Vijay Makkal Iyakkam: ஒரு மாத காலத்தில் கட்சி அறிவிப்பு.. டெல்லியில் ஐஏஎஸ் அடங்கிய குழு! - கூட்டத்தில் வெடித்த விஜய்!
அந்த கூட்டத்தில் பூத் கமிட்டிகளை வலுபடுத்துமாறு பேசிய நடிகர் விஜய், கட்சியின் அடித்தளத்தை வலுப்படுத்துவதற்கான வேலைகளை செய்யுமாறும் கட்டளை இட்டு இருக்கிறார்.

நடிகர் விஜய் இன்று காலை விஜய் மக்கள் இயக்க மாவட்ட பொறுப்பாளர்கள் மற்றும் இயக்கத்தின் முக்கிய தலைவர்களை பனையூரில் உள்ள அலுவலகத்தில் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
அந்த ஆலோசனை கூட்டத்தில், ஒரு மாத காலத்திற்குள் அரசியல் கட்சி தொடங்குவதற்கான அறிவிப்புகள் வெளியாகும் என விஜய் கூறியதாக, மக்கள் இயக்க நிர்வாகிகள் தெரிவித்திருக்கின்றனர்.
மேலும் அந்த கூட்டத்தில் பூத் கமிட்டிகளை வலுபடுத்துமாறு பேசிய நடிகர் விஜய், கட்சியின் அடித்தளத்தை வலுப்படுத்துவதற்கான வேலைகளை செய்யுமாறும் கட்டளை இட்டு இருக்கிறார்.
அத்துடன், மக்களுக்கு செய்யும் பணிகளில் தடை ஏதும் ஏற்பட்டால், உடனடியாக தலைமைக்கு தெரியப்படுத்த வேண்டும் என்று பேசிய நடிகர் விஜய், என்னென்ன நடவடிக்கைகளை மேற்கொண்டால் கட்சியை வலுப்படுத்தலாம் என்பது குறித்து, தலைமைக்கு அறிவுரை வழங்கலாம் என்பதையும் திட்டவட்டமாக பேசி இருக்கிறார்.
முதற்கட்டமாக அரசியல் கட்சியை பதிவு செய்த உடன், யாருக்கு ஆதரவு கொடுக்கலாம் அல்லது தனித்து நிற்கலாமா? என்பது குறித்தான முடிவை எடுக்கலாம் என்றும் பேசியதாக மக்கள் இயக்க நிர்வாகிகள் கூறியிருக்கின்றனர்.
கட்சியின் பெயர், சின்னம் உள்ளிட்டவற்றை பதிவு செய்வதற்காக இரண்டு ஐஏஎஸ் அடங்கிய குழு டெல்லியில் முகாமிட்டு இருப்பதாக கூறப்படும் நிலையில், இங்குள்ள வேலைகளை விஜய் புஸ்ஸி ஆனந்தை வைத்து பார்த்து வருவதாக சொல்லப்படுகிறது.
முன்னதாக, நடிகர் விஜய் தன்னுடைய படங்கள் ரிலீஸ் ஆகுவதற்கு முன்னர் அந்தப்படம் தொடர்பான நிகழ்ச்சிகளில் அவர் பேசும் அரசியல் சார்ந்த விஷயங்கள் சமூக வலைதளங்களில் ட்ரெண்ட் ஆனது.
படங்களிலும் அரசியல் சார்ந்த வசனங்கள் அனல் பறந்தது. இதன் மூலம் அவர் விரைவில் அரசியலுக்கு வரவிருக்கிறார் என்ற தகவல்கள் கோலிவுட் வட்டாரத்தில் பரபரக்கத்தொடங்கின.
அதற்கு ஏற்றார் போல நடிகர் விஜயும் தன்னுடைய ரசிகர்கள் மூலம் அம்பேத்கர் பிறந்தநாளன்று அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்கச் செய்தல், உலக பட்டினி தினத்தில் 234 தொகுதிகளிலும் ‘தளபதி விஜய் ஒரு நாள் மதிய உணவு சேவையகம்’ திட்டம் மூலம் ஏழைகளுக்கு மக்கள் இயக்க நிர்வாகிகள் மூலம் மதிய உணவு வழங்க வைத்தல், ரத்ததானம் செய்ய வைத்தல், மாணவர்களுக்கு மாலை நேர வகுப்புகள், நூலகம், வெள்ள நிவாரண பணிகளை மேற்கொள்ளுதல் உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுத்து அரசியல் பிரவேசத்திற்கான காய்களை நகர்த்தி வருகிறார்.

டாபிக்ஸ்