்பகம் ஒன்றில் பணியாற்ற வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்த வேலையின் மூலம் இந்த முழுவதுமுள்ள லட்சக் கணக்கான குழந்தைகளுடன் இணையும் வாய்ப்பு எனக்கு கிடைத்துள்ளது. இந்த வாய்ப்பு மிகவும் கௌரவமான ஒன்றாக கருதுகிறேன். குழந்தைகளுக்காக 15 நாட்களுக்கு ஒருமுறை வெளியாகும் இந்தப் பதிப்பு தமிழிலும் கிடைக்கும்" என்று குறிப்பிட்டுள்ளார்.