அஜித்தை வாழ்த்திய உதயநிதி! திராவிட மாடல் லோகோவை காட்டியதற்கு நன்றி சொல்லி வாழ்த்து!
தமிழ்நாட்டின் துணை முதலமைச்சர் உதயநிதி அஜித் குமார் அவர்களுக்கு அவரது பாராட்டை தெரிவித்து எக்ஸ் தள பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வரும் அஜித்குமாருக்கு 2025 வது வருடம் ஒரு சிறப்பான வருடமாக அமையப்போகிறது என்றே கூறலாம். ஏனெனில் கடந்த இரண்டு ஆண்டுகளாக எந்த படமும் வெளியாகாமல் இருந்த நிலையில் இந்த வருடம் குட் பேட் அட்லி மற்றும் விடா முயற்சி என அடுத்தடுத்து இரண்டு படங்கள் வெளியாக உள்ளது. இந்த கொண்டாட்டத்தையே அஜித்தின் ரசிகர்கள் கொண்டாடி வரும் நிலையில் தற்போது மேலும் ஒரு கூடுதல் நற்செய்தியாக அவரது ரேசிங் வெற்றி வந்துள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன் துபாயில் நடந்த 24எச் 991 பிரிவு கார் ரேசிங் பந்தயத்தில் நடிகர் அஜித்குமாரின் அணி மூன்றாவது இடத்தை பிடித்து கோப்பையை வென்றது. இந்த வெற்றியை அவரது ரசிகர்கள் மிகவும் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். சமூக வலைதளங்களில் அஜித்குமாரின் வீடியோக்களையும் ஷேர் செய்து அவரை பாராட்டி மகிழ்ந்து வருகின்றனர். இந்த நிலையில் தமிழ்நாட்டின் துணை முதலமைச்சர் உதயநிதி அஜித் குமார் அவர்களுக்கு அவரது பாராட்டை தெரிவித்து எக்ஸ் தள பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.
உதயநிதி பாராட்டு
சினிமா பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் என தொடர்ந்து அஜித் குமாருக்கு வாழ்த்துக்கள் வந்த வண்ணம் உள்ளன. இந்த நிலையில் துணை முதலமைச்சர் உதயநிதி அவரது எக்ஸ் தள பதிவில், "துபாயில் நடந்த 24எச் 991 பிரிவு ரேஸில் அஜித்குமார் மற்றும் அவரது அணி 3வது இடம் பிடித்துள்ளதைக் கேட்டு மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். அஜித்குமார் மற்றும் அவரது அணியினரின் சாதனைக்கு வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் பந்தயத்தில் திராவிட மாடல் அரசின் தமிழக விளையாட்டுத்துறை லோகோவைப் பயன்டுத்தியதற்காக அஜித்குமார் ரேஸிங் அணிக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
அஜித்குமார் இன்னும் இதுபோல் தொடர்ந்து வெற்றி பெற்று நம் நாட்டுக்கும், தமிழ்நாட்டுக்கும் பெருமை சேர்க்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன்'' என்று பதிவிட்டுள்ளார்.
அஜித் குமார் அட்வைஸ்
அஜித்தின் இந்த வெற்றிக்கு அவரது குடும்பத்தினரும் அவரது ரசிகர்களும் கொண்டாட்டத்தின் உச்சியில் உள்ளனர். சமூக வலைதளங்களை திறந்தாலே அஜித் மற்றும் அவரது குடும்பத்தினர் வெற்றியைக் கொண்டாடும் வீடியோக்கள் தான் பகிரப்பட்டு வருகின்றன. மேலும் அஜித் தனது ரசிகர்களுக்கு கடுமையாக உழைக்குமாறும் நன்றாக படிக்குமாறும் வெற்றியை நோக்கி செல்லுமாறும் அறிவுரை வழங்கியுள்ளார். அந்த வெற்றி கிடைக்கவில்லை என்றாலும் சோர்ந்து விட வேண்டாம் எனவும் தெரிவித்துள்ளார்.
இந்த ரேஸில் பெற்ற வெற்றி குறித்து அஜித்குமார் பேசிய போது "நண்பர்கள் குடும்பத்தினர் என்னுடன் பணியாற்றியவர்கள் அனைவரின் முன்னிலையிலும் ஒன்றை சொல்லிக் கொள்கிறேன். இந்த ஹீரோக்கள் இல்லாமல் இது சாத்தியமாக இருக்காது. ரேசிங் உலகத்தை பொறுத்தவரை பலரும் உங்களுக்கு உதவும் முன்வர மாட்டார்கள். உங்கள் வளர்ச்சியை பார்த்து பொறாமைப்படுவார்கள். அப்படித்தான் ரேசிங்கில் பல டிரைவர்கள் தங்களது டேட்டாக்களை இன்ஜினியர்கள் பற்றி பகிர்ந்து கொள்ள மாட்டார்கள். ஆனால் இவர்கள் அப்படியில்லாமல் வெளிப்படைய தன்மையுடன் இருந்தார்கள். எனக்கு தேவையான விஷயங்கள் அனைத்தையும் கற்றுக் கொடுத்தார்கள். நாங்கள் வெற்றியுடன் இந்த இடத்தில் இருப்பதில் புதிதாக இருந்தார்கள் எனவே இவர்கள் இல்லாவிட்டால் இது சாத்தியமில்லை. என அவரது அணி குறித்தும் அந்த போட்டியின் நிர்வாகம் குறித்தும் தெரிவித்துள்ளார்.

டாபிக்ஸ்