Music Director Ilaiyaraaja: இசைஞானி இளையராஜாவை கௌரவிக்கும் தமிழ்நாடு அரசு.. சிம்பொனி நாயகனுக்கு விழா நடத்த ஏற்பாடு..
Music Director Ilaiyaraaja: இசையமைப்பாளர் இளையராஜா லண்டனில் சிம்பொனி இசை நிகழ்ச்சியை வெற்றிகரமாக நிகழ்த்திய நிலையில், வரும் ஜூன் 2 ஆம் தேதி அவருக்கு தமிழ்நாடு அரசு சார்பில் பாராட்டு விழா நடத்த உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Music Director Ilaiyaraaja: இசைஞானி இளையராஜா, சில நாட்களுக்கு முன் லண்டனில் தனது முதல் சிம்பொனி இசை நிகழ்ச்சியை வெற்றிகரமாக அரங்கேற்றம் செய்த நிலையில், அவரை பாராட்டி விழா நடத்த உள்ளதாக தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார்.
இளையராஜாவை கௌரவித்த பிரபலங்கள்
லண்டனின் அப்பல்லோ அரங்கத்தில் கடந்த மார்ச் 8 ஆம் தேதி வேலியண்ட் எனும் பெயரில் உலகின் சிறந்த இசைக் குழுவினருடன் இணைந்து இசையமைப்பாளர் இளையராஜா தனது முதல் சிம்பொனி இசை நிகழ்ச்சியை அரங்கேற்றினார். இதன் மூலம் சிம்பொனி இசையை அரங்கேற்றிய முதல் இந்தியர் எனும் பெருமையை பெற்றுள்ளார் இசைஞானி இளையராஜா. இந்த நிகழ்ச்சியை நடத்தியதற்காக பல அரசியல் தலைவர்களும் சினிமா பிரபலங்களும் இசைஞானி இளையராஜாவை நேரில் சந்தித்தும் சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்தும் வந்தனர்.
அரசு சார்பில் வாழ்த்து விழா
இந்நிலையில், இசையமைப்பாளர் இளையராஜாவிற்கு பாராட்டு தெரிவிக்கும் விதமாக வரும் ஜூன் மாதம் 2 ஆம் தேதி தமிழ்நாடு அரசு சார்பில் விழா நடத்தப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று மார்ச் 27 ஆம் தேதி சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார். இந்த நிகழ்ச்சி இசையமைப்பாளர் இளையராஜாவின் பிறந்த நாளான ஜூன் 2 ஆம் தேதி நடத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
அதே சமயத்தில், இசைஞானி இளையராஜாவின் இசைக் கச்சேரிகளை தமிழ்நாட்டிலும் நடத்த அரசு ஏற்பாடு செய்ய வேண்டும் என அரசுக்கு கோரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
முதலமைச்சர் நேரில் வாழ்த்து
முன்னதாக, லண்டனில் இசை நிகழ்ச்சி நடத்த உள்ள இளையராஜாவை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். அப்போது, ஆசியாவிலேயே யாரும் செய்யாத சாதனையாக, வரும் மார்ச் 8 அன்று இலண்டன் மாநகரில் சிம்பொனி அரங்கேற்றத்தை நிகழ்த்தவுள்ள இளையராஜாவை வாழ்த்தியதாக தெரிவித்தார்.
பட்டத்தை மாற்ற முடியவில்லை
அப்போது, தாம் கைப்பட எழுதிய வாலியண்ட் சிம்பொனி இசைக்குறிப்புகளை உற்சாகத்துடன் என்னிடம் காட்டி மகிழ்ந்துள்ளார். அத்துடன், மறைந்த முதலமைச்சர் கருணாநிதியால் வைக்கப்பட்ட பட்டம் தான் இசைஞானி என்பதும் இன்று வரை அந்த பட்டத்தை மாற்ற முடியவில்லை. அந்தப் பெயரே எனக்கு நிலைத்து விட்டதாகவும் இளையராஜா பெருமிதம் கொண்டார்.
பிறந்தநாளை மாற்றிய இளையராஜா..
மேலும், தன்னுடைய பிறந்தநாள் மார்ச் 3 ஆம் தேதி தான் இருந்தாலும் அப்பாவிற்காக (கருணாநிதி) நான் மார்ச் 2 என மாற்றிக் கொண்டேன் எனவும் பேசி இருந்தார். மார்ச் 3 ஆம் தேதி மறைந்த முதலமைச்சர் கருணாநிதியின் பிறந்தநாள் என்பது குறிப்பிடத்தக்கது.
பின், முதலமைச்சர் ஸ்டாலினும் இசையமைப்பாளர் இளையராஜாவும் ஒருவருக்கொருவர் பொன்னாடை போர்த்தி தங்கள் வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனர். அப்போது, நான் காரில் செல்லும் போதெல்லாம் கேட்கும் பாடல்கள் உங்களுடையது தான் என முதலமைச்சர் ஸ்டாலின் இளையராஜாவை கௌரவித்தார்.
45 நிமிட சிம்பொனி நிகழ்ச்சி
கடந்த மார்ச் 8 ஆம் தேதி லண்டனில் நடைபெற்ற இளையராஜாவின் சிம்பொனி இசை நிகழ்ச்சி, சுமார் ஒன்றரை மணி நேரமாக நடைபெற்றதாகவும், அதில் 45 நிமிடங்களுக்கு இளையராஜா, தனது பாடல்களின் சிம்பொனிக்களை அரங்கேற்றம் செய்ததாகவும் கூறப்படுகிறது. இந்த அரங்கேற்ற நிகழ்ச்சியில், பூவே செம்பூவே, கண்ணே கலைமானே போன்ற பாடல்கள் இடம்பெற்றதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிகழ்ச்சியில் இசையமைப்பாளர் இளையராஜாவின் மகன் யுவன் சங்கர் ராஜா, கார்த்திக் ராஜா உள்ளிட்ட 3000க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
