Director Sundar C: மயங்கி கிடந்த விஷால்.. 30 வருடமாகியும்.. எனக்கு ஏற்பட்ட வருத்தம் - சுந்தர் சி எமோஷனல் பேச்சு
Director Sundar C: தமிழ் சினிமாவில் 30 வருடங்களுக்கு மேல் பயணித்து பல கமர்ஷியல் படங்கள் கொடுத்தும், நல்ல இயக்குநர்கள் லிஸ்டில் என் பெயர் இல்லாதது வருத்தமாக உள்ளது என மதகஜ ராஜா சக்சஸ் மீட்டில் இயக்குநர் சுந்தர் சி எமோஷலாக பேசியுள்ளார்.

இயக்குநர் சுந்தர் சி - விஷால் கூட்டணியில் பக்கா பேமிலி எண்டர்டெயினராக படமாக அமைந்திருக்கும் மதகஜராஜா, கடந்த ஞாயிற்றுகிழமை வெளியாகி பாக்ஸ் ஆபிஸில் வசூலை அள்ளி வருகிறது. இதுவரை படம் ரூ. 25 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது.
2013ஆம் ஆண்டிலேயே வெளிவர வேண்டிய இந்த படம் பெட்டிக்குள் இத்தனை நாள் முடங்கி கிடந்த நிலையில், பொங்கல் ஸ்பெஷலாக தற்போது வெளியாகி ரசிகர்களுக்கு விருந்து படைத்துள்ளது. இதையடுத்து படத்தின் சக்சஸ் மீட் சென்னையில் நடைபெற்றது. இதில் நடிகர் விஷால், நடிகை அஞ்சலி, இயக்குநர் சுந்தர் சி, இசையமைப்பாளர் உள்பட பலரும் கலந்து கொண்டார்கள்.
விழாவில் இயக்குநர் சுந்தர் சி பேசியதாவது, "இதுவரை நான் எந்தப் படத்துக்கும் சக்சஸ் மீட் வைத்ததில்லை. ‘அரண்மனை 4’ படத்துக்கு கூட கேட்டார்கள். ஆனால், மதகஜராஜா படத்துக்கு சக்சஸ் மீட் வைப்பதற்குக் காரணம், மற்ற படங்களை விட சிறப்பு வாய்ந்தது. 12 வருடம் கழித்து வருவதால் என்ன சாதித்துவிட போகிறது என்று பலரும் சொன்னார்கள். ஆனால் படத்தின் மீது எனக்கு நம்பிக்கை இருந்தது. ரசிகர்கள் வெற்றியடைய வைத்திருக்கிறார்கள். இது மிகப்பெரிய வெற்றி. இவ்வளவு பெரிய வரவேற்பு கிடைத்தது மிகவும் பெரிய விஷயம்.
மயங்கி கிடந்த விஷால்
இந்த படத்துக்காக விஷால் அதிகம் கஷ்டப்பட்டிருக்கிறார். ஒரு நாள் விஷாலின் டிரைவர் போன் பண்ணி, சார், கார்ல மயங்கி விழுந்துட்டார் என்று சொன்னார். போய் பார்த்தால் மயங்கிக் கிடந்தார். அந்த அளவுக்கு கடுமையான உழைப்பைக் கொடுத்தார். அவர் பட்ட கஷ்டத்துக்கு இந்த வெற்றி பெரிய மருந்தாக அமைந்திருக்கிறது.
விஷால் பட்ட கஷ்டம் கொஞ்ச நஞ்சமல்ல. அதை வெறும் வார்த்தைகளில் சொல்ல முடியாது. இந்த வெற்றி, விஷாலின் உழைப்புக்கு சமர்ப்பணம். ரசிகர்களுக்கு நான் என்றும் கடமைப்பட்டுள்ளேன்.
எனக்கு வருத்தம்
கமர்ஷியல் படங்கள் பெரிய வெற்றி அடையும். அவற்றை ரசிகர்கள் ரசிப்பார்கள். கூட்டம் கூட்டமாக திரையரங்குக்கு வருவார்கள். என்னதான் கமர்ஷியல் படங்கள் என்ற டேக் என் மீது இருந்தாலும், முப்பது வருடங்களாக மக்கள் ஆதரவுடன் இதுவரை இருக்கிறேன்.
ஆனால், என் விஷயத்தில், மனதுக்குள் இன்னும் சின்ன வருத்தம் இருக்கிறது. தமிழ் சினிமாவில் ரசிகர்கள் ரசிக்கும் படங்களையும், தயாரிப்பாளர்களுக்கு லாபம் தரும் படங்களையும் கொடுத்து வரும் என்னுடைய பெயர், நல்ல இயக்குநர் என்ற பட்டியலில் வராதது வருத்தம். இத்தனை ஹிட் கொடுத்தும் எனக்கான பெரிய பாராட்டுகள் இருக்காது. எனக்கு உரிய இடம் இன்னும் கிடைக்கவில்லை என்பதற்காக கவலைப்படாமல், என் கடன் பணி செய்து கிடப்பதே என்பதுதான் எனது கொள்கை" என்றார்.
தமிழ் சினிமாவில் தங்களது அபார நடிப்பால் ரசிகர்களை கவர்ந்து உயிரிழந்த பிரபலங்களான இயக்குநர் மனோபாலா, மணிவண்ணன் மற்றும் காமெடியில் கலக்கிய மயில்சாமி, சிட்டிபாபு, சீனுமோகன் ஆகியோரும் இந்த படத்தில் நடித்துள்ளார்கள்.
இந்த படத்தின் மூலம் விஷால் பின்னணி பாடகராகவும் உருவெடுத்துள்ளார். விஜய் ஆண்டனி இசையில் படத்தில் அவர் பாடிய டியர் லவ்வரு என்ற பாடல் அந்த காலகட்டத்திலேயே ட்ரெண்ட் ஆனது. தற்போது இந்த பாடல் மீண்டும் ரசிகர்களை கவர்ந்து வைரலாகி வருகிறது. அத்துடன் சந்தானத்தின் காமெடியும் சிறப்பாக இருப்பதாக பாராட்டுகளை பெற்று வருகிறது.

தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்