Singer Jayachandran: "ராசாத்தி உன்ன காணாத நெஞ்சு.." 16 ஆயிரம் பாடல்கள்.. மெலடி, எக்ஸ்பிரஷன் பாடகர் ஜெயச்சந்திரன் மறைவு
Singer Jayachandran Died: பழம்பெரும் பாடகரான ஜெயச்சந்திரன் உடல்நலக் குறைவால் காலமானார். அவருக்கு வயது 80. மெலடி, எக்ஸ்பிரஷன் பாடகரான ஜெயச்சந்திரன் தென்னிந்திய மொழிகளில் 16 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார்.
தென்னிந்திய சினிமாவில் சிறந்த மெலடி பாடகராகவும், எக்ஸ்பிரஷன் சிங்கர் என்றும் அழைக்கப்பட்டவர் ஜெயச்சந்திரன். இவர் கடந்த 1965களில் இருந்து 60 ஆண்டுகளுக்கு மேலாக சினிமாவில் பின்னணி பாடகராக இருந்து வந்துள்ளார். இதுவரை மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்பட தென்னிந்திய மொழிகளில் சுமார் 16 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார்.
மருத்துவமனையில் உயிரிழப்பு
கேரள மாநிலம் திருச்சூரில் உள்ள திருச்சூர் அமலா மருத்துவமனையில் வியாழக்கிழமையன்று (ஜனவரி 9) அவரது உயிர் பிரிந்தது. ஏற்கனவே அவர் புற்றுநோய் பாதிப்புக்காக சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது.
இன்று மாலை 7 மணியளவில் பூக்குன்னத்தில் உள்ள அவரது வீட்டில் ஜெயச்சந்திரன் திடீரென மயக்கமடைந்தார். இதையடுத்து அவர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இரவு 7:54 மணிக்கு அவரது மரணம் உறுதி செய்யப்பட்டது.
பாடகர் ஜெயச்சந்திரன் மறைவுக்கு திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் பலரும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.
ஜெயச்சந்திரன் இசைப்பயணம்
கேரளா மாநிலம் கொச்சி அருகே ரவிபுரத்தில் பிறந்த ஜெயச்சந்திரன் சிறு வயதில் இருந்தே இசை மீது ஆர்வம் மிக்கவராக இருந்துள்ளார். செல்வி செழிப்பு மிக்க குடும்பத்தில் பிறந்த இவர் இசைத்துறையில் பிரபல பின்னணி பாடகர் யேசுதாஸுடன் இணைந்து பல கச்சேரிகளில் பாடியுள்ளார்.
1967இல் வெளியான மலையாள படமான உத்யோகஸ்தா படத்தில் இடம்பிடித்த அனுராக காணம் பேலே என்ற எவர்க்ரீன் பாடல் மூலம் சினிமாவில் பாடகராக அறிமுகமானார். தமிழில் 1973இல் வெளியான மணிப்பயல் என்ற படத்தில் இடம்பிடித்த தங்க சிமில் போல் என்ற பாடலை எம்.எஸ். விஸ்வநாதன் இசையமைப்பில் பாடினார்.
பல்வேறு புகழ்பெற்ற இசையமைப்பாளர்களின் இசையில் பாடல் பாடியிருக்கும் ஜெயச்சந்திரன், தமிழில் ஏராளமான ஹிட் பாடல்களை பாடியுள்ளார்.
ஜெயச்சந்திரனின் புகழ் பெற்ற பாடல்கள்
பாடகர் யேசுதாஸ் மற்றும் ஜெயச்சந்திரன் ஆகிய இருவரின் குரலும் ஒரே மாதிரியாக இருக்கும். இவர் இருவரின் பாடல்களையும் கேட்கையில் யார் பாடியது என்பதை கண்டறிவது சற்று கடினம்தான். அந்த வகையில் யேசுதாஸ் போல் சிறந்த மெலடி பாடகராகவும், எக்ஸ்பிரஷன் சிங்கர் என பெயர் பெற்றவராகவும் ஜெயச்சந்திரன் உள்ளார்.
விஜயகாந்தின் சிறந்த மெலடிகளாக இருந்து வரும் ராசாத்தி உன்ன, காத்திருந்து காத்திருந்து, மயங்கினேன் சொல்ல தயங்கினேன், பூவே எடுத்து ஒரு மாலை சூரக்கோட்டை சிங்கக்குட்டி படத்தில் காளிதாசன் கண்ணதாசன், அந்த ஏழு நாள்கள் படத்தில் கவிதை அரங்கேறும் நேரம், கடலோர கவிதைகள் படத்தில் கொடியிலே மல்லிகைப்பூ என சொல்லிக்கொண்டே போகலாம்.
விஜய், அஜித் போன்றோருக்கும் ஜெயச்சந்திரன் பாடல் பாடியுள்ளார். பூவே உனக்காக படத்தில் விஜய்யின் சிறந்த மெலடியாக இருந்து வரும் சொல்லாமலே யார் பார்த்தது, நிலாவே வா படத்தில் கடலம்மா போன்ற பாடல்களும் அஜித்குமாரின் அவள் வருவாளா படத்தில் இது காதலின் சங்கீதம், கிரீடம் படத்தில் கனவெல்லாம் பாடல் போன்றவற்றை பாடியுள்ளார்.
ஜெயச்சந்திரன் பெற்ற விருதுகள்
மலையாள படமான ஸ்ரீ நாரயண குரு என்ற படத்துக்காக சிறந்த பாடகர் தேசிய விருதை வென்றார். அத்துடன் கேரளா அரசின் விருது உள்பட பல்வேறு விருதுகளை வென்றுள்ளார்.
கிழக்கு சீமையிலே படத்தில் இடம்பிடித்த கத்தாழம் காட்டுவழி பாடலுக்காக தமிழ்நாடு அரசின் சிறந்த பாடகர் விருதை வென்றார். அத்துடன் தமிழ்நாடு அரசு இவருக்கு கலைமாமணி விருது வழங்கி கெளரவிக்கப்பட்டுள்ளது.