Vijay: விகடன் இணையதளப் பக்கம் முடக்கம்.. மும்மொழிக்கொள்கை திணிப்பு.. கண்டித்த த.வெ.க தலைவர் விஜய்
Vijay: விகடன் இணையதளப் பக்கம் முடக்கம் செய்யப்பட்டிருப்பதைக் கண்டித்தும், மும்மொழிக்கொள்கை திணிப்பு செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் கண்டன அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.

Vijay: மும்மொழியைக் கொள்கையை வலியத் திணிப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்தும், விகடன் இணையதளம் முடக்கப்பட்டதற்கு தமிழக வெற்றிக் கழகத் தலைவரும் நடிகருமான விஜய் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் எக்ஸ் பதிவில், ‘’மும்மொழிக் கொள்கையை வலியத் திணிப்பது, மாநிலங்களின் தன்னாட்சி உரிமையைப் பறிப்பதன்றி வேறென்ன?
ஜனநாயகத்தின் நான்காவது தூணான இதழியல் துறைக்கு உரியதான பத்திரிகை சுதந்திர தர்மம் காக்கப்பட வேண்டும். நூற்றாண்டு காணும் விகடனின் இணையத்தளப் பக்கம் முடக்கப்பட்டதற்கு ஒன்றிய அரசுதான் காரணம் என்கிற கருத்து நிலவுகிறது. பத்திரிகை, ஊடகங்களால் வெளியிடப்படும் கருத்துகள் தவறானவையாகவோ, குற்றம் சுமத்துபவையாகவோ இருந்தால் நீதிமன்றம் மூலம் தீர்வு காண வேண்டுமே தவிர, கருத்துச் சுதந்திரத்தை முடக்கும் வகையில் செயல்படுவது, அரசியல் சாசன உரிமையைக் கேள்விக்குறி ஆக்குவதன்றி வேறென்ன?
மாநில மொழிக் கொள்கைக்குச் சவால் விடுத்து, தமிழகத்திற்கு நிதி ஒதுக்கமாட்டோம் என்று பகிரங்கமாக அறிவிப்பதும், விகடன் இணையத்தளப் பக்கத்தை முடக்கியதும் ஜனநாயகத்திற்கு எதிரான, கண்டனத்திற்கு உரிய ஃபாசிச அணுகுமுறையே.
ஃபாசிச அணுகுமுறைகளை எந்த வடிவத்தில் யார் கையிலெடுத்தாலும் அது ஒன்றிய அரசாக இருந்தாலும், மாநில அரசாக இருந்தாலும் மக்கள் பக்கம் நின்று தமிழக வெற்றிக் கழகம் எந்நாளும் தீர்க்கமாக எதிர்க்கும்'' எனத் தெரிவித்து இருக்கிறார்.
விகடனுக்கும் விஜய்க்கும் இடையே உள்ள நட்பு:
முன்னதாக, தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு முடிந்தபின், வெளியில் வந்து அரசியல் பேசாமல் இருந்த விஜய், விகடன் பிரசுரம் வெளியிட்ட ‘எல்லாருக்குமான தலைவர் அம்பேத்கர்’ என்கிற நூலின் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டார். கடந்த டிசம்பர் மாதம் 6ஆம் தேதி சென்னையில் இந்த புத்தக வெளியீட்டு விழா நடந்தது.
அதேபோல், விகடன் விருது வழங்கும் நிகழ்வுகளில் நடிகர் விஜய் பங்கு எடுத்து பேசியது உண்டு. இந்நிலையில் தான் விகடன் இணையதளப்பக்கம் முடக்கப்பட்டதற்கு முதல் ஆளாக நடிகரும் தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான விஜய் குரல் கொடுத்திருக்கிறார்.
விஜய்யின் அரசியல் வருகை கதை!:
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திர நடிகரான விஜய் அரசியல் கட்சி தொடங்குவார் என அவரது ரசிகர்கள் பல ஆண்டுகளாக காத்திருந்தனர். அதற்குத் தீனிபோடும் விதமாக, 2024ஆம் ஆண்டின் தொடக்கத்தில் ’’தமிழக வெற்றிக் கழகம்’’ என்ற கட்சிப்பெயரை அறிவித்து, அதைத் தேர்தல் ஆணையத்தில் பதிவும் செய்திருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார், விஜய்.
இதனைத் தொடர்ந்து, அவரது ரசிகர் மன்றமான ‘தளபதி மக்கள் இயக்கம்’ அப்படியே, அவரது கட்சியாக மாறியது. அதனைத்தொடர்ந்து தமிழக வெற்றிக் கழகத்தில், உறுப்பினர் சேர்க்கையில் 2 கோடி உறுப்பினர்களை சேர்க்க இலக்கு வைத்து வேலை செய்தனர், அக்கட்சி நிர்வாகிகள்.
மேலும், உறுப்பினர் சேர்க்கைக்காக , ’’தமிழக வெற்றிக் கழகம்’’ என்னும் செயலி ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டது. அதில் தமிழக வெற்றிக் கழகம், தனக்கான உறுப்பினர் சேர்க்கையை 2024ஆம் ஆண்டு, மார்ச் 8ஆம் தேதி தொடங்கியது.
தொடங்கிய மூன்றே நாட்களில் 50 லட்சம் பேர் உறுப்பினர்களாக சேர்க்கை:
தொடங்கிய மூன்றே நாட்களில் அந்தக் கட்சியில் 50 லட்சம் பேர் உறுப்பினர்களாக இணைந்தனர். தவிர, தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் உறுப்பினர்கள் சேர்க்கையில் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றனர்.
அடுத்து கள்ளக்குறிச்சி விஷ சாராய மரணங்கள் நிகழ்ந்த பகுதிக்கு நேரடியாகச் சென்று, பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் தெரிவித்தார். அண்மையில் 10, 12ஆம் வகுப்புகளில் மாவட்ட அளவில், ஊரக அளவில் முதலிடம் பெற்றவர்களை விஜய் விழாவாக ஏற்பாடு செய்து கெளரவித்தார்.
மேலும் பி.ஆர்.அம்பேத்கர், பெரியார் ஈ.வே.ராமசாமி மற்றும் காமராஜ் போன்ற தலைவர்கள் மற்றும் அவர்களின் லட்சியங்களைப் பற்றி படிக்குமாறு மாணவர்களை வலியுறுத்தினார்.
அதன் அடுத்தகட்டமாக, தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை, அக்கட்சியின் தலைவரும் நடிகருமான விஜய் அறிமுகம் செய்துவைத்தார். மேலும் தமிழக வெற்றிக் கழகம் தொடர்பான பாடலையும் வெளியிட்டார். அப்போது, தமிழக வெற்றிக் கழகத்திற்கு அங்கீகாரம் கிடைத்ததை அக்கட்சியின் தலைவரும் நடிகருமான விஜய் உறுதி செய்தார்.
அம்பேத்கரை கொள்கை வழிகாட்டியாக அறிவித்த விஜய்:
தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் மாநாடு 2024ஆம் ஆண்டு அக்டோபர் 27ஆம் தேதி விக்கிரவாண்டியில் வி.சாலையில் நடைபெற்றது. அங்கு த.வெ.க கட்சியின் தலைவராக பேசிய விஜய் அரசியல், பொருளாதார, சமநிலையை உருவாக்கணும் என்றால், புரொபோசல் ரெபிரசன்டேஷன் (முன்மொழிவு பிரதிநிதித்துவம்) ஆக இருக்கிற சாதி ரீதியிலான கணக்கெடுப்பு நடத்தணும் என்றும், அப்போதுதான், எல்லாருக்கும் எல்லாம் சமநிலையாகக் கிடைக்கும் என்றும்; அது தான் சரியான சமூக நீதிக்கான அணுகுமுறையாகவும் இருக்கும் என்றும் கூறினார். மேலும், அம்பேத்கரை தன் கட்சியின் கொள்கை வழிகாட்டியாகவும் விஜய் அறிவித்தார்.

தொடர்புடையை செய்திகள்