7 ம் தேதி வரை புழல் சிறைதான்..ஸ்ரீகாந்த் மீது பதியப்பட்ட வழக்குகள் என்னென்ன? - முழு விபரம் இங்கே!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  7 ம் தேதி வரை புழல் சிறைதான்..ஸ்ரீகாந்த் மீது பதியப்பட்ட வழக்குகள் என்னென்ன? - முழு விபரம் இங்கே!

7 ம் தேதி வரை புழல் சிறைதான்..ஸ்ரீகாந்த் மீது பதியப்பட்ட வழக்குகள் என்னென்ன? - முழு விபரம் இங்கே!

Kalyani Pandiyan S HT Tamil
Published Jun 24, 2025 03:11 PM IST

நடிகர் ஸ்ரீகாந்தின் மீது பதியப்பட்ட வழக்குகள் என்னென்ன என்பதை பார்க்கலாம்.

7 ம் தேதி வரை புழல் சிறைதான்..

ஸ்ரீகாந்த் மீது பதியப்பட்ட வழக்குகள் என்னென்ன? - முழு விபரம் இங்கே!
7 ம் தேதி வரை புழல் சிறைதான்.. ஸ்ரீகாந்த் மீது பதியப்பட்ட வழக்குகள் என்னென்ன? - முழு விபரம் இங்கே!

NDPS 8c சட்டம் - போதைப்பொருளை தொடர்ந்து பயன்படுத்தியதோடு, அதனை வைத்திருத்தல்,

NDPS சட்டம் 22b - மிகக்குறைந்த அளவை தாண்டியும், வணிக ரீதியாக போதைப்பொருளை வைத்திருத்தல்

NDPS 29 (1) குற்றச் செயலில் பங்கு பெற்றவர் என போதைப் பொருள் தடுப்பு சட்ட பிரிவுகள் போன்ற 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருக்கிறது.

முன்னதாக, போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட ஸ்ரீகாந்த் நீதிமன்றத்தில் ஜாமீன் வழங்க வேண்டும் என்று கூறி கோரிக்கை வைத்தார்.

நான் தவறு செய்து விட்டேன்

அதன்படி நீதிமன்றத்தில் அவர் கூறியதாக சொல்லப்படும் தகவலில், ‘போதைப்பொருள் பயன்படுத்தி நான் தவறு செய்து விட்டேன். மகனுக்கு உடல்நிலை சரியில்லை. அவனை நான் கவனித்துக்கொள்ள வேண்டும். குடும்பத்தில் பிரச்சினை இருக்கிறது.

ஒத்துழைப்புக்கொடுப்பேன்

வெளிநாடு செல்ல மாட்டேன். வழக்கு விசாரணைக்கு நான் முழுமையாக ஒத்துழைப்புக்கொடுப்பேன்’ என்று கூறியதாக தெரிகிறது.

மேலும் ஸ்ரீகாந்த், போதைப்பொருளை யாருக்கும் விற்பனை செய்யவில்லை என்றும் தான் மட்டுமே பயன்படுத்தியதாகவும் வாக்குமூலம் அளித்ததாக தகவல் வெளியாகி இருக்கிறது.

இதனைக்கேட்ட நீதிபதி, ஜாமீன் வழங்க மறுத்து போதைப்பொருள் தடுப்பு வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யுமாறு அறிவுரை வழங்கி இருக்கிறார். ஸ்ரீகாந்த் அடுத்த மாதம் 7ம் தேதி வரை புழல் சிறையில் அடைக்கப்பட்டு இருக்கிறார்.

அதிமுக நிர்வாகி வழியாக நடந்த சப்ளை

முன்னதாக, பார் மோதலில் நுங்கம்பாக்கம் போலீசாரால் கைது செய்யப்பட்ட அதிமுகவின் முன்னாள் ஐடி விங் நிர்வாகி பிரசாத்திடம் விசாரணை நடத்தப்பட்டது. அவரது தொலைப்பேசியில் இருந்த தகவல்களின் அடிப்படையில் அவர் போதைப்பொருள் பரிமாற்றத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. மேலும் அதற்கு உதவியாக இருந்த பிரதீப் என்பவரும் ஆப்பிரிக்க நாட்டைச் சேர்ந்த ஜான் என்பவரும் கைது செய்யப்பட்டனர்.

அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் நடிகர் ஸ்ரீகாந்த் போதைப்பொருள் பயன்படுத்தியது தெரியவந்தது. இதனையடுத்து அவருடைய வீட்டில் சோதனை நடத்தப்பட்டது. அங்கிருந்து 1 கிராம் அளவிலான போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது.

8 முறை போதைப்பொருள் வாங்கிய ஸ்ரீகாந்த்

தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் பிரசாத் மூலமாக ஸ்ரீகாந்த் 8 முறை போதைப் பொருளை வாங்கி இருப்பது தெரியவந்தது. இதே போல பிரசாத் வேறு யாருக்கெல்லாம் போதைப்பொருளை வாங்கிக்கொடுத்திருக்கிறார் என்ற கோணத்தில் விசாரணை நடந்து வருகிறது.

பாரில் நடந்த தகராறு, வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடி என 5 வழக்குகளில் கைது செய்யப்பட்டு குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டு இருக்கும் பிரசாத்தை, போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்த இருக்கின்றனர். அந்த விசாரணையில் மேலும் சினிமா நட்சத்திரங்கள் சிக்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.