ஒரே படத்தில் தமிழ்நாடு அரசின் 3 விருதுகள்.. தனித்துவ படைப்புகளால் கவனம் ஈர்த்த மறைந்த எழுத்தாளர், இயக்குநர் ஜெயபாரதி
ஒரே படத்தில் தமிழ்நாடு அரசின் மூன்று விருதுகள் வென்றவராக மறைந்த எழுத்தாளர், இயக்குநர் ஜெயபாரதி மறைந்தார். தமிழ் சினிமாவில் தனது தனித்துவ படைப்புகளால் கவனம் ஈர்த்தவராக உள்ளார்.

தமிழ் சினிமாவில் சில படங்களை இயக்கினாலும் தனித்துவமான கதைகளுடனும், மாறுபட்ட படைப்புகளாலும் கவனத்தை ஈரத்தவர் ஜெயபாரதி. இதையடுத்து 77 வயதாகும் ஜெயபாரதி உடல்நலக்குறைவால் மறைந்துள்ளார். அவரது மறைவுக்கு திரையுலகினர் பலரும் இரங்கலை தெரிவித்துள்ளனர்.
சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழப்பு
ஜெயபாரதி நுரையிரல் தொற்று காரணமாக சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். இதையடுத்து அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதைத்தொடர்ந்து இன்று காலை அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
50 ஆண்டுகளுக்கு மேலாக கலைப்பயணம் செய்து வந்த ஜெயபாரதி, இதுவரை 9 படங்களை இயக்கியுள்ளார். இவர் இயக்கிய படங்கள் விமர்சகரீதியாக பாராட்டை பெற்ற படங்களாக இருக்கின்றன.
ஜெயபாரதி திரைப்பயணம்
1970களில் திரைப்படக்கல்லூரியில் படித்துவிட்டு வெளியேறிய இயக்குநர் ஆகும் கனவில் வெளியேறினார் ஜெயபாரதி. மக்களிடம் நிதி திரட்டி படம் தயாரிக்கும் முறையான கிரவுட் ஃபண்டிங் என்கிற புதியதொரு பாதையை தமிழ் சினிமாவில் அறிமுகம் செய்தார்.
அப்படி அவர் கிரவுட் ஃபண்டிங் முறையில் உருவாக்கிய குடிசை என்ற படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்ததுடன், விமர்சக ரீதியாகவும் பாராட்டை பெற்றது. இந்த படம் தேசிய திரைப்படங்கள் ஆவணகாப்பகத்தில் பாதுகாக்கப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து 1984இல் இவர் இயக்கத்தில் வெளியான ஊமை ஜனங்கள் என்ற படம் பிரிட்டீஷ் காலத்தில் நீலகிரி தோயிலை தோட்டத்தில் ஒப்பந்த அடிப்பைடையில் வேலையில் சேர்ந்த ஊழியர்களின் வாழ்க்கையை அடிப்படையாக கொண்டு உருவாகியிருந்து.
கடைசியாக இவரது இயக்கத்தில் சென்னை திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு, ரிலீஸ் செய்யப்படாத படமாக இருந்து வரும் புத்திரன், சிறந்த படம், சிறந்த நடிகர், சிறந்த நடிகை என மூன்று பிரிவுகளில் தமிழ்நாடு அரசு வருதை வென்றது. இவர் தேசிய விருதையும் வென்றுள்ளார்.
எழுத்தாளராக ஜெயபாரதி
சினிமாவில் அறிமுகமாவதற்கு முன்பு பிரபல ஊடகங்களில் பத்திரிகையாளராக பணியாற்றியுள்ளார். உலக சினிமா பற்றி பல்வேறு கட்டுரைகளை எழுதி பிரபலமாகியுள்ளார். தனது வாழ்க்கையில் இயக்குநர் ஜெயபாரதி சந்தித்த பிரச்னைகளை தொகுப்பாக வைத்து இங்கே எதற்காக? என்ற புத்தகத்தை எழுதியுள்ளார்.
கண்ணதாசன் மூன்று பெக் விஸ்கி அடித்துவிட்டு இவரது படம் ஒன்றுக்கு எழுதிக்கொடுத்த அற்புதமான மூன்று பாடல்கள், கமல் ஹாசனுக்குக் கணையாழியை அறிமுகப்படுத்திய பின்னர், 'சினிமாக்காரனுக்கு எதுக்குடா இலக்கியம்? அவனைக் கெடுத்துட்டியே' என்று பாலசந்தர் இவரிடம் சீறியது, மேஜர் சுந்தர்ராஜன் நாடகமேடைகளில் ஷேக்ஸ்பியரின் வரிகளில் இருந்து தழுவப்பட்ட ஆங்கில வசனங்களைப் பேசிவிட்டு உடனுக்குடன் அதையே தமிழிலும் பேசியபோது எழுந்து நின்று வசனத்தில் இருந்த பிழைகளை உரக்கக் கத்தியது, தமிழின் திரைப் பிரமுகர்களுடன் இவருக்கு நேர்ந்த சில கசப்பான சம்பவங்கள், ருத்ரையாவின் ‘கிராமத்து அத்தியாயம்’ படத்தில் கதாநாயகனாக ஒரு வாரம் நடித்து, பின்னர் மாற்றப்பட்டது, கம்யூனிஸ்ட்களுக்குப் படம் எடுக்காதே என்று இவரை இளையராஜா தடுத்தது, அதே படத்தை இயக்கியபோது தயாரிப்பு நிர்வாகம் செய்த கம்யூனிஸ்ட் ஒருவர் ‘கள் குடித்த குரங்காக' ஆட்டம் போட்டது, எம்.டி.வாசுதேவன் நாயருடனும் ரிஷிகேஷ் முகர்ஜியுடனும், ஷ்யாம் பெனகலுடனும் இவரது அனுபவங்கள், இவரது ‘குடிசை’ படத்துக்கு இன்னும் நிதி தேவைப்பட்டபோது, சென்னையில் வேறு ஒரு விஷயமாக வந்திருந்த மிருணாள் சென் இவரது படத்தைப் பார்த்துவிட்டு இவரைப் பாராட்டி, அவரது நண்பரிடம் இந்தப் படத்துக்காகப் பணம் கொடுத்து உதவச் சொன்னது என தமிழ் சினிமாவில் நடந்த ஏராளமான விஷயங்கள் இந்தப் புத்தகத்தில் உள்ளன
இலக்கியத்தை போல், சினிமாக்களில் தான் இயக்கிய ஒவ்வொரு படங்கள் மூலமும் ஏதாவது வகையில் கவனத்தை ஈரக்கும் இயக்குநராக வலம் வந்துள்ளார்.

டாபிக்ஸ்