போலீஸை நிர்வாணமாக்கும் கடத்தல்காரனுக்கு தேசிய விருதா? அல்லு அர்ஜூனுடன் அரசையும் வம்பிழுக்கும் அமைச்சர்..
புஷ்பா படத்தில் போலீஸை அவமானப்படுத்தி கடத்தல்காரராக நடித்தவருக்கு தேசிய விருது அளிப்பதா என தெலங்கானா அமைச்சர் சீதக்கா விமர்சித்துள்ளார்.
புஷ்பா 2 பட மரண விவகாரம் நாளுக்கு நாள் தீவிரமடையும் நிலையில், அல்லு அர்ஜூனுக்கு புஷ்பா படத்தில் நடித்ததற்காக தேசிய விருது வழங்கிய மத்திய அரசை விமர்சித்துள்ளார் அமைச்சர் சீதக்கா.
தேசிய விருதை விமர்சித்த அமைச்சர்
தெலங்கானா மாநிலம் முலுகுவில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற மாநில பஞ்சாயத்து ராஜ் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் சீதாக்கா அந்நிகழ்ச்சியில் புஷ்பா படத்தை மிகவும் கடுமையாக விமர்சித்துள்ளார்.
தாழ்த்தப்பட்ட மக்களுக்கான உரிமைகள் குறித்து பேசிய ஜெய் பீம் போன்ற படங்களுக்கு எந்த தேசிய விருதும் கிடைக்கவில்லை. ஆனால், ஒரு போலீஸ்காரரை நிர்வாணமாக்கிய கடத்தல்காரராக நடித்த அல்லு அர்ஜூனுக்கு தேசிய விருது வழங்கப்பட்டுள்ளது. இது எந்த மாதிரியான செய்தியை மக்களுக்கு சொல்கிறது என்றே தெரியவில்லை.
போலீஸை பூச்சியமாக காட்டுகின்றனர்
சமூகத்தில் நடக்கும் குற்றங்களை சட்டரீதியாகக் கட்டுப்படுத்துபவர் ஒரு போலீஸ் அதிகாரி தான், ஆனால் அவரையே புஷ்பா படத்தில் பூஜ்ஜியமாக காட்டுகின்றனர். சமூகத்தை உயர்த்தும், பிறரது கண்ணியத்தைக் காப்பது போல திரைப்படங்கள் வெளியாக வேண்டும். அவை சமூகத்தை ஊக்குவித்து அதனை முன்னோக்கி கொண்டு செல்ல வேண்டும்.
அரசு இதை செய்ய வேண்டும்
அத்தகைய திரைப்படங்களுக்கே மத்திய அரசு விருதுகளையும் வழங்க வேண்டும். அதைத் தவிர்த்து சட்ட விரோதமாக கடத்தல் செய்வதை புனிதமாகவோ அல்லது சட்டத்தின் அதிகாரத்தை குறைத்து மதிப்பிடும் படங்களை பெருமை படுத்தும் விதமாக நடக்கக் கூடாது" என்று கூறினார்.
ரசிகை மரணம்
புஷ்பா 2 தி ரூல் முதல் காட்சியைப் பார்க்க அல்லு அர்ஜுன் திரையரங்குக்கு வந்தபோது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி பெண் ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில், அல்லு அர்ஜூனை தெலங்கானா போலீஸார் அதிரடியாக கைதுசெய்தனர். அதனைத்தொடர்ந்து அல்லு அர்ஜூன் சிக்கடபள்ளி ஜெயிலுக்கு மாற்றப்பட்டார்.
அல்லு அர்ஜூன் விடுதலை
இதற்கிடையே இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று அல்லு அர்ஜுன். தரப்பில் இருந்து உயர் நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி அவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கினார். ஆனாலும் அவர் நேற்று இரவு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில் அவர் தற்போது விடுதலை செய்யப்பட்டு இருக்கிறார்.
தெலங்கானா முதல்வர் குற்றச்சாட்டு
சினிமா பிரமுகர் ஒருவர்(அல்லு அர்ஜூன்) ஒரு நாள் சிறைக்குச் சென்றதற்கு, திரையுலக நபர்கள் அனைவரும் அவரைப் பார்க்க அவரது வீட்டிற்குச் சென்றனர். என்னைத் திட்டுறாங்க. என்ன சபாநாயகர் அவர்களே, அந்த சினிமா பிரமுகருக்கு கால் போச்சா, கண் போச்சா, கை போச்சா, கிட்னி போச்சா என்ன ஆச்சு. ஒன்றும் ஆகவில்லை. ஆனால், சினிமா பிரமுகரை ஒவ்வொரு திரைப்பிரபலங்கள் சென்று விசாரிக்கின்றனர்.
ஆனால், அந்த சினிமா பிரமுகரில் ஒருவர் கூட மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் கூட்டநெரிசலில் பாதிக்கப்பட்ட அந்த குழந்தையைச் சென்று பார்க்கவில்லை. இதனால் சினிமாவில் இருப்பவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்று எனக்குத் தெரியவில்லை" என தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி கூறியுள்ளார்.
விளக்கமளித்த அல்லு அர்ஜூன்
இது ஒரு விபத்து. இது யாருடைய கட்டுப்பாட்டிலும் இல்லை. நிஜமாகவே அந்த ஃபேமிலிக்கு நடந்தது மிக மிக துரதிர்ஷ்டம். நான் ரொம்ப வேதனைப்படுறேன்னு சொல்றேன். அந்தச் சிறுவன் பற்றி ஒவ்வொரு சில மணிநேரங்களுக்கும் ஒருமுறை அப்டேட் கேட்டுட்டு இருக்கேன், அவனுடைய உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுட்டு இருக்கிறதா தகவல் வருகிறது. அது தான் நான் சந்தோஷப்படுற ஒரு விஷயம்.
இந்த அணுகுமுறை ரொம்ப வேதனையைத் தருது. குறிப்பாக, என் கேரக்டர் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் வேதனையைத் தருது. யார் யாரோ இறந்ததை எல்லாம் நான் போய் விசாரிக்கும்போது எனது சொந்த ரசிகை இறந்ததை விசாரிக்காமல் இருப்பேனா"என அல்லு அர்ஜூன் விளக்கமளித்தார்.
அல்லு அர்ஜூன் வீட்டில் கல்வீச்சு
இந்நிலையில், ஹைதராபாத்தில் உள்ள அல்லு அர்ஜுன் வீடு தாக்கப்பட்டது. வீட்டின் வளாகத்தில் இருந்த பூந்தொட்டிகளை சிலர் அடித்து நொறுக்கினர். அவர்கள் மேலும் வீட்டின் மீது தக்காளிகளை வீசி நீதிக்கான கோஷங்களை எழுப்பினர். இதையறிந்த போலீசார் 8 பேரை கைது செய்தனர். அவர்கள் உஸ்மானியா பல்கலைக் கழகத்தை சேர்ந்த மாணவ அமைப்பினர் தலைவர்கள் என்று கூறப்பட்டு வருகிறது. இந்நிலையில், அல்லு அர்ஜூன் இன்று போலீஸ் விசாரணைக்கு ஆஜராகி 3 மணி நேரத்திற்கும் மேலாக விளக்கமளித்துள்ளார்.
டாபிக்ஸ்