பாரதிராஜா அறிமுகம்..கணீர் குரல்! குணச்சித்திரம், வில்லன் என பன்முக கேரக்டர்களால் மக்கள் மனதில் நுழைந்த நடிகர் தென்னவன்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  பாரதிராஜா அறிமுகம்..கணீர் குரல்! குணச்சித்திரம், வில்லன் என பன்முக கேரக்டர்களால் மக்கள் மனதில் நுழைந்த நடிகர் தென்னவன்

பாரதிராஜா அறிமுகம்..கணீர் குரல்! குணச்சித்திரம், வில்லன் என பன்முக கேரக்டர்களால் மக்கள் மனதில் நுழைந்த நடிகர் தென்னவன்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Published Nov 16, 2024 06:15 AM IST

பாரதிராஜாவின் அறிமுகமாக சினிமாவில் நடிக்க வந்த தென்னவன், பன்முக கதாபாத்திரங்களில் தோன்றி ரசிகர்கள் மனதில் தனக்கென இடம்பிடித்தவராக உள்ளார். விருதுகளை வெல்லாவிட்டாலும், மக்களால் கொண்டாடப்படும் திரை கலைஞனாக திகழ்கிறார்.

பாரதிராஜா அறிமுகம்..கணீர் குரல்! குணச்சித்திரம், வில்லன் என பன்முக கேரக்டர்களால் மக்கள் மனதில் நுழைந்த நடிகர் தென்னவன்
பாரதிராஜா அறிமுகம்..கணீர் குரல்! குணச்சித்திரம், வில்லன் என பன்முக கேரக்டர்களால் மக்கள் மனதில் நுழைந்த நடிகர் தென்னவன்

சினிமா பயணம்

கோவையை சேர்ந்த தென்னவன் சினிமா மீதான ஆர்வத்தால் சென்னைக்கு வந்துள்ளார். எந்த வித சினிமா பின்னணியும் இல்லாத இவர் இயக்குநர் பாரதிராஜாவின் அறிமுகங்களில் ஒருவராக உள்ளார். 1990இல் வெளியான என் உயிர் தோழன் படத்தில் நடிகர் பாபுவுடன், மற்றொரு ஹீரோவாக அறிமுகமானார். சிரித்த முகத்துடன் பக்கத்து வீட்டு பையன் போன்ற இவரது தோற்றமும், நடிப்பும் ரசிகர்களால் பெரிதும் கவரப்பட்டது.

இந்த படத்தில் ராசாத்தி ராசாத்தி என்ற புகழ் பெற்ற பாடலில் சிரித்தவாறே தோன்றும் இவர், ஸ்டைலான நடனத்தாலும் கவர்ந்திருப்பார். முதல் படத்தில் ஹீரோவாக நடித்தாலும் அடுத்தடுத்த வாய்ப்புகள் அமையாமல் போக கிடைத்த சிறுசிறு வாய்ப்புகளை பயன்படுத்தி நடித்தார். 1992இல் வெளியான முதல் குரல், 1995இல் வேலுச்சாமி போன்ற படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார்.

திருப்புமுனை தந்த ஜெமினி

2002இல் விக்ரம் நடிப்பில் வெளியான ஜெமினி திரைப்படம் தென்னவனுக்கு கம்பேக் கொடுத்ததுடன், திருப்புமுனையாகவும் அமைந்தது. படத்தில் விக்ரமின் வலது கரமாக கை என்ற கதாபாத்திரத்தில் எமோஷனலான வேடத்தில் நடிப்பில் வெளுத்து வாங்கியிருப்பார். இந்த படத்தில் நடித்த பிறகு இவர் கை தென்னவன் என்றே சில காலம் அழைக்கப்பட்டார்.

அதன் பின் ஜே ஜே, எதிரி என சில படங்களில் நடித்த இவரை விருமாண்டி படத்தில் கமல்ஹாசன் திருப்பம் தரும் கேரக்டரில் நடிக்க வைத்திருப்பார். கொண்டராசு என்கிற அந்த கதாபாத்திரத்தின் வழியே மக்களின் மனதில் நுழைந்த நடிகரானார்.

அதேபோல் புதுப்பேட்டை படத்திலும் ரவுடி கதாபாத்திரத்தில் சிறிது நேரம் தோன்றினாலும் மனதில் பதியும் விதமாக நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார்.

கேரக்டர் ஆர்டிஸ்டாக மாறிய தென்னவன்

கிடைக்கும் சிறிய வாய்ப்புகளையும் நன்றாக பயன்படுத்தி கொண்ட தென்னவன் பின்னர் கேரக்டர் ஆர்டிஸ்டாக உருவெடுத்தார். அடுத்தடுத்து பல படங்களில் குணச்சித்திரம், வில்லன் என பல்வேறு வகையான கதாபாத்திரங்களில் நடித்தார்.

கிராமத்து கதை என்றால் பஞ்சாயத்து தலைவர், ஊர் தலைவர், சிட்டி கதைகள் என்றால் போலீஸ் உயர் அதிகாரி, அரசியல்வாதி கதாபாத்திரங்களுக்கு கணகச்சிதமாக பொருந்தும் நடிகராக தனக்கென இடத்தை பிடித்து கொண்டார்.

சின்ன காட்சியாக இருந்தாலும் அதில் தனது இருப்பை வெளிப்படுத்தும் நடிப்பை கொண்டு வந்தார். தென்னவனுக்கு பிளஸ் ஆக பேஸ் வாய்ஸ் உடன் கூடிய அவரது கணீர் குரல் அமைந்தது. அதை அவர் சரியாகவும் பயன்படுத்தி கொண்டார்.

சினிமாக்களில் மட்டுமல்லாமல் டிவி சீரியல்களிலும் நடித்துள்ளார் தென்னவன். கலர்ஸ் டிவியில் ஒளிபரப்பான ஓவியா, சன்டிவியில் ஒளிபரப்பாகிய ராசாத்தி சீரியல்களில் முக்கிய வேடங்களில் நடித்தார்.

மக்களால் கொண்டாடப்படும் கலைஞன்

தமிழ் சினிமாவில் 1990 முதல் தற்போது வரை இருந்து வரும் தென்னவன், பன்முகம் கொண்ட கதாபாத்திரங்களால் ரசிகர்கள் மனதில் தனக்கென இடம்பிடித்த நடிகராக திகழ்ந்து வருகிறார். விருதுகள் எதுவும் பெரிதாக பெறாவிட்டாலும், மக்களால் கொண்டாடப்படும் திரை கலைஞன் என்ற கெளரவத்தை பெற்றிருக்கும் தென்னவன் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.