67 Years Of Mayabazar: மறக்க முடியுமா?.. மிகப்பெரிய வெற்றி பெற்ற 'மாயாபஜார்' ரிலீஸான நாள் இன்று!
67 Years Of Mayabazar: ஜெமினிகணேசன், என்.டி.ராமாராவ், சாவித்ரி உள்ளிட்டோரின் நடிப்பில் தமிழிலும் தெலுங்கிலும் மிகப்பெரிய வெற்றி பெற்ற "மாயாபஜார்" திரைப்படம் வெளியான நாள் இன்று (ஏப்ரல் 12) இத்திரைப்படம் குறித்த சுவரஸ்ய தகவல்களை இங்கு தெரிந்துகொள்ளலாம்.

தென்னிந்திய சினிமா இன்றைக்கு நவீன தொழில்நுட்பத்தால் பல வளர்ச்சிகளை கண்டிருக்கிறது. இருந்தாலும், பழைய திரைப்படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் இருக்கும் மவுசு இன்னும் குறையவில்லை என்றே சொல்லலாம். சில திரைப்படங்கள், மறக்கவே முடியாத படங்களாகவும் எத்தனை முறை பார்த்தாலும் அலுக்கவே அலுக்காத வகையில் ரசிகர்கள் மனதில் இடம்பெறுவது உண்டு.
மறக்க முடியாத பாடல்கள், நகைச்சுவை காட்சிகள், திகைப்பூட்டும் க்ரைம் காட்சிகள், பிரமாண்ட சண்டைக் காட்சிகள், வாழ்க்கை தத்துவங்கள் என ஏதோ ஒன்றின் மூலம் பழைய திரைப்படங்கள் நம்மை பின்னோக்கி இழுத்துச் செல்கின்றன. அந்த வகையில், அந்தக் காலத்துப் படம் என்று சொல்லி ஒதுக்கி வைத்துவிட முடியாத திரைப்படங்களில் இடம்பெற்றிருக்கிறது மாயாபஜார்.
கே.வி.ரெட்டி இயக்கத்தில் வெளிவந்த 'மாயாபஜார்' திரைப்படத்தில் ஜெமினி கணேசன், என்.டி.ராமராவ், சாவித்திரி, எஸ்.வி.ரங்காராவ், எம்.என்.நம்பியார், கே.ஏ.தங்கவேலு, டி.பாலசுப்பிரமணியம், ஆர்.பாலசரஸ்வதி, டி.பி.முத்துலட்சுமி உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். தமிழிலும் தெலுங்கிலும் மிகப்பெரிய வெற்றி பெற்ற இந்த திரைப்படத்திற்கு கண்டசாலா இசையமைக்க, தஞ்சை இராமையாதாஸ் பாடல்களை எழுதியிருந்தார்.
மஹாபாரதத்தின் ஒரு கிளைக் கதையாக, அர்ஜுனனின் மகன் அபிமன்யு மற்றும் அவனது அத்தை மகள் வத்சலா ஆகியோரின் காதலை சுவைபடக் கூறும் ஒரு சுவையான படம் 'மாயாபஜார்'. சிறுவயதில் அபிமன்யுவுக்கும் வத்சலாவுக்கும் திருமணம் செய்து வைப்பதாக முடிவு செய்திருந்தும், சகுனியின் சூழ்ச்சியால் பலராமன் மனம் மாறி துரியோதனனின் மகனுக்குத் திருமணம் செய்து வைக்க ஏற்பாடு நடக்கும். வத்சலா அபிமன்யுவை விரும்புவதால் இந்தத் திருமணத்திற்கு ஒத்துக்கொள்ளாமல் ரகளை செய்கிறாள். பின் இவர்களுக்குக் கடோத்கஜன் உதவியால் திருமணம் நடக்கும். இதைத்தான் நம் கண்முன் 'மாயாபஜார்' மூலம் தத்ரூபமாக காட்சியாக வடிவமைத்திருப்பார்கள்.
இதில் பீமனின் மகன் கடோத்கஜனாக எஸ்.வி.ரங்காராவ் தோன்றும் காட்சிகள் எல்லாம் அரங்கம் அதிர பலத்த கைத்தட்டல்களுடன் வரவேற்கப்பட்டன. ரங்கா ராவ் மாதிரியே சாவித்ரியும் நடிப்பில் அசத்தி இருப்பார். மர்மம், குறும்புகள் மற்றும் மந்திர வித்தைகள் என விறுவிறுப்பாக அமைந்த இத்திரைப்படம் தெலுங்கு மற்றும் தமிழ் என இரு மொழிகளில் வெளியானது.
மாயாபஜாரின் தெலுங்கு பதிப்பு 27 மார்ச் 1957 அன்று வெளியிடப்பட்டது. தமிழ் பதிப்பு இரண்டு வாரங்களுக்கு பிறகு ஏப்ரல் 12 அன்று வெளியிடப்பட்டது. இரண்டுமே விமர்சன ரீதியாகவும் வணிக ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றி பெற்றன. ரசிகர்களின் பேராதரவோடு 24 திரையரங்குகளில் 100 நாட்களை கடந்து ஓடி, வெள்ளி விழா படமாக மாறியது 'மாயாபஜார்'.
திரையரங்குகளில் சக்கைபோடு போட்ட 'மாயாபஜார்' திரைப்படம் 1957 ஆம் ஆண்டு ஏப்ரல் 12 அன்று இதே நாளில் ரலீஸாகியது. அப்படிப்பட்ட ‘மாயாபஜார்’ வெளியாகி இன்றுடன் 67 ஆண்டுகளை நிறைவு செய்கிறது. 'மாயாபஜார்' வெளியாகி 67 ஆண்டுகளான பின்னும், ஒட்டுமொத்த கல்யாண வீட்டு சாப்பாட்டை ஒற்றை ஆளாக சாப்பிடும் அந்த, "கல்யாண சமையல் சாதம் காய்கறிகளும் பிரமாதம்.." என்ற பாடலும், அதில் கடேத்கஜனாக நடித்த ரங்கா ராவையும் தமிழக மக்கள் இன்னும் மறக்கவில்லை. காலங்கள் உருண்டோடி ஆண்டுகள் பல கடந்திருந்தாலும் தமிழ் சினிமாவின் காவியமாகவே பார்க்கப்படுகிறது மாஜாபஜார்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9

டாபிக்ஸ்