7 Years Of Pandigai: ஆதரவற்ற இளைஞர்.. பணத்துக்காக ரவுடியாகவும் திருடனாகவும் மாறினால் ‘பண்டிகை’
7 Years Of Pandigai: ஆதரவற்ற இளைஞர் பணத்துக்காக ரவுடியாகவும் திருடனாகவும் மாறினால் அது ‘பண்டிகை’ திரைப்படம் ஆகிறது.

7 Years Of Pandigai: 2017ஆம் ஆண்டு, ஜூலை மாதம் 14ஆம் தேதி, அறிமுக இயக்குநர் ஃபெரோஸ் முகமது எழுதி இயக்கி, அவரது மனைவியும் நடிகையுமான விஜயலட்சுமி அகத்தியன் தயாரித்த படம், ‘பண்டிகை’. இப்படத்தில் கிருஷ்ணா, ஆனந்தி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். சரவணன், கருணாஸ், பாண்டி, மதுசூதன் ராவ் ஆகியோர் முக்கிய துணைவேடங்களில் நடித்திருந்தனர். நேர்மறையான விமர்சனங்களைப் பெற்ற இப்படத்துக்கு ஒளிப்பதிவு அர்வியும், இசையினை ஆர்.ஹெச். விக்ரம் என்னும் புதுமுகமும் செய்தனர்.
பண்டிகை திரைப்படத்தின் கதை என்ன?:
வேலு சென்னையில் ஒரு தங்கும் விடுதியில் பணியாளராக இருக்கிறார். அவர் வெளிநாட்டில் பணிக்குப் போவதற்குத் தேவையான பணத்தை சம்பாதிக்க முயற்சித்துக்கொண்டு இருக்கிறார்.
கதை அப்படியே, ஃபிளாஷ் பேக்குக்கு செல்கிறது. அதில் சிறுவயதில் தாய் மற்றும் தந்தையை இழந்துவாடும் வேலுவை, அவரது மாமாவும் அத்தையும் ஒரு உறைவிடப் பள்ளிக்கு அனுப்பிவிடுகின்றனர்.
அங்கு அந்த ஹாஸ்டல் வாழ்க்கை கொடுமையாக இருக்கிறது. படித்து முடித்ததும் தன் காலில் சுயமாக நிற்பதற்காக, சென்னைக்கு வருகிறார். அடிப்படையில் ஏழை, கல்யாணம் ஆகாத இளைஞரான வேலுவும் அவரது அறைத்தோழன் திருப்பதியும் சென்னையில் சரியான பணியில் இல்லாமல் மிகவும் கஷ்டப்படுகின்றனர். இதற்கிடையே ஒரு அடியாள் கும்பலில் சேர நினைக்கிறார். அதற்கு அடியாட்கள் கும்பலின் முகவர் முனியைச் சந்திக்கிறார்கள். ஆனால், வேலுவை கண்டுகொள்ளாமல் இருக்கிறார். ஒரு நாள் மதுபான விடுதியில் நடந்த சண்டையில் வேலு பலரையும் அடித்து துவம்சம் செய்கிறார். இதைப் பார்த்த அடியாட்களின் முகவரான முனி, நட்வர் தாதாவிடம் அவரை அறிமுகப்படுத்தி வைக்கிறார்.
அதன்பின், தினமும் போராக இருக்கும் வேலுவின் வாழ்க்கையில், காவ்யா என்னும் பெண் மூலம் தென்றல் வீசுகிறது. இருவரும் காதலிக்கின்றனர். காவ்யா, இந்த ரவுடிச வாழ்க்கையில் இருந்து வேலுவை வெளியேறச் சொல்கிறார். இருப்பினும், வேலு தனது பணத்தேவையினால் அதே அடியாள் தொழிலை செய்துவருகிறார். ஆனால், வேலுவுக்கும் ஒரு கட்டத்தில் அடியாள் வாழ்க்கை வெறுத்து அதில் இருந்து வெளியேற நினைக்கிறார். ஆனால்,அவர் சிறுவயதில் இழந்த தன் வீட்டை எப்படியாவது மீட்டுவிட நினைக்கிறார். வேலு, விக்டர் என்னும் பெரிய நிழலுக தாதாவின் சொத்துக்களை திருட முயற்சித்து தோற்கிறார். அப்படியிருக்க இறுதியில் என்ன ஆனது என்பது தான் கிளைமேக்ஸ்!
பண்டிகை திரைப்படத்தில் பணிபுரிந்தவர்கள் விவரம்:
வேலுவாக கிருஷ்ணாவும், காவ்யாவாக ஆனந்தியும், முனியாக சரவணனும், திருப்பதி பாண்டியும், ரத்தினம் குமாராக கருணாஸூம், நடித்துள்ளனர். மேலும், நட்வார் தாதாவாக மதுசூதன் ராவும், விக்டராக அர்ஜையும், முந்திரி சேட்டாக நிதின் சத்யாவும் ஃபீலிங் சுரேஸாக அருள் தாஸும் நடித்துள்ளனர். மேலும், போலீஸ் ஆபிஸராக சண்முகராஜனும் முனியின் மனைவியாக செந்தி குமாரியும் நடித்திருந்தனர்.
பண்டிகை திரைப்படத்தில் முதலில் கமிட் ஆன விக்ரம் பிரபு:
ஆரம்பத்தில் விக்ரம் பிரபு, இப்படத்தில் ஹீரோவாக நடிக்கலாம் என இருந்த நிலையில், கிருஷ்ணா ஹீரோவாக நடிக்க கமிட் ஆனார். பின், 2015ஆம் ஆண்டு ஜூன் மாதம் சூட்டிங் தொடங்கும்போது ஆனந்தி இப்படத்தில் கதையின் நாயகியாக இணைந்தார்.
இப்படத்தின் சாட்டிலைட் உரிமை வசந்த் டிவிக்கு விற்கப்பட்டிருந்தது. ஒரு ரவுடி எப்படி திருடனாக மாறுகிறான் என்பதைப் பற்றி படம் பேசுவதாக, பலர் இப்படத்தினைப் பற்றி எழுதினர். படத்திற்கு நேர்மறையான விமர்சனங்கள் வந்தன. ஆனாலும், இப்படம் ஃபாக்ஸ் ஆபிஸில் தோல்வியைத் தழுவியது.

டாபிக்ஸ்