தொடரும் எதிர்ப்பால் மீண்டும் தணிக்கை செய்யப்படும் பூலே படம்.. தள்ளிப்போன ரிலீஸ்..
சமூக சீர்திருத்தவாதிகளான ஜோதிராவ் பூலே மற்றும் சாவித்ரிபாய் பூலே ஆகியோரின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட திரைப்படம் பூலேவின் ரிலீஸ் தள்ளிப் போனதாக படக்குழு அறிவித்துள்ளது.

19 ஆம் நூற்றாண்டில் சாதி பாகுபாடு மற்றும் பாலின சமத்துவமின்மைக்கு எதிராகப் போராடிய சமூக சீர்திருத்தவாதிகளான ஜோதிராவ் பூலே மற்றும் சாவித்ரிபாய் பூலே ஆகியோரின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட திரைப்படம் பூலே. ஆனந்த் மகாதேவன் இயக்கிய இந்தப் படத்தில் பிரதிக் காந்தி மற்றும் பத்ரலேகா ஆகியோர் கதையின் நாயகர்களாக நடித்துள்ளனர். இந்தப் படம் சில சர்ச்சையில் சிக்கியதால் அதன் வெளியீட்டில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
தள்ளிப் போன ரிலீஸ்
பூலே படம் இன்று, ஏப்ரல் 11 ஆம் தேதி - ஜோதிபா பூலேவின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியாவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் இந்தப் படத்திலிருந்து சில காட்சிகளை மத்திய திரைப்பட தணிக்கை வாரியம் (CBFC) தயாரிப்பாளர்களிடம் சில மாற்றங்களைச் செய்யக் கேட்டுக் கொண்டதை அடுத்து, 'புலே' படத்தின் வெளியீடு இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டு ஏப்ரல் 25 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்ப்பு கிளம்பியதால் மீண்டும் தணிக்கை
முன்னதாக, படத்திற்கு யூ சான்றிதழ் வழங்கிய தணிக்கை வாரியம், மகாராஷ்டிராவில் உள்ள பிராமண சமூகத்தினர் உள்ளிட்ட சில தரப்பு, பூலே படத்தின் காட்சிகளுக்கும் வசனங்களுக்கும் அதிருப்தியை தெரிவித்ததால் தயாரிப்பாளர்களிடம் சில மாற்றங்களை கோரி இருக்கிறது. இந்தப் படம் அவதூறு கருத்துகளை பரப்புவதாகவும் கூறி வந்தனர்.
இந்தப் படம் குறித்து அடுத்தடுத்த பேச்சுகள் வெளிவரவே, சாதி, வர்ணம் போன்ற சில காட்சிகளை மாற்றுவது, சில வசனங்களை மாற்றுவது மற்றும் படத்தில் செய்யப்பட்ட வரலாற்றுக் குறிப்புகளுக்கான முறையான ஆவணங்களைச் சமர்ப்பிப்பது என பூலே படத்தின் தயாரிப்பாளர்களிடம், படத்தில் சில மாற்றங்களைச் செய்யுமாறு மத்திய திரைப்பட தணிக்கைவாரியம் கேட்டுக் கொண்டுள்ளது.
என்னென்ன மாற்றம்
அத்துடன், 'மங்க', 'மகர்', 'பெஷ்வை' போன்ற சொற்களை படத்திலிருந்து நீக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. "துடைப்பம் ஏந்திய மனிதன்" (வரலாற்று ரீதியாக தாழ்த்தப்பட்ட சாதியினருடன் தொடர்புடையது), 'சிறுவர்கள் சவித்ரிபாய் மீது சாணம் எறிவது' என்ற காட்சிகளை மாற்று மாறும் கூறப்பட்டுள்ளது. அத்துடன் "3000 சால் குலாமி (3000 ஆண்டுகள் அடிமைத்தனம்)" என்பதை "கை சால் புரானி ஹைன் (இந்த அடிமைத்தனம் பல ஆண்டுகள் பழமையானது)" என்று மாற்றுதல் போன்ற சாதி பாகுபாட்டை வெளிப்படையாகக் குறிக்கும் உரையாடல்களை மாற்றும் கூறியுள்ளது.
தவறான புரிதல்
இதுகுறித்து பேசிய படத்தின் இயக்குநர், பூலே படத்தை குறித்து தவறான புரிதல் ஏற்பட்டுள்ளது. இது அனைத்தும் படத்தை தியேட்டரில் போய் பார்க்கும் போது இல்லாமல் போய்விடும் எனக் கூறியிருந்தார்.
இவர், தமிழ், மராத்தி, ஹிந்தி மொழிகளில் திரைப்டங்களையும், நாடகங்களையும் இயக்கி பெயர் பெற்றவர். இவர் இயக்கிய மீ சிந்துதாய் சப்கல் படத்திற்காக தேசிய விருது பெற்றது குறிப்பிடத்தக்கது.
பூலே படம்
சமீபத்தில் வெளியான டிரைலர், 'பெண்கள், குறிப்பாக விதவைகள் மற்றும் தலித்துகளின் நிலையை மாற்ற முயன்ற' புரட்சிகர சீர்திருத்தவாதிகளின் போராட்டத்தை காட்டுகிறது. டான்சிங் சிவா பிலிம்ஸ் மற்றும் கிங்ஸ்மேன் புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ள இந்தத் திரைப்படத்தை ஜீ ஸ்டுடியோஸ் வெளியிடுகிறது.
சமீபத்திய காலங்களில், பாலிவுட்டில் வெளிவந்த வரலாற்றுத் திரைப்படங்கள் மத அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகளின் எதிர்ப்பை சந்தித்துள்ளன. சாஹா படமே இதற்கு சமீபத்திய உதாரணமாக உள்ளது.

டாபிக்ஸ்