30 Years of Magalir Mattum: "கறவை மாடு மூணு காளை மாடு ஒன்னு" - MeToo கருத்தை காமெடி பின்னணியில் உறக்க சொன்ன படம்
காமெடி படமாக இருக்கும் மகளிர் மட்டும் படத்தில் வசன காமெடி, பாடி லாங்குவேஜ் காமெடி முதல் இப்போது இருக்கும் அவல நகைச்சுவை பாணி வரை இந்த படத்தில் காமெடியின் பல்வேறு வகைகளும் கலந்து கட்டியிருக்கும்.

ஹாலிவுட்டில் 1980இல் வெளியான 9 to 5 என்ற படத்தை தழுவி எடுக்கப்பட்டிருக்கும் இந்தப் படத்துக்கு ஹீரோ என்ற தனி கதாபாத்திரம் இல்லாமல் கதைதான் ஹீரோவாக இருக்கும்.
1990 காலகட்டத்தில் பல மிடில் கிளாஸ் இளம்பெண்களும், குடும்ப பெண்களும் பொருளாதாரத்தை பெருக்க வேலைக்கு செல்வதென்பது அதிகரித்தது. பணம் சம்பாதிக்க வேண்டும் என்கிற பிரதான தேவை வேலைக்கு செல்லும் பெண்கள் பணியிடங்களில் சந்திக்கும் அத்துமீறல்கள், பாலியல் சீண்டல்கள், தவறான கண்ணோட்டத்தில் நடத்தப்படுவது போன்றவற்றை அவ்வளவு எளிதாக புறந்தள்ளிவட முடியாது. வேலை பறிபோய்விடும் என்கிற அச்சம், குடும்ப சூழ்நிலை போன்ற பல்வேறு காரணங்களால் இது போன்ற சிக்கல்களை சகித்துக்கொண்ட இருந்த இருண்ட பக்கங்களை வெளிச்சம் போட்டு காட்டிய படமாக மகளிர் மட்டும் இருந்தது.
இதுபோன்ற உணர்வுரீதியான விஷயங்களை சீரியஸாக சொல்லாமல் காமெடி கலந்து சொன்ன விதத்தில் இந்தப் படம் மக்கள் மனதை வென்றது. ஒரு டாப் ஹீரோ, டாப் இயக்குநர் இணைந்தால் அதில் எவ்வளவு மாஸான சம்பவங்கள் இருக்குமா, அதைப் போல்தான் கமல்ஹாசன் - கிரேஸி மோகன் கூட்டணியானது அப்போது இருந்தது. இவர்களுடன் இயக்குநர் சீங்கிதம் சீனிவாசராவ் இணைந்தால் அது வேற லெவல் காம்போவாக உருவெடுக்கும். ஏனென்றால் இந்த மூவர் கூட்டணியின் முந்தையை படங்களான அபூர்வ சகோதரர்கள், மைக்கேல் மதன காம ராஜன் அடித்த ஹிட், படம் மீதான எதிர்ப்பார்பை இயல்பாகவே ஏற்படுத்தியது.
1990களில் வில்லன் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வந்த நாசர், பெண்கள் என்றாலே அசடு கொட்டும் கதாபாத்திரத்தில் படம் நெடுகிலும் சிரிக்கவும், ரசிக்கவும் வைத்திருப்பார்.
நாசர் மேனேஜராக இருக்கும் கார்மெண்ட்ஸில் கம்யூட்டர் டிசைனராக ரேவதி, டெயிலராக ஊர்வசி, ஹவுஸ்கீப்பிங் பனியாளராக ரோகிணி ஆகியோர் பணிபுரிய, இவர்கள் மூவர் மீது நாசருக்கு ஒரு கண் இருக்கிறது. ஒரு கட்டத்தில் இந்த மூவரும் நாசர் வலையில் சிக்க, அவரது விருப்பத்தை நிறைவேற்ற சம்மதம் தெரிவிக்கிறார்கள்.
இதையடுத்து கெஸ்ட் ஹவுஸ் செல்ல முடிவு செய்து அங்கு திடீர் டுவிஸ்டாக நாசரை தங்களது வலையில் சிக்க வைத்து கார்மெண்ட்ஸ் பொறுப்பை ஏற்கும் இந்த மூவர் கூட்டணி பல்வேறு மாற்றங்களை செய்ய, இறுதியில் சுபம் என படம் முடிகிறது.
இப்போது அதிகமாக உச்சரிக்கப்படும் Women Empowerment பற்றி 29 ஆண்டுகளுக்கு முன்னரே பேசிய இந்தப் படம், சமீபத்தில் விஸ்வரூபம் எடுத்த மீடூ பற்றியும் எடுத்துரைத்துள்ளது.
கிரேசி மோகன் வசனங்கள் வெறும் நகைச்சுவையாக இல்லாமல் மேற்கூறிய இரண்டு விஷயங்களையும் தேவையான இடங்களில் சீரியசாகவும் பேசியது. படத்தில் நாசருடன், ரேவதி, ஊர்வசி, ரோகிணி ஆகியோர் மாறி மாறி அபார நடிப்பினால் தங்களது மீது கவனத்தை திருப்பி ஸ்கோர் செய்ய வைத்தனர்.
பல்லவன் பேருந்து பெண் டிரைவர் இயக்குவதை பார்த்து ரேவதி கேங் ஆச்சர்யப்பட்டு கேட்க, அதற்கு இனிமே நம்ம ராஜ்ஜியம் என்ற வரும் ஒற்றை பதிலில் படம் சொல்ல வரும் மொத்த கருத்துமே அடங்கி போகும்.
கமல் தயாரிக்கும் படங்களில் ஆஸ்தான இசையமைப்பாளராக இளையராஜா இருந்து வந்த நிலையில் இந்தப் படத்திலும் அவரது இசையில் வரும் அனைத்து பாடல்களும், பின்னணி இசையும் ஏ1 ரகம்.
கறவமாடு மூணு என்ற பாடலில், ரேவதி, ஊர்வசி, ரோகிணி ஆகியோரின் கதாபாத்திரங்களுக்கு ஏற்ப பாடகி ஜானிகி பாடியிருக்கும் டோன் வித்தியாசம், அவரது அனுபவத்தின் வெளிபாட்டை காட்டும் விதமாக அமைந்தது.
இந்த படத்தில் சிறிய கேமியோவில் பிணமாக தோன்றி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது மட்டுமில்லாமல், எந்தவொரு வசனமும் பேசாமல் கைதட்டல் வாங்கி சென்றிருப்பார் நாசர். அவரை வைத்து வரும் நகைச்சுவையான சண்டைக் காட்சியை பார்க்கும்போது, அச்சு அசல் பிணம் போன்றே தோன்றி குபீர் சிரிப்பை வரவழைக்கும் வித்தை நாகேஷால் மட்டுமே முடியும் என்பதை அடித்து சொல்லலாம்.
பெண்கள் பணியிடங்கள் சந்திக்கும் பிரச்னைகளையும், வேலைக்கு செல்வதால் அவர் அடையும் முன்னேற்றங்களையும் நகைச்சுவையுடன் கலந்து சொன்ன விததத்தில் மகளிர் மட்டும், மகளிருக்காக மட்டுமல்லாமல் அனைவருக்குமான பாடமாகவே அமைந்தது.
பெண்களுக்கு பணியிடங்களில் வழங்கப்படும் அதிகாரம் பற்றியும், வேலைக்கு செல்லும் இடங்களில் சந்திக்கும் அத்துமீறல்கள் போன்ற சீரியஸான விஷயங்களைநகைச்சுவை கலந்து மக்கள் மனதில் ஆளமாக பதித்த படமாக கமல்ஹாசன் தயாரித்து வெளியான மகளிர் மட்டும் வெளியாகி இன்றுடன் 30 ஆண்டுகள் ஆகிறது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9

டாபிக்ஸ்