P. Susheela: ‘அள்ளி அள்ளி கொடுத்ததால தமிழ் பெண்ணாவே மாறிட்டேன்..’ உருக்கமாக பேசிய பாடகி பி. சுசீலா
P. Susheela: தமிழ் மக்கள் தனக்கு அள்ளி அள்ளி கொடுத்து பார்த்துக் கொண்டதால் தான் தமிழ் பெண்ணாகவே மாறிவிட்டதாக பாடகி பி. சுசீலா உருக்கமாக பேசியுள்ளார்.

P.Susheela: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பிறந்தநாளைக் கொண்டாடும் விதமாக நேற்று மக்கள் முதல்வரின் மனிதநேய விழா எனும் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சாதனை பெண்களை கொண்டாடும் விதமாக சூரிய மகள் 2025 எனும் விருது வழங்கப்பட்டது.
இதனை முன்னிட்டு பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் பெண்களை கௌரவப்படுத்தும் விதமாக அவர்கள் சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்பட்டனர். இந்த நிகழ்ச்சியில் பிரபல பாடகி பி. சுசீலாவிற்கும் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.
பெண்கள் வேலைய செஞ்சிட்டே இருக்கணும்
அந்த நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய பி. சுசீலா, "பெண்கள் சாதிக்கறதுன்னு எதுவும் இருக்காது. பெண்களின் வெற்றிக்கு பின்னால ஆண்கள் இருப்பாங்க. பெண்கள் சமைக்குறது முதல் கடைசியில சாகுற வரை பெண்கள் மட்டும் தான். அவங்க தங்களோட வேலைய செஞ்சிட்டே இருக்கணும் என்றார்.
தமிழ் மக்களுள் ஒருத்தி
தமிழ் மக்கள் ரொம்ப நல்லவங்க. எல்லாரும் எது வேணும்னாலும் உடனே செய்வாங்க. அதுக்கு உதாரணமா என்ன தான் சொல்லனும். எனக்கு இருக்க இடம் கொடுத்தாங்க. பாட்டுக்கு பாட்டு கொடுத்தாங்க. நிறைய பரிசுகள் கொடுத்தாங்க. என்ன தமிழ் மக்களுள் ஒருத்தியாவே பண்ணிட்டாங்க. நான் முக்கியமா என்ன சொல்லணும்ன்னா நான் தமிழ் பேசுறேன்.
அவார்டு எல்லாம் கண்ணுல ஒத்திக்க தான்
ஏவிஎம் செட்டியார் அவர்கள் எனக்கு தமிழ் பிச்சை கொடுத்தார். அதை என்னால மறக்கவே முடியாது. எனக்கு அவார்ட்ஸ் எல்லாம் கொடுக்குறாங்க. அதெல்லாம் கண்ணுல ஒத்திக்க தான். எதுவா இருந்தாலும் அதுல பெண்கள் தான் சாதிக்கிறாங்க. ஆண் இல்லாம பெண் இல்ல. பெண் இல்லாம ஆண் இல்ல. ரெண்டு பேரும் சேர்ந்து சாதிக்கணும். அப்போ தான் உலகம் செழிப்பா இருக்கும் என்றார்.
பின், அவர் முதலில் பாடல் பாட மறுத்தாலும் சொல்ல சொல்ல இனிக்குதடா முருகா பாடலை பாடினார். இவர் பேசும்போது ஒரு பெண்மனி குறுக்கிட்டுக் கொண்டே இருந்து விரைவில் பேசி முடிக்குமாறு அறிவுறுத்தினார்.
பி. சுசீலா பற்றி
தமிழ் சினிமாவில் தன் காந்தக் குரலால் இன்று வரை கோலோச்சி வரும் பாடகி பி. சுசீலா. சுமார் 89 வயது ஆகும் இவர், இன்றும் பொது விழாக்களில் பங்கேற்று பேசி, பாடி மக்களை உற்சாகப்படுத்தி தான் வருகிறார். இவர் தமிழ் மட்டுமின்றி 9 மொழிகளில் சுமார் 25 ஆயிரத்திற்கும் அதிகமான பாடல்களை பாடியவர். இதன் மூலம் இந்திய துணை கண்டத்தில் அதிக பாடல்களை பாடிய பாடகியாக இன்றும் நிலைத்து நிற்கிறார். இவர் கின்னஸ் ரெக்கார்டுதளை எல்லாம் செய்துள்ளார். மேலும், மாநில, மத்திய அரசுகளின் விருதைப் பெற்றுள்ளார்.
தற்போது வயது முதிர்வு காரணமாக, சில அசௌகரியங்களை சந்தித்து வருகிறார்.
