அசால்ட் காட்டிய ஆச கூட.. 100 மில்லியனை தொட்ட வியூஸ்..தேடி வந்த சூர்யா 45 - யார் இந்த சாய் அபயங்கர்?
கட்சி சேர.. ஆச கூட.. இரண்டே பாட்டு.. 100 மில்லியனை தொட்ட வியூஸ் தேடி வந்த சூர்யா படம்.. - யார் இந்த சாய் அபயங்கர்?
சாய் அபயங்கர் பற்றிதான் தற்போது கோலிவுட் பரபரப்பாக பேசிக்கொண்டு இருக்கிறது.
காரணம், சூர்யாவின் 45 வது படத்தில் இசையமைப்பாளராக முதலில் பிரபல இசையமைப்பாளர் ஏ. ஆர்.ரஹ்மான் கமிட் செய்யப்பட்டு இருந்த நிலையில், தற்போது அவருக்கு பதிலாக சாய் அபயங்கர் கமிட் செய்யப்பட்டு இருக்கிறார். அவர் யார் என்பதை இங்கே பார்க்கலாம்.
யார் இந்த சாய்?
பிரபல பாடகர்கள் திப்பு மற்றும் ஹரிணி ஆகியோரின் மகனான இவர், கடந்த 2004 ஆம் ஆண்டு நவம்பர் நான்காம் தேதி பிறந்தவர். அடிப்படையிலேயே இசைக்கலைஞ ரான இவர், கீ போர்டு மற்றும் கிடார் கருவிகளை வாசிப்பது மட்டுமல்லாமல் நன்றாக பாடும் திறமையும் கொண்டவர். கடந்த ஜனவரி மாதம் இவரின் இசையில் வெளியான "கட்சி சேர" பாடல் மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்ற இந்தப் பாடல் யூடியூப்பில் 135 மில்லியன் பார்வையாளர்களை பெற்று இருக்கிறது.
அதன் பின்னர் இவரது இசையில் வெளியான " ஆச கூட" பாடலும் 100 மில்லியனுக்கும் மேல் பார்வையாளர்களை பெற்றது. இவரது திறமையை பார்த்த லோகேஷ் கனகராஜ் அவர் எழுதி, தயாரிக்கும் பென்ஸ் படத்தில் சாயை இசையமைப்பாளராக கமிட் செய்திருக்கிறார். ராகவா லாரன்ஸ் நடிக்கும் இப்படத்தை பாக்யராஜ் கண்ணன் இயக்க இருக்கிறார். இதன் பின்னர் யாரும் எதிர்பார்க்காத வகையில் சாய் தற்போது சூர்யாவின் படத்தில் கமிட் ஆகி இருக்கிறார்.
கங்குவா
கங்குவா திரைப்படத்திற்குப் பின் நடிகர் சூர்யா வாடிவாசல் திரைப்படத்தில் தனது முழு கவனத்தையும் செலுத்துவார் என ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர். ஆனால், சூர்யா தரப்பிலிருந்து வந்ததோ வேறு பதில்கள்.
சூர்யா கங்குவா திரைப்படத்தை தொடர்ந்து புதிய படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். சூர்யாவின் இந்த 45வது படத்தை நடிகரும் இயக்குநருமான ஆர்.ஜே. பாலாஜி இயக்கவுள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, இந்தத் திரைப்படத்திற்குப் பின்னரே சூர்யா வாடிவாசல் திரைப்படத்தில் நடிப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், அவர் கார்த்திக் இயக்கத்தில் நடித்து முடித்த திரைப்படம் விரைவில் வெளியீட்டிற்கு வரவுள்ளது.
முன்னதாக, ஆர்.ஜே. பாலாஜி- சூர்யா கூட்டணியில் உருவாகும் இந்த திரைப்படத்தை ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தின் பூஜை அண்மையில் நடந்து முடிந்தது.
ஏ.ஆர்.ரஹ்மான் என்ன ஆனார்?
சூர்யா 45 படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் தான் இசையமைக்க உள்ளார் என்று அதிகாரப்பூர்வமாக கூறப்பட்டு வந்த நிலையில், அவர் அப்படத்திலிருந்து விலகியதற்கு என்ன காரணம் என இதுவரை அறிவிக்கப்படவில்லை. அத்துடன், சிலர் அவரது மனைவி விவாகரத்து அறிவித்ததால், அவர் மன உளைச்சலில் இருப்பதாகவும் இதனால் அவர் ஏற்கனவே கமிட் ஆன படங்களுக்கு மட்டும் தற்போது இசையமைக்க உள்ளதாகவும் பல தகவல்களை கூறி வருகின்றனர். மேலும், சூர்யா 45 படத்திற்கு ஒளிப்பதிவாளராக ஜி.கே.விஷ்ணு அறிவிக்கப்பட்டுள்ளார்.
சூர்யா 45 பட பூஜை
முன்னதாக, கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள பிரசித்தி பெற்ற ஆனைமலை மாசாணியம்மன் கோயிலில் ரசிகர்களுக்கு மத்தியில் படத்தின் பூஜை நடைபெற்றது. இதில் நடிகர் சூர்யா, நடிகை த்ரிஷா உள்ளிட்ட படக்குழுவினர்கள் பங்கேற்றார்கள்.
பொள்ளாச்சியில் ஷூட்டிங்
கடந்த சில நாள்களுக்கு முன் சூர்யா 45 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. விபூதி, குங்குமம் பூசப்பட்ட அரிவாள், ஈட்டியுடன் வித்தியாசமாக படத்தின் போஸ்ட்ர் அமைந்திருந்தது. தற்போது படம் பூஜையுடன் தொடங்கியிருக்கும் நிலையில் பொள்ளாச்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் படத்தின் ஷூட்டிங் நடந்து வருகிறது.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், பொருள் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும்.
டாபிக்ஸ்