தமிழ் சினிமாவின் மல்டி டைமென்ஷன் ஹீரோ.. சிவாஜிக்கு அடுத்து சைப்ரஸ் விழாவில் விருது வாங்கிய ஒரே தமிழ் நடிகர் ஜீவா
சிவாஜி கணேசனுக்கு அடுத்து சைப்ரஸ் விழாவில் விருது வாங்கிய ஒரே தமிழ் நடிகர் என்ற பெருமையை பெற்றவராக திகழ்கிறார் நடிகர் ஜீவா. பல்வேறு விதமான கதாபாத்திரங்களில் தனது எதார்த்த நடிப்பால் ரசிகர்களை கவரும் நடிகராக திகழ்ந்து வருகிறார்.
2000ஆவது ஆண்டுக்கு பிறகு தமிழ் சினிமாவில் அறிமுகமான ஹீரோக்களில் பல ஹிட் படங்களின் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர் ஜீவா. சூப்பர் குட் பிலிம்ஸ் மூலம் கோலிவுட்டில் ஏராளமான இயக்குநர்களை அறிமுகம் செய்த தயாரிப்பாளரான ஆர்.பி. செளத்ரியின் நான்கு மகன்களில் கடைசி மகனான இவர், தனது ரசிகர்களின் மனம் கவர்ந்த இளம் ஹீரோவாகவும் இருந்து வருகிறார்.
சினிமா பயணம்
2003இல் ரவி மரியா இயக்கத்தில் வெளியான ஆசை ஆசையாய் படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானார் ஜீவா. ஆனால் இந்த படத்துக்கு முன்னரே 1991இல் வெளியான பெரும் புலி, சேரன் பாண்டியன் ஆகிய படங்களில் குழந்தை நட்சத்திரமாக சிறு வேடங்களில் நடித்தார்.
ஜீவாவுக்கு முதல் ஹிட்டாக அமீர் இயக்கத்தில் வெளியான ராம் படம் அமைந்தது. இந்த படத்துக்கு நீண்ட தலைமுடி வளர்த்து சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்ந்தார். இதைத்தொடர்ந்து டிஷ்யூம், ஈ போன்ற ஜனரஞ்சமான படங்களில் எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தினார்.
ஜீவாவின் கதை தேர்வானது பக்கா கமர்ஷியல் படம், கண்டென்ட்க்கு முக்கியத்துவம் கொடுக்கும் படம் என மாறி மாறி இருந்தது. அதற்கு ஏற்றார் போல் அவரது கேரியர் கிராப்பு்ம ஹிட் ஒன்றும், தோல்வி ஒன்றுமாக ஏற்ற இறக்கமாகவே தொடர்ந்தது
ஆக்ஷன், த்ரில்லர், ரெமான்ஸ், காமெடி, பேமிலி செண்டிமெண்ட் என அனைத்து விதமான ஜானர்களிலும் பொருந்தக்கூடிய ஹீரோவாக வலம் வந்தார் ஜீவா.
திருப்புமுனை தந்த படங்கள்
ஜீவாவின் சினிமா வாழ்க்கையில் மிக பெரிய வெற்றியுடன் திருப்புமுனை தந்த படமாக கே.வி. ஆனந்த் இயக்கத்தில் 2011இல் வெளியான கோ படம் இருந்தது. இதன் பின்னர் இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் 3 இடியட்ஸ் ரீமேக்காக உருவாகியிருந்த நண்பன், கெளதம் மேனன் இயக்கிய நீதான் என் பொன் வசந்தம், ராம் இயக்கத்தில் வெளியான கற்றது தமிழ் போன்ற படங்கள் அமைந்தன.
தனது கனவு படம் என மிஷ்கின் சொன்ன முகமுடி என்ற சூப்பர் ஹீரோ படத்தில் உடல் எடை அதிகரித்து, புரொஸ்தெடிக் மேக்கப் செய்து வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார். படம் பாக்ஸ் ஆபிஸில் எதிர்பார்த்தை வசூலை குவிக்கவில்லை என்றாலும் ஜீவாவின் நடிப்புக்காக பேசப்பட்டது.
2013இல் வெளியான என்றென்றும் புன்னகை படத்துக்கு பின்னர் ஜீவாவுக்கு சொல்லி கொள்ளும் அளவில் ஹிட் படங்கள் பெரிதாக அமையவில்லை என்றாலும், அவரது நடிப்பாற்றலுக்கு நேர்மறையான விமர்சனங்களே வந்துள்ளன.
1983இல் இந்திய உலகக் கோப்பை வென்ற சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாகி இருந்த 83 என்ற இந்தி படத்தில், இந்திய கிரிக்கெட் வீரர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் வேடத்தில் ஜீவா நடித்திருந்தார். இந்த படம் அவருக்கு நீண்ட நாள்களுக்கு பிறகு நல்ல ஹிட்டாக அமைந்தது
சிவாஜிக்கு பின் சைப்ரஸ் விருது பெற்ற தமிழ் நடிகர்
பல்வேறு விதமான கதாபாத்திரங்களில் தோன்றி தனது எதார்த்த நடிப்பால் தனக்கென ரசிகர் கூட்டத்தை வைத்திருக்கும் ஜீவா, பல விருதுகளையும் வென்றுள்ளார். சைப்ரஸ் சர்வதேச திரைப்பட விழாவில் ராம் படத்துக்காக சிறந்த நடிகர் விருதை வென்றார்.
சிவாஜி கணேசனுக்கு பின்னர் இந்த விருதை வென்ற இரண்டாவது தமிழ் நடிகராக ஜீவா இருந்து வருகிறார். ஏசியநெட் பிலிம் விருதுகள், தமிழ்நாடு அரசின் சிறந்த நடிகர் விருதையும் வென்றுள்ளார். இதனுடன் தமிழ்நாடு அரசு ஜீவாவுக்கு கலைமாமணி விருதும் வழங்கி கெளரவித்துள்ளது. தமிழ் சினிமாவின் மல்டி டைமென்ஷன் ஹீரோவாக இருந்து வரும் ஜீவாவுக்கு இன்று பிறந்தநாள்
டாபிக்ஸ்