HBD Vairamuthu: காலத்துக்கு ஏற்ப தன்னை புதுப்பித்து கொள்ளும் கவிஞன்! நான்கு தசாப்தங்களாக மக்களை மகிழ்விக்கும் கலைஞன்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Hbd Vairamuthu: காலத்துக்கு ஏற்ப தன்னை புதுப்பித்து கொள்ளும் கவிஞன்! நான்கு தசாப்தங்களாக மக்களை மகிழ்விக்கும் கலைஞன்

HBD Vairamuthu: காலத்துக்கு ஏற்ப தன்னை புதுப்பித்து கொள்ளும் கவிஞன்! நான்கு தசாப்தங்களாக மக்களை மகிழ்விக்கும் கலைஞன்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Published Jul 13, 2024 06:15 AM IST

நான்கு தசாப்தங்களுக்கு மேலாக தமிழ் திரையுலகில் தனது பாடல் வரிகளால் மக்களை மகிழ்வித்து வரும் கலைஞன் ஆக இருக்கும் கவிப்பேரரசு வைரமுத்து, காலத்துக்கு ஏற்ப தன்னை புதுப்பித்து கொள்ளும் கவிஞன் ஆகவும் ஜொலிக்கிறார்.

காலத்துக்கு ஏற்ப தன்னை புதுப்பித்து கொள்ளும் கவிஞன் கவிப்பேரரசு வைரமுத்து
காலத்துக்கு ஏற்ப தன்னை புதுப்பித்து கொள்ளும் கவிஞன் கவிப்பேரரசு வைரமுத்து

தமிழ் மீதான ஆர்வம்

விவசாய குடும்பத்தை சேர்ந்த வைரமுத்து, தமிழ் மீதான பற்றால் சென்னை பச்சையப்பன் கல்லூரியில் தமிழில் முதுகலை பட்டம் படித்தார்.

தனது பத்தாவது வயதிலேயே கவிதைகள் எழுதும் பழக்கத்தை கொண்டவராக இருந்த வைரமுத்து, பதின்ம வயதில் வெண்பாக்கள் எழுதும் அளவில் தன்னை வளர்த்து கொண்டார்.

கல்லூரியில் படிக்கும் மாணவனாக இருக்கும்போதே வைகறை மேகங்கள் என்ற கவிதை நூல் தொகுப்பை வெளியிட்டு பிரபலமடைந்தார். கல்லூரி படிப்புக்கு பின் தமிழ்நாடு அலுவல் மொழி ஆணையத்தில் மொழிப்பெயர்பாளராக பணியாற்றி வந்த வைரமுத்துவுக்கு சினிமா மீது ஆர்வம் தொற்றிக்கொண்டது.

முதல் பாடலில் பிறந்த முதல் குழந்தை

சினிமாவுக்கான வாய்ப்பு தேடலில் ஈடுபட்டிருந்த வைரமுத்துவுக்கு தேனி மண்ணில் இருந்து தமிழ் சினிமாவுக்கு கலை சேவை ஆற்ற வந்தவர்களான இயக்குநர் இமயம் பாரதிராஜா, இசைஞானி இளையராஜா ஆகியோருடன் இணைந்து தனது முதல் திரை இசை பாடலாக நிழல்கள் படத்தில் இடம்பெறும் பொன்மாலை பொழுது பாடலை எழுதினார் வைரமுத்து. அவரது கவிதை நூல்களின் பால் ஈர்க்கப்பட்ட இயக்குநர் பாரதிராஜா இந்த வாய்ப்பை வழங்கினார்.

வைரமுத்து முதல் பாடல் எழுதிய நாளில் தான் அவருக்கு முதல் குழந்தையும் பிறந்தது. இதை அவர் எனக்கும் என் மனைவிக்கும் ஒரே நாளில் பிரசவம் நடந்தது என்று பல பேட்டிகளில் நினைவு கூர்ந்துள்ளார்.

பாரதிராஜா - இளையராஜா - வைரமுத்து கூட்டணி தமிழ் திரை இசையில் ஒரு புது வித பாய்ச்சலை ஏற்படுத்தியது. இவர்களின் பாடல்கள் ரசிகர்களுக்கு சிறந்த விருந்தாகவும் அமைந்தது.

ஏ.ஆர். ரஹ்மானுடன் இணைந்து தொட்ட உச்சம்

1990களில் தமிழ் சினிமாவின் இசையில் புத்துயிர் அளித்தார் ஏ.ஆர்.ரஹ்மான். அதற்கு தனது அற்புத பாடல் வாரிகளால் வைரமுத்து உதவி புரிந்தார். இவர்களின் கூட்டணியில் உருவான பாடல்கல் அனைத்தும் பிற மொழிகளிலும் வெகுவாக பேசப்பட்டது. அத்துடன்தமிழ் மொழியின் சுவையை சர்வதேச எல்லைகளையும் கடக்க வைத்தார் வைரமுத்து.

வைரமுத்துவின் மகுடங்கள்

சிவாஜி கணேசன் நடிப்பில் வெளியான ’முதல் மரியாதை’ படத்தின் அனைத்து பாடல்களுக்காக முதல் முறையாக சிறந்த பாடல் ஆசிரியருக்கான தேசிய விருதை பெற்ற வைரமுத்து அதன்பின் ரோஜா, கருத்தம்மா, சங்கமம், கன்னத்தில் முத்தமிட்டால், தென்மேற்கு பருவக் காற்று, தர்மதுரை படங்களின் பாடல்களுக்காக பல தேசிய விருதுகளை வாங்கி குவித்தார்.

சாகித்ய அகாடமி, கலைமாமணி, பத்மபூஷன் உள்ளிட்ட விருதுகளை பெற்றவர். சிறந்த பாடலாசிரியருக்கான தேசிய விருதினை 7 முறை வென்றுள்ளார். இவையெல்லாம் வைரமுத்து தனது கலை மற்றும் இலக்கிய உலகத்தில் பெற்ற மகுடங்களாக இருக்கின்றன.

தமிழ்நாடு அரசின் விருதுகளையும் வென்ற வைரமுத்து, இலக்கிய உலகிலும் தனி முத்திரை பதித்துள்ளார். தண்ணீர் தேசம், கள்ளிக்காட்டு இதிகாசம், கருவாச்சி காவியம் என நூல்களையும் பல நாவல்கள், கவிதைகளையும் எழுதியுள்ளார்

வைரமுத்துவின் மகன்களான மதன் கார்க்கி, கபிலன் வைரமுத்து ஆகியோரும் தமிழ் சினிமாவின் பாடல் ஆசிரியர், வசனகர்த்தவாக இருந்து வருகிறார்கள். 

நான்கு தசாப்தங்களுக்கு மேலாக தமிழ் திரையுலகில் இருந்து வரும் வைரமுத்து சுமார் 7 ஆயிரத்துக்கும மேற்பட்ட திரைப்பட பாடல்களை எழுதியுள்ளார். காலத்துக்கு ஏற்ப தன்னை புதுப்பித்து கொள்ளும் கவிஞனாகவும், தமிழ் திரை இசை பாடல்களில் தனது அற்புத வரிகளால் மக்களின் மனங்ளில் நீக்கமற நிறைந்திருக்கும் கவிஞனாக திகழும் வைரமுத்துவுக்கு இன்று 71வது பிறந்தநாள்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன: