Raghuvaran Memorial Day: தமிழ் சினிமாவின் தவிர்க்கமுடியாத வில்லன் ரகுவரனை மறக்கமுடியுமா?
Raghuvaran Memorial Day: நடிகர் ரகுவரனின் நினைவுநாள் இன்று அனுசரிக்கப்படுகிறது.

Raghuvaran Memorial Day: தமிழ் சினிமாவில் எத்தனையோ வில்லன்கள், ஒவ்வொரு காலத்திலும் கோலோச்சினர். ஒவ்வொருவருக்கும் தனித்துவமான பாவனைகள், கண் சமிஞ்கைகள், நடை உடை, அதட்டல்கள் இருந்தன. அதில் மிகவும் அதட்டிப் பேசாமல், ஹே ஹே ஹே எனச் சொல்வதைக் கூலாக சொல்லி வில்லத்தனம் செய்வதில், கெட்டிக்காரர் தான், ரகுவரன். வில்லன்களில் சூப்பர் ஸ்டார் என்றே கூறலாம். அந்தளவுக்கு, இவர் தோன்றும் காட்சிகள் மிகவும் கொடூரமாக இருக்கும். ஒருமுறை இயக்குநர் கரு.பழனியப்பன் அளித்த பேட்டியொன்றில், தன்னுடைய சிவப்பதிகாரம் திரைப்படத்தில் படப்பிடிப்புத்தளத்தில் ரகுவரன் அவர்களின் காட்சிகள் எடுக்கப்படும்போது, அவர் கேரவனில் இருந்து வராமல் தாமதம் செய்திருக்கார்.
வெகுநேரத்துக்குப் பின் அங்கு சென்று இயக்குநர் கரு.பழனியப்பன் பார்த்தபோது, தனக்கு கொடுக்கப்பட்ட பேராசிரியர் கதாபாத்திரம் எப்படிப் பேசுவார் எனப் பேசி, தன்னைத்தானே ரிகர்சல் செய்து கொண்டு இருந்திருக்கிறார், ரகுவரன். உடனே, அவர் எதிர்பார்க்கும் பேராசிரியர் பிம்பத்தை எளிமையாகச் சொல்லி, நடிப்பினைப் பெற்றிருக்கிறார். அந்தளவுக்கு தான் செய்யும் தொழிலுக்கு உண்மையாக இருந்திருக்கிறார், ரகுவரன். அதேபோல், ரகுவரன் ஒவ்வொரு படத்தின் சூட்டிங்கின்போதும் தான் ஏற்ற கதாபாத்திரத்தில் முழுமையாக இன்வால்வ் ஆகிவிடுவாராம். அஞ்சலி படத்தின் படப்பிடிப்பின்போது, தனது அம்மாவை குழந்தைபோல் பார்த்துக்கொண்டாராம்.
ரகுவரனின் பின்னணி என்ன?கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு ஊரில் வேலாயுதம் நாயர் மற்றும் கஸ்தூரி தம்பதியருக்கு டிசம்பர் 11ஆம் தேதி, 1958ஆம் ஆண்டு பிறந்தவர், ரகுவரன். இந்த தம்பதியரின் நான்கு குழந்தைகளில் ரகுவரன் மூத்தவர். மாத்தூர் என்னும் கிராமத்தில் ஹோட்டல் நடத்திக்கொண்டிருந்த வேலாயுதன் நாயர், தனது தொழிலை கோவைக்கு மாற்றியபோது,ரகுவரின் குடும்பமே கோவைக்கு புலம்பெயர்ந்தது. அதன்பின், கோவை ஸ்டேன்ஸ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப்பள்ளியில் கல்லூரிப் படிப்பும், கோவை அரசு கலைக் கல்லூரியில் இளங்கலையில் வரலாறு படிக்க ஆரம்பிக்கையில், அதை நிறுத்திவிட்டு, ஸ்வப்ண திங்கள் என்னும் கன்னடப் படத்தில் சின்ன கதாபாத்திரத்தில் நடித்தார்.