ஓடிடி, சமூக வலைதளங்களில் ஆபாச படங்களை வெளியிட தடை கோரிய மனு: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்
ஓடிடி மற்றும் சமூக ஊடக தளங்களில் ஆபாச படங்களையும் வீடியோக்களையும் ஸ்ட்ரீமிங் செய்வதைத் தடை செய்வது தொடர்பாக, மத்திய அரசு மற்றும் ஓடிடி, சமூக வலைதலஙக்ள் விளக்கமளிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.

ஓடிடி மற்றும் சமூக ஊடக தளங்களில் ஆபாச படங்களையும் வீடியோக்களையும் ஸ்ட்ரீமிங் செய்வதைத் தடை செய்ய தகுந்த நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு மீதான விசாரணை இன்று ஏப்ரல் 28 ஆம் தேதி நடந்த போது, உச்ச நீதிமன்றம் மத்திய அரசு மற்றும் பிற சமூக மற்றும் ஓடிடி தளங்கள் இதுகுறித்து பதிலளிக்குமாறு கேட்டுள்ளது.
பி.டி.ஐ அறிக்கையின்படி, நீதிபதிகள் பி.ஆர்.கவாய் மற்றும் அகஸ்டின் ஜார்ஜ் மாசிஹ் ஆகியோர் அடங்கிய பெஞ்ச், இந்த மனு ஒரு முக்கியமான கவலையை எழுப்புகிறது என்றும், இந்த பிரச்சினை நிர்வாக அல்லது சட்டமன்றத்தின் எல்லைக்குள் உள்ளது என்றும் கூறியது.
விதிமுறைகள் அமல்
மத்திய அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தாவிடம், மனுவில் எழுப்பப்பட்டுள்ள பிரச்சினை குறித்து அரசு ஏதாவது செய்ய வேண்டும் என்று பெஞ்ச் கூறியது. அதற்கு பதிலளித்த துஷார் மேத்தா, இது தொடர்பாக சில விதிமுறைகள் நடைமுறையில் இருப்பதாகவும், இன்னும் சில பரிசீலனையில் இருப்பதாகவும் கூறினார்.
மனுவில் குறிப்பிட்டிருப்பது என்ன?
ஓடிடி மற்றும் சமூக ஊடக தளங்களில் பாலியல் ரீதியான வெளிப்படையான புகைப்படங்களாயோ, வீடியோக்களையோ தடை செய்ய தேசிய உள்ளடக்க கட்டுப்பாட்டு ஆணையத்தை அமைக்க வழிகாட்டுதல்களைக் கோரி ஐந்து மனுதாரர்கள் தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் விசாரித்தது.
சமூக ஊடக தளங்களில் பக்கங்கள் அல்லது சுயவிவரங்கள் உள்ளன, அவை எந்த பில்டர்களும் இல்லாமல் ஆபாச விஷயங்களை பரப்புகின்றன என்றும், பல்வேறு ஓடிடி தளங்கள் குழந்தைகள் ஆபாசத்தின் சாத்தியமான கூறுகளைக் கொண்ட உள்ளடக்கத்தை ஸ்ட்ரீமிங் செய்கின்றன என்றும் மனுவில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
குற்ற விகிதம் அதிகரிக்க வாய்ப்பு
"இதுபோன்ற பாலியல் பிறழ்வான இடுகைகள் இளைஞர்கள், குழந்தைகள் மற்றும் பெரியவர்களின் மனதை மாசுபடுத்துகின்றன, இது வக்கிரமான மற்றும் இயற்கைக்கு மாறான பாலியல் போக்குகளுக்கு வழிவகுக்கிறது, இதனால் குற்ற விகிதம் அதிகரிக்க வழிவகுக்கிறது" என்று மனுவை மேற்கோளிட்டுள்ளது.
சரிபார்க்கப்படாவிட்டால், "ஆபாசமான பொருட்களின் கட்டுப்பாடற்ற பரவல் சமூக மதிப்புகள், மன ஆரோக்கியம் மற்றும் பொது பாதுகாப்பு ஆகியவற்றில் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும்" என்று மனுவில் கவலை தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொது ஒழுக்க பாதுகாப்பு
"பொது ஒழுக்கத்தைப் பாதுகாப்பதற்கும், பாதிக்கப்படக்கூடிய மக்களைப் பாதுகாப்பதற்கும், டிஜிட்டல் தளங்கள் மாறுபட்ட நடத்தைக்கான இனப்பெருக்கம் செய்யும் இடமாக மாறாமல் இருப்பதை உறுதி செய்வதற்கும் அரசு தனது அரசியலமைப்பு கடமையை நிலைநிறுத்த வேண்டியது காலத்தின் தேவை" என்று மனுவில் கூறப்பட்டுள்ளது. மனுதாரர்கள் சார்பில் வழக்கறிஞர் விஷ்ணு சங்கர் ஜெயின் ஆஜரானார்.
